சென்னை:
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நலன் குமாரசாமி.
இப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், கருணாகரன், ராமன், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், நிழல்கள் ரவி,யார் கண்ணன், நிவாஸ் ஆதிதன், பி. எல். தேனப்பன்,வித்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், வெறும் ரசிகராக இருப்பது மட்டுமல்லாமல் எம்ஜிஆரைப் போல நல்ல நெறியோடு வாழ முயற்சி செய்கிறார். இந்த நிலையில் எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, எம்ஜிஆர்; இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போகும் ராஜ்கிரணுக்கு, அதே நாள், அதே நேரத்தில் பேரன் கார்த்தி பிறக்க எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறார். எம்.ஜி.ஆரைப் போலவே அன்று பிறந்த பேரன் உள்ளங்காலிலும் ஒரு மச்சம் இருக்க அதனைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். எம்ஜிஆரின் அதே கொள்கைகள் மற்றும் இலட்சியங்களுடன், எம்ஜிஆரின் மறுபிறப்பு என்றெண்ணி அவரைப் போலவே வளர்க்கிறார். தன் பேரன் கார்த்தி வாங்கிய லாட்டரி சீட்டில் ஐம்பதாயிரம் பரிசு விழுந்த போது உழைக்காமல் கிடைக்கும் காசு தேவையில்லை என்று அந்த லாட்டரி சீட்டைக் கிழிக்கும் அளவிற்கு நேர்மையானவராக இருக்கிறார் ராஜ்கிரண்.
தன்னுடைய பேரன் எம்ஜிஆரை போலவே நல்லவனாகவும், வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லி அவரை வளர்க்கிறார். ஆனால் கார்த்தி தாத்தாவின் விருப்பப்படி புலியூர் கோட்டம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று வலம் வருகிறார். ராஜ்கிரண் தனது பேரனை ஒரு எம்ஜிஆர் என்று நம்பினாலும் பேரனோ நம்பியார் ரசிகராக எதிர்மறை சிந்தனைகளோடு அனைவரையும் ஏமாற்றுகின்ற ஊழல் இன்ஸ்பெக்டராக மாறுகிறார். எதை எல்லாம் செய்யக்கூடாதோ அவை அனைத்தையும் செய்வதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து மக்களுக்காக போராடுபவர்களை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார். சத்யராஜுடன் இணைந்து மக்கள் விரோத பணிகளுக்குத் துணை போகும், தனது பேரன் இப்படி வழி மாறியதில் மனம் நொந்துபோன ராஜ்கிரண் வேதனைப்பட்டு ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார்.
இந்த நேரத்தில் சத்யராஜ் நடத்தி வரும் ஒரு கெமிக்கல் ஆலையினால் அந்த பகுதி மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களை எல்லாம் இணையதளம் சமூக வலைத்தளங்கள் மூலமாக மஞ்சள் முகம் என்ற ஒரு அமைப்பு திரட்டி ஒருங்கிணைத்து வருகிறது. இந்த மஞ்சள் முகம் அமைப்பினர் அனைவரையும் கைது செய்து அவர்களைப் போலியான என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல சத்யராஜ் முயற்சிக்கும்போது, யாரும் எதிர்பாராத விதத்தில் கார்த்தியின் உடலில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவரை அறியாமல் அவருக்குள் எம்ஜிஆரின் ஆவி அல்லது அருள் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவிக்கிறது. அதாவது கார்த்தி மீது சாமி வந்து மலையேறுவது போல், எம்ஜிஆர் அருள் வந்து மலையேறுகிறது. இதற்குப் பின்பு கார்த்தியின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் பிறகு கார்த்தி எம்ஜிஆர் ஆக மாறினாரா? மஞ்சள் முகம் அமைப்பினருக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த ‘வா வாத்தியார்’ என்ற படத்தின் மீதிக் கதை.
ராமேஸ்வரன்,ராமச்சந்திரன் என்று இரண்டு முகம் காட்டி கதாநாயகனக நடித்திருக்கும் கார்த்தி அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் எதிர்மறைக் குணச்சித்திரத்தை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். எம்ஜிஆரின் மறுபிறப்பு போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரைப் போலவே நிறைய ஸ்டைல்கள் செய்து மெனக்கெட்டிருப்பது நன்றாக தெரிகிறது. அவரது நடை உடை பாவனைகளில் பல மாற்றங்கள் செய்து எம்ஜியார் ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். எம்ஜிஆராக இல்லாமல் நம்பியாராக இருக்கிறேன் என்பதை ஒரு காட்சி மூலமாக அவர் நம்பியாராக மாறி செய்யும் பல வேலைகளும் ரசிக்க வைக்கின்றன.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்திஷெட்டி கவர்ச்சிகாட்டி இளைஞர்களை ஈர்க்கிறார். அவரது இளமையும் தொடை அழகும் படம் பார்ப்பவர்களுக்கு நிறைவைக் கொடுக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை.
எம்.ஜி.ஆர் ரசிகராக பூமிபிச்சை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், ஒரு முரட்டுத்தனமான ரசிகராக அனைவரையும் கவர்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ், மீண்டும் தனது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் தெத்துப்பல் காட்டி வித்தியாசத்தை வெளிப்படுத்தி, கொடுத்த வேலையைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்.
எம்ஜிஆர் கெட்டப்பில் பாபுவாக வரும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன்,எதிர்பாராத தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹா என அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
சந்தோஷ்நாராயணன் தனது இசை மூலம் படத்தின் தரத்தை உயர்த்த பல இடங்களில் நேர்த்தியாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து பணியாற்றி சண்டைக் காட்சிகள், இரவு நேரக் காட்சிகள், வண்ணமயமான ஒளி அமைப்பு ஆகியனவற்றை சிறப்பாக படமாக்கியதற்கு அவரை பாராட்டலாம்.
கதை எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, எம்ஜிஆரின் பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பாணியில் படத்தைக் கொடுத்திருக்கிறார். கார்த்தி ரசிகர்களையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் வைத்து, அவர்கள் அனைவரையும் ரசிக்கும்படியாக இந்தப் படத்தைக் கொடுத்து வியக்க வைத்துள்ளார். எம்ஜிஆரை போல மாறுவது.. அடிக்கடி குதிரையில் வருவது.. இன்றைய அரசியலை படம் பிடித்து காட்டி இருப்பது..போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருக்கிறது.
மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ படம் கண்டிப்பாக வெற்றி வாகை சூடும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.