
சென்னை:
கிஷோர், சுபத்ரா ,ஜார்ஜ் மரியான் ,ஹரிஷ் உத்தமன்,ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா வர்ஷினி ஆகியோர் நடித்துள்ள படம்தான் “மெல்லிசை”. இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் திரவ். பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரமாகவும் நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி வந்திருந்த கிஷோர், இப்படத்தில் ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கிஷோர் ஒரு உடற்கல்வி ஆசிரியராகத் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சுபத்ரா ராபர்ட் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஜஸ்வந்த் மணிகண்டன் மற்றும் எட்டு வயது மகள் தனன்யா வர்ஷினி இவர்களும் அதே பள்ளியில் படித்து வருகிறார்கள். நல்ல பணியில் இருந்தாலும் கிஷோருக்கு இசைத்துறையில் ஆர்வம் அதிகம் என்பதால் ஒரு சிறந்த பாடகராக வரவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இந்த சூழலில் தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேற முயற்சி செய்கிறார். அதன்படி தனியாக சென்று தொலைகாட்சியில் நடந்த பாடல் போட்டியில் கலந்து கொள்கிறார் கிஷோர். அந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு மேலே வருகிறார். இது அந்த பள்ளியின் முதல்வருக்குப் பிடிக்கவில்லை என்பதால் கிஷோரை வேலையை விட்டு நீக்குகிறார்.
அதனால் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு வேலையை விடக்கூடாது என்கின்ற சூழலில் தவியாய் தவிக்கிறார் கிஷோர். இருந்தாலும் அவர் தனது லட்சியப் பாதையில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் போது, குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லாததாலும், எதிர்பார்க்காத சில சம்பவங்களாலும் இரண்டு குழந்தைகளும் அனாதையாகும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு குடும்பத்தில் பல உணர்வுப் போராட்டங்கள் நடக்கின்றன. இறுதியில் கிஷோரின்பாடகராகும் கனவு நிறைவேறியதா? இல்லையா?என்பதுதான் ‘மெல்லிசை’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கிஷோர் படம் முழுக்கவே அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட கதாபாத்திரத்தை விட்டு விலகாமல் அதனை சரியாக கொண்டு சென்று வாழ்ந்து இருக்கிறார். அன்பான குடும்பத்தலைவர்,பொறுப்பான தந்தை, இசையை உயிராக நினைத்து ஒரு உன்னதமான கதாபாத்திரத்தில் மெல்லிய இதயம் உள்ளவராக கிஷோர் தன் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
இவரின் மனைவியாக நடித்த சுபத்ரா ராபர்ட், பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தாலும், இந்த படத்தில் கிஷோரின் மனைவியாக படம் முழுவதுமாக வந்து, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக இயல்பாக நடித்து இருக்கிறார்..
கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவரும் இயல்பாக நடித்து கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி இப்படத்தின் கதைகேற்றவாறு வெளிப்புறக் காட்சிகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மிக சிறப்பாக ப்படமாக்கி இருக்கிறார்.
சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார்.இசையை உணர வைக்கும் படம் என்பதால் அவர் கூடுதல் பொறுப்புடன் அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
ஒரு சராசரி மனிதன் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியத்தை மனதில் எடுத்துக் கொண்டு அதை எப்படி அடைய வேண்டும் என்பதை ஒரு எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றை உணர்ந்து செல்லக் கூடிய வாழ்க்கைப் பயணத்தை மையக்கதையாக வைத்துக் கொண்டு, மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து இயக்குநர் திரவ் அனைவரும் ரசிக்கும்படி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராடங்களையும், வேதனைகளையும் கடந்து செல்வதை மனதுக்கு நெருக்கமாக திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர் திரவ்.
மொத்தத்தில், ‘மெல்லிசை’ ரசிகர்கள் மனதை கவரும்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.