தாய்க்கிழவி – திரைப்பட விமர்சனம்!

184

சென்னை:

ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியன், ரைச்சல் ரபேக்கா, முத்துலட்சுமி, நிரோஷா மற்றும் அபிநயா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “தாய் கிழவி”. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரு கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த, தன் கணவனை இழந்த மூதாட்டி ராதிகா சரத்குமார், கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அவருக்கு அருள்தாஸ், சிங்கம்புலி,பாலசரவணன் ஆகிய மூன்று மகன்களும், ஒரு மகள் ரேச்சல் ரெபக்காவும் இருக்கின்றனர். இந்த சூழலில்  ராதிகா தன் கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குப் பணம் கொடுத்து முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருக்கிறார். ஊரே அஞ்சும் அளவுக்கு முரட்டுத்தனம் மற்றும் மிகவும் கறாரானவராக யாருக்கும் அஞ்சாத அவர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது அவரது போக்காக இருக்கிறது. ராதிகா சேர்த்து வைத்த சொத்துக்காகவும் பணத்துக்காகவும் அவரது மகன்கள் அலைவதால்,  இதனால் கோபமடந்த ராதிகா அவர்களை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார். இதனால் இவர்களுக்கும் தாய் ராதிகாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. அவரது மருமகன் முத்துக்குமார் தனக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையில் மீதமுள்ள 3 சவரன் நகையைக் கொடுக்கும்படி ராதிகாவிடம் சண்டை போடுகிறார்.

இதனல் கோபம் அடைந்த ராதிகா எதற்கும் உதவாத மருமகனை விரட்டிவிட்டு, தனது மகள் மற்றும் பேரனை தன்னோடு வசிக்க வைத்து விடுகிறார். இந்த சமயத்தில் ஊரிருள்ள யாருக்கும் அஞ்சாமல் வலம் வந்துக் கொண்டிருக்கும் ராதிகாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து ஒரு நாள் படுக்கையில் விழுகிறார் . பக்கவாதம் போல் பேச்சு மூச்சில்லாமல் ஒரு கை மட்டும் அசைகின்ற சூழ் நிலை ஏற்படுகிறது. இந்த விஷயத்தைக்  கேட்டு ஊரே மகிழ்ச்சியில் ராதிகா எப்போது இறப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தாய்க்கிழவியிடம் 160 பவுன் தங்க நகை இருப்பதாக தகவல் கேட்டு அவரது மூன்று மகன்கள் எப்படியும் கிழவி இறந்தால் அந்த நகைகளை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர். தாய் கிழவி ராதிகாவை எப்படியாவது  பேச வைத்து அவரிடம் உள்ள நகை ரகசியத்தை அறிந்து கொள்ள மகன்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகாவிடம் உள்ள அந்த நகை அவர்களுக்கு கிடைத்ததா? தாய் கிழவி ராதிகாவின் உடல்நிலை என்ன ஆனது? என்பதே ’தாய் கிழவி’ படத்தின் மீதிக் கதை.

தாய்க்கிழவியாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது. பல படங்களில்.நடிப்பில் அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்தவர் என்றாலும் இதுவரை ஏற்காத தண்டட்டி கிழவி கதாபாத்திரம் ஏற்று அதை அச்சு அசலாக வெளிப்படுத்தி அமோக வரவேற்புப் பெற்று அசத்தி இருக்கிறார். தனது கையில் சுருட்டைப் புகைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டமான நடை நடந்து கந்து வட்டிக்காரனைப் போல வட்டி வசூல் செய்யும் அழகே தனி. தனது தோற்றத்தாலும் உடல் மொழியாலும், ஒவ்வொரு அசைவிலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து படம் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

ராதிகாவின் மகன்களாக ஆட்டோ ஓட்டுபவராக வரும் அருள்தாஸ், பூக்கடை வைத்திருக்கும் பால சரவணன், உப்பிலியான் சவுண்ட் சர்வீஸ் வைத்திருக்கும் கமல் ரசிகராக சிங்கம்புலி என மூவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பின் மூலம்  ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இந்த கதைக்கேற்றவாறு சரியான முறையில் பயணித்து இருக்கிறது.

மதுரை மாவட்ட கிராமங்களின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை நம் கண்முன் நிறுத்திக்  காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார்  .ஒவ்வொரு காட்சியிலும் அந்த மண்ணும் மனிதர்களும் அழகாகப் பதிவு செய்து இருப்பது மிக சிறப்பு.

நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் கருவை புரிந்து கொண்டு இதுதான் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கதை என்பதை முடிவு செய்து தயாரிப்பாளராக மாறி, சினிமாத்தனம் இல்லாமல் தான் சொல்ல வந்த கருத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் எப்படி சொல்ல எண்ணினாரோ அப்படியே சிறப்பாக திரைக்கதை  அமைக்க வைத்து, இந்த படத்திற்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் முதல் படத்திலேயே ஒரு முதிர்ச்சியான  கிராமத்து கதையை தேர்வு செய்து, கல்வி,  பெண்களுக்கு சேமிப்பு, தைரியம் போன்றவைகள்மிகுந்த  தன்னம்பிக்கையைத் கொடுக்கும் என்பதையும்,  கிராம மக்களின் வாழ்வியலில், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.

மொத்தத்தில், ‘தாய் கிழவி’ துணிவுள்ள கிழவி.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.