’வடம்’ திரைப்பட விமர்சனம்!

43

சென்னை:

தமிழ் திரையுலகில் ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக கொண்ட படங்கள் நிறைய வந்திருந்தாலும் மஞ்சுவிரட்டை அடிப்படையாக கொண்ட படங்கள் வந்ததில்லை. ஆனால் அந்த குறையை போக்கும் விதத்தில் வந்திருக்கும் படம்தான் ‘வடம்’.

இப்படத்தில் கதாநாயகனாக விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன், தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

அந்த ஊரில் பெரிய மனிதராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நரேன் . அனைத்து உயிர்களிடத்தில் அன்பு காட்டுபவர். சிறிதும் கருணை இல்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருபவரான அவரது மகன் விமலும் தந்தையைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவர். இந்த சூழலில் பாண்டி முனி என்ற மஞ்சுவிரட்டு காளையை வளர்த்துவருகிறார் விமல். அடிமாட்டுக்காக போயிருக்க வேண்டிய அந்த  காளையை ஆசையோடும் அன்போடும் வளர்த்ததால் விமலும் – பாண்டி முனியும் அண்ணன் தம்பி போல பாசம் கொண்டவராக இருக்கிறார். விமலும் யாருக்கும் அடங்காமல் அடிதடி செய்யும் வாலிபனாக வலம் வருகிறார்.அவர் வளர்க்கும் பாண்டி முனி காளையும் வீரத்துக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் விமலை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்க முயலும் எதிரிகளை அடித்து வீழ்த்துகிறார். மறுபக்கம், விமலின் வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.

இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் விமல். இந்த சூழ்நிலையில் கதாநாயகி சனஷ்கா ஸ்ரீ, அவர் வளர்க்கும் காளைக்கு மஞ்சுவிரட்டு பயிற்சி அளிக்குமாறு விமலிடம் வேண்டுகிறார். முதலில் மறுத்த விமல் பிறகு சனஷ்கா ஸ்ரீயின் காளைக்கு பயிற்சி கொடுக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பல வருடங்களாக மஞ்சு விரட்டு போட்டியில் முதல் பரிசை பெற்று விமலுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பாண்டி முனி காளைக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று நோயை குணமாக்கி மீண்டும் மஞ்சு விரட்டு போட்டியில் கலந்துக் கொள்ள தயார் செய்கிறார். ஒருநாள் இரவு, யாருக்கும் தெரியாமல் தனிமையில் பேச விமலை அழைக்கிறார் காதலி சனஷ்கா ஸ்ரீ.  தன் காதலி சனஷ்கா ஸ்ரீயை இரவில் சந்திக்க முற்படும்போது  மதூசூதனின் தம்பி, தனது அடியாட்களுடன் வந்து விமலை கொல்ல  முயலுகிறார். அப்போது அடியாட்கள் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் விமல். இந்த சமயத்தில் காதலி சனஷ்கா ஸ்ரீ. அடியாட்களை விரட்டி அடித்த பிறகு விமலுக்கு அந்த இடத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை செய்கிறார்.  அவர் செய்த அந்த சம்பவத்தால் விமல் நிலைகுலைந்து போகிறார். இறுதியில் அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ. செய்த சம்பவம் என்ன ? அதை எப்படி அவர் எதிர்கொள்கிறார்? என்பதுதான் வடம்’ படத்தின் மீதிக் கதை.

வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் நடித்திருக்கும் விமலின் முறுக்குமீசை தோற்றம், கம்பீரமான வீர நடை என களத்தில் இறங்கிய காளையை ஜெயிக்கவைக்க நெஞ்சு நிமிர்த்தும் கதாபாத்திரம் புதுமையாகவே இருக்கிறது. அந்த கிராமத்தில் வீர வாலிபனாக வலம் வந்து தனக்கான நடிப்புத் திறனை பயன்படுத்தி மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் விமல்.

இப்படத்தின் கதாநாயகியாக வரும் சனஷ்கா ஸ்ரீ, அளவான அழகுடனும், குடும்பப்பாங்கான தோற்றத்துடனும் வலம் வருகிறார். அவர் தனது இன்னொரு பக்கத்தைக் காட்டும்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். அவருக்கு அதிகமான காட்சிகள் இல்லாததால் இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

நட்டி நடராஜ் மஞ்சு விரட்டு போட்டியில் தான் வளர்க்கும் மாட்டின் தோல்வியைக்கூட ஏற்றுக் கொள்ளாத மனம் கொண்டவராக  வந்து வில்லத்தனம் செய்கிறார். சிறிது நேரம் வந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு வலு கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த்துக்கு இந்தப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம்.அதில்  முழுமையான குணச்சித்திர முகம் காட்டி சரியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி,அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் உண்மையான  கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

கதை மாந்தர்களைத் தாண்டி படத்தில் வரும் பிரம்மாண்டமான காளை மாடுகள் இரண்டும்  பார்ப்பவர் மனதில் நிறைவு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு இப்படத்தில் வரும்  மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருப்பது பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

டி.இமான் இசையமைத்துள்ளார். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.

வடமஞ்சு விரட்டு போட்டிகளுக்காக காளையை ஆசையாக வளர்க்கும் நாயகனுக்கும், வட மஞ்சு விரட்டு வெற்றியைக் கெளரவமாக எண்ணும் வில்லனுக்கும் இடையேயான மோதல் கதையை மையமாக வைத்து சொல்லியிருக்கும் இயக்குநர் கேந்திரன், ஒரு சவாலான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு அதைச் சரியாகக் கொடுத்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘வடம்’ மற்றொரு வெற்றிப் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.