சென்னை:
சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் நடித்துள்ள படம்தான் ’நீ ஃபார் எவர்’ . இப்படத்தை அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்கியுள்ளார். ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஏடன் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கதாநாயகன் சுதர்சன் கோவிந்தனின் அம்மா பெற்றோரை மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டு காதல் கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு வந்து வருகிறார். அதற்குப் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரனின் முழுக் கட்டுப்பாட்டில் அம்மாவுடனும், தனது சகோதரியுடனும் இணைந்து குடும்பத்துடன் வளர்கிறார் சுதர்சன் கோவிந்தன். சென்னையில் சக நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்த சுதர்சன் கோவிந்துக்கு உண்மையான காதலர்களுக்கான ஒரு டேட்டிங் ஆப் ஒன்றை கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்படுகிறது. அவர் கண்டுபிடித்த டேட்டிங் ஆப்பிற்கு ‘நீ Forever’ என்று தலைப்பும் வைக்கிறார். காதல் அனுபவமே இல்லாத அவரிடம், இப்படிப்பட்ட ஒரு டேட்டிங் ஆப் மூலம் தனது திட்டத்திற்காக காதலை அனுபவித்து பார்க்க வேண்டும் என்று சுதர்சன் கோவிந்த் ஆசைப்படுகிறார்.
இந்த சூழலில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் கதாநாயகி அர்ச்சனா ரவி, எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி செல்லும்போது, பலரிடமும் சென்று தனது கதைகளை கூறி வருகிறார். ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் நல்லதொரு காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னபோது ஒரு உண்மையான காதலைப் பற்றி அறிய எண்ணுகிறார் அர்ச்சனா.. அதேபோல் காதலர்களுக்கான டேட்டிங் ஆப் மூலம் போலியாக ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள சுதர்சன் கோவிந்த் முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் டேட்டிங் ஆப்பின் மூலம் சுதர்சன் கோவிந்தை சந்தித்து, அவருடன் காதல் நடிப்பில் ஈடுபட்டு, இருவரும் தங்களின் அடையாளங்களைக் கூறிக் கொள்ளாமல் பழக ஆரம்பித்து, ஒரு நல்ல காதல் கதையை உருவாக்குகிறார் அர்ச்சனா. அவர்கள் இருவரும் தங்களது எதிர்கால லட்சியத்திற்காக காதலிப்பதுபோல் நடிக்கின்றனர். இப்படி போலியாக காதலித்த இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் ’நீ ஃபார் எவர்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் சுதர்ஷன் கதைக்கேற்ற நாயகனாக ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆக்ஷன் ஹீரோவுக்கான தகுதியுடன் அந்த கதாபாத்திரத்தை புரிந்துக் கொண்டு ஜொலித்திருக்கிறார். காதலில் விழும்போதும் பிரிவில் தவிக்கும் போதும் குடும்பத்தினரிடம் பாசத்தில் உருகும் போதும் தனக்கான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும், ஓரளவுக்குதான் பயன்படுத்தி உள்ளார்.
அர்ச்சனா ரவி, தான் எழுதும் கதைக்காக பொய்யாக சுதர்சனை காதலிக்க தொடங்குவதும், அந்தக் காதல் உண்மையாகவே மாறும்போது அவருடைய நடிப்பு, கதைக்கு தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பாசத்துடன் காதலில் உருகுவதும் நம் மனதை நெகிழ வைக்கிறது.
கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வினி ஹேம்நாத்தின் மென்மையான இசையால் நம்மை ரசிக்கும்படி செய்துள்ளார். பின்னணி இசை கவரும்படி இல்லை.
ராஜா பட்டாச்சாரியின் ஒளிப்பதிவில் சென்னை மற்றும் பொள்ளாச்சியின் இயற்கை எழில் மிகுந்த அழகை கண்கவர் வகையில் பதிவு செய்து இருக்கிறார்.
காதல் மீது நாட்டம் இல்லாத இருவர்களிடம் காதல் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி. இருந்தாலும் காதலை மிக நுணுக்கமாக கையாண்டு அதனை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். மேலும் சில அழுத்தமான காட்சிகளை உருவாக்கி காட்சிபடுத்தி இருந்தால் இந்தப் படம் ரசிக்கும்படி இருந்து இருக்கும்.
மொத்தத்தில் ’நீ ஃபார் எவர்’ இளம் சமுதாயத்தை ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.