‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர் விமர்சனம்!

18

சென்னை:

விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இணையத் தொடர்தான் ‘முத்து என்கிற காட்டான்’.

பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரு மலைக்கிராமப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முத்துக்குமார், சிங்கம்புலி உள்ளிட்ட சில காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த மலை கிராம பகுதியில் எந்தவித வழக்குகளும் இல்லாததால் அந்த காவல் நிலையத்தை மூடிவிட  காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள் இந்த சூழலில் அங்குள்ள காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு காட்டில் பெரிய பாறைகளுக்கு இடையே ஒரு தலை வெட்டப்பட்டு அந்தப் பாறையில் கிடக்கிறது.  அங்கு ஆடு மேய்க்க சென்ற ஒருவன் அந்த தலையை பார்த்ததும் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்ல அங்கு வந்த காவலர்கள் தலையை கண்டவுடன் அதிர்ச்சி அடைகிறார்கள்.  வெட்டப்பட்ட தலையை கைப்பற்றி காவல்துறையினர் அந்த தலைக்கு ஏற்ற உடலை தேடும்போது, அந்த தலைக்கு  அருகில் ஒரு கடிதமும், பணமும் காவல்துறை கைப்பற்றுகிறது.  அந்த கடிதத்தில் “என் தலையை அடக்கம் செய்துவிட்டு இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று புரியாமல் கொலை செய்யப்பட்டது யார் என்பதை விசாரிக்கும் போது விஜய் சேதுபதியின் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது.  அதன்பிறகு விஜய் சேதுபதி பற்றி விசாரணை செய்து, தேடுதல் வேட்டையில் இறங்குபவர்கள் மதுரை, கேரளா என்று பயணப்படுகிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் பிளாஷ் பேக் கதைகள் சுவாரசியமாக காவல்துறைக்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் முத்துவின் செயல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு சாதாரண வாட்ச் கடையில் வேலை செய்யும் மனிதனாக தெரியும் முத்து, உள்ளுக்குள் மிகப் பெரிய மனிதநேயத்தை கொண்டவர். தவறுதலாக தங்க கட்டிகள் அடங்கிய பையை மறைக்காமல் நேர்மையாக திருப்பி கொடுக்கும் காட்சியிலும் அவர் யார் ?, எதற்காக இப்படி செய்கிறார் ? ஆகிய கேள்விகளை நம் மனதில் எழுப்பி, அனைத்து அத்தியாயங்களிலும் பரபரப்பான காட்சிகளை உருவாக்கி ரசிக்க வைக்கும் இந்த இணைய தொடர்தான் ‘முத்து என்கிற காட்டான்’.

இந்த கதையில் உள்ள மர்மமும், மனிதநேயமும் கலந்த கதாபாத்திரத்தை, விஜய் சேதுபதியை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்பதை இந்த தொடரில் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சரக்கு வாகன ஓட்டுநராகவும்,  மதுரையில் கண்மணிநடனக் குழுவில் ஆடும் பெண் அவமானப்படுத்தும் போது திடீரென்று உள்ளே நுழைந்து தனது முரட்டுத்தனத்தைக் காண்பிக்கும் போதும், ஒரு ஓட்டல் அதிபரிடம் தான் ஏழு கொலை செய்தவர் என்று கூறும் போதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.தனது இயல்பான நடிப்பினால் அத்தனை கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து இத்தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில் சுமந்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியைப் போலவே இதில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி,  பாலாஜி சக்திவேல், கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ஆகியோரும் தாங்கள் ஏற்று நடித்த  கதாபாத்திரத்தில் குறை சொல்ல முடியாத அளவிற்கு அதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் உணர்வுகளுக்கேற்றவாறு அதன் பின்புலக் காட்சிகளை வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இந்த தொடரின் போக்கை அறிந்து அதன் தன்மையை மேலும் உயர்த்தும் வகையில் இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் மணிகண்டன் இந்த தொடரின் கதையை மிகச் சிறப்பாக கையாண்டு ஒவ்வொரு காட்சியையும் தனித்துவமாக உருவாக்கி உயிரோட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். தனது வழக்கமான பாணியில் எளியவர்களின் வாழ்க்கை முறையையும், அதில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிற இடமும் முடிகிற இடமும் முக்கியம் என்பதை உணர்ந்து மாறுபட்ட  திரைக்கதை அமைத்து, அதற்கேற்றவாறு சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

மொத்தத்தில்,  ‘முத்து என்கிற காட்டான்’  ஒரு சுவாரசியமான ரசிக்கக் கூடிய இணையத் தொடர்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.