சென்னை:
ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் ‘ஃபைவ் ஸ்டார்’ கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீ செந்தில்.
இப்படத்தில் பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ,அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சென்னைக்கு அருகில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் 500 குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இப்படத்தின் கதை தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் அனைவரும் இணைந்து புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனந்தநாக்- அபர்ணதி தம்பதியின் 4 வயது சிறுமி மித்ரா காணாமல் போகிறாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் அந்த குடியிருப்புக்கு வந்து விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணை தாமதமாகும் சமயத்தில் கமிஷனர் இவருக்கு உதவியாக பவானி ஸ்ரீ என்ற உதவி கமிஷனரையும் அனுப்புகிறார். இருவரும் இணைந்து காணாமல் போன நாலு வயது சிறுமி மித்ராவை தேட ஆரம்பிக்கின்றனர்.
இந்த விசாரணையை தீவிரமாக இருவரும் அந்த குழந்தையை தேடும் சமயத்தில் காணாமல் போன அந்த குழந்தை கொலை செய்யப்பட்டு அந்த குடியிருப்பின் அருகிலேயே ஒரு சூட்கேசில் பிணமாக கிடைக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரத்தும், பவானி ஸ்ரீ இருவரும் இந்த கொலையை யார் செய்தது என்று புரியாமல் மேலும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர். இந்த சூழலில் அதே குடியிருப்பில் இன்னொரு பெண்ணும் கொலை செய்யப்படுகிறார். இதனால் பரத்துக்கும் பவானிஸ்ரீயும் ஒன்றும் புரியாமல் இந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்த சூழலில் அதே குடியிருப்பில் வசிக்கும் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து பரத் விசாரணை செய்யும்போது நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞரான பிரகாஷ்ராஜ் எந்தவித ஆதாரமும் அஜய் மீது இல்லாததால் அவரை காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இருவரும் வேறு கோணத்தில் கொலை செய்த கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார்கள் . இப்படிப்பட்ட விசாரணை வேட்டையில் தீவிரமாக இறங்கும்போது வெவ்வேறு மர்மங்கள் வெளி வருகின்றன. இறுதியில் யார் உண்மையான கொலையாளி? இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதை பரபரப்பான முறையில், விறுவிறுப்பாக அதிர்ச்சியூட்டும் வகையில் சொல்லி இருக்கும் படம்தான் “‘காளிதாஸ் 2’
இந்தப் படத்தில் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டராக காளிதாஸ் கதாபாத்திரத்தில் வரும் பரத் அந்தப் பாத்திரத்திற்குத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் என மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார் . போலீஸ் துறையில் தனக்கு ஏற்படும் சிக்கல்களையும், உயர் போலீஸ் அதிகாரியின் அழுத்தங்களையும், அதனால் ஏற்படும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் மர்மக் கொலைகளைப்பற்றியும் மிக சிறப்பாக கையாண்டு, அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பரத்.
ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகன் அஜய்கார்த்தி. அவர் அறிமுக நடிகர் என்றாலும் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியான முகத்தோடு அதிகம் பேசாமல் கண்களிலும் உடல்மொழியிலும் அற்புதமாக நடித்து படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
நீண்டஇடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் ‘பூவே உனக்காக’ சங்கீதா.‘ரூப சுந்தரி’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஒவ்வொரு காட்சியிலும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கும் முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டாலும் அதனை தைரியமாக துணிச்சலாக எதிர்கொள்ளும் பெண்ணாக பதவி அதிகாரத்தின் மூலம் அதிரடியாக செயல்பட்டு, பிறகு அவஸ்தைப்படும் காட்சிகளில் யதார்த்தமாக தற்போதுள்ள போலீஸ் பெண் அதிகாரிகளை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பில் அசத்திருக்கிறார்.
அபர்ணதிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கதையின் திருப்பத்தில், அதற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் அனந்தநாக்கும் தனது கதாப்பாத்திரத்தில் குறை வைக்கவில்லை.
பிரகாஷ் ராஜ் வழக்கறிஞர் நட்ராஜாவாகவும், கிஷோர் ‘பாண்டியா’ என்ற ஆட்டுக் கறி வெட்டும் தொழிலாளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, சென்னையையே புதிதாகப் பார்க்கிற மாதிரி காட்டி, ஒரே அடுக்குமாடி குடியிருப்புக்குள் கதை நடந்தாலும் காட்சிக்கு காட்சி வேறுபட்டு நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை மிக முக்கியம்.என்பதால் அதை உணர்ந்து உழைத்து இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், பாலியல் தொல்லை.. கொலை என்ற தினமும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாலியல் குற்றச்சாட்டை சிலர் தவறாக முன் வைப்பதும்.. அதை பயன்படுத்தி நிரபராதியை குற்றவாளி என போலீஸ் கைது செய்வதும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு இந்த படத்தில் நம் நாட்டில் நடக்கும் உண்மை சம்பவத்தையும், ஒரு காவல் அதிகாரி சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும் எதார்த்தமாகப் பதிவு செய்து ரசிகர்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ சஸ்பென்ஸ் திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.