சென்னை:
தனுஷ், மமிதா பைஜு. கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “கர”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா.
தற்போது வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
1990-ஆம் ஆண்டில் இப்படத்தின் கதை பெருமளவு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பதாக உருவாகி இருக்கிறது. தன்னுடைய சொந்த வீட்டிலேயே தந்தை சேமித்து வைத்திருந்த பணத்தை திருடி கொண்டு வெளியேறுகிறார் தனுஷ். பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் திருடனாக இருக்கும் நாயகன் தனுஷ், தன் காதலி மமிதாபைஜுவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக அந்தத் திருட்டு தொழிலை விட்டுவிட நினைக்கிறார். ”இது தான் நான் செய்யும் கடைசித் திருட்டு. இதற்குப்பிறகு திருட மாட்டேன். திருந்தி வாழ்வேன்” என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு தனுஷ், தனது நண்பன் பிருத்வி பாண்டியராஜனுடன் சேர்ந்து, பூட்டியிருக்கும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ வீட்டின் பூட்டை உடைத்து, அங்குள்ள பணம் மற்றும் தங்க நகைகளை திருடுவதற்காக உள்ளே நுழைகிறார்கள். அந்த சமயத்தில் எம்.எல்.ஏ தன் குடும்பத்துடனும், தனது அடியட்களுடனும் வீடு திரும்ப, இதைப் பார்த்து நண்பன் பிருத்வி பாண்டியராஜன் தப்பிச் சென்றுவிட, தனுஷ் மட்டும் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்.
அதன் பிறகு காவல்துறை தனுஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை அதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடு மூத்த அதிகாரிகளிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு மீடியாவில் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனுஷ் மீது செய்யாத பல குற்றங்களையும் சுமத்தி FIR போடுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து தனக்கு நேரவிருக்கும் பேராபத்தை உணரும் தனுஷ் காவல்துறை அதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் அங்குள்ள போலீசார் அனைவரையும் தாக்கிவிட்டு, காவல்நிலையத்திலிருந்து தப்பிக்கிறார். தன்னுடைய காதலியான செல்லி என்ற மமீதாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் உள்ள ரேணுகுண்டா நகரத்தில் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கிறார் தனுஷ். மமிதாவும் அதே ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலையும் செய்து கொண்டிருக்கிறார். அங்கு கடுமையாக உழைத்தாலும் அதிக சம்பளம் இல்லாமல் வறுமை அவர்கள் இருவரையும் வாட்டுகிறது. வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறிச் செல்லலாம் என்ற ஆசையில், இருவரும் இணைந்து சொந்தமாக சிறிய அளவில் உணவகம் ஒன்றை துவங்க முடிவு செய்கிறார்கள்.
அப்போது வங்கி கடன் பெற முயற்சிக்கும் போது, சொத்து ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர்கள் கடன் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் மனம் வெறுத்த தனுஷ் மீண்டும் தன்னுடைய தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் தனது சூழ்நிலையை சொல்லி குடும்ப சொத்தாக இருக்கும் எட்டு ஏக்கர் நிலத்தை விற்று அதில் வரும் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து தனி ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கே தந்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்கெனவே பூர்விக நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து டிராக்டர் வாங்கியிருக்கிறார் என்பதும், அதற்கு வட்டியும், தவணையும் செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. இந்த சூழலில் தனுஷ் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், அதற்கு மாறாக, அவரது தந்தை இறந்துவிடுகிறார்.
தந்தையின் பிணத்தை அடக்கம் செய்ய தனது முன்னோர்கள் புதைக்கப்பட்ட பூர்விக நிலத்திலேயே தந்தையைப் புதைக்க சடங்குகள் செய்யும்போது, வாங்கிய கடனுக்காக நிலத்தை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வருகிறார்கள். தந்தையின் பிணத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து தனுஷை மிரட்டுகிறார்கள். இதனால் அதிர்ந்து போன தனுஷ் வங்கிக்கடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க அதிரடியாக முடிவு செய்கிறார். இந்த இக்கட்டான சூழலில் தனுஷ் வங்கியில் பணத்தை கொள்ளையடித்து நிலத்தின் மீது இருந்த கடனை அடைத்தாரா? அந்த பூர்வீக நிலத்தில் அவரது தந்தையை அடக்கம் செய்தாரா? இல்லையா? என்பதுதான் “கர” படத்தின் மீதிக் கதை.
கரசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இப்படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பொறுப்புள்ள மகனாக, “தந்தையின் சாவுக்கு நான் தான் காரணம். என்னை மன்னித்துவிடு” என்று அம்மாவின் காலில் விழுந்து உருக்கமாகக் கதறும் காட்சிகளில் நம் கண்களை கலங்க வைத்து விடுகிறார். மமிதாவிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சியிலும் நடிப்பை முழுமையாகக் காட்டி அசத்தி இருக்கிறார் தனுஷ்.
கதாநாயகனின் காதல் மனைவி செல்லியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அசல் ராமநாதபுரம் மாவட்ட கிராமத்துப் பெண்ணாக ஒப்பனை செய்து கொண்டு திரையில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
தனுஷின் தந்தையாக கந்தசாமியாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். மாறுபட்ட விதத்தில் ஒப்பனை மட்டுமின்றி மிக மாறுபட்ட நடிப்பையும் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..
யூத் படத்தில் கென் தந்தையாக நடித்த சுராஜ் வெஞ்சாராமூடு இப்படத்தில் தனுஷை துரத்தி பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு திருட்டு வழக்கைத் தீர்த்து புகழடைய வேண்டும் என்று ஏங்கும் காவல்துறை அதிகாரியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, தாய்மாமன் காசி மாயனாக வரும் கருணாஸ், கூட்டாளி முருகேசனாக வரும் பிருத்வி பாண்டியராஜன், வங்கியின் மேலாளர் முத்துச்செல்வனாக வரும் ஜெயராம், வயோதிக விவசாயியாக அடையாளம் காணமுடியாத அளவுக்கு நரைத்த தலைமுடியும் தாடியுமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குத் தகுந்தவாறு நடிப்பை குறைவின்றி நிறைவாக செய்து இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் எளிமையான வார்த்தைகளால் இருந்தாலும் சுமார் ரகம்தான். பின்னணி இசையை காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சி,அங்கு வசிக்கும் மனிதர்களின் வாழ்வியலை அப்படியே பதிவு செய்து, அவ்வளவு அழகாக பிரமாதமாக படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.
விவசாயிகளிடம் கடனை வசூல் செய்ய கெடுபிடிச் செய்யும் அதிகாரிகள், டிராக்டரை பறிமுதல் செய்யும் வங்கிகள்… இவர்களினால் விவசாயிகள் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதை உணர்ந்து இதன் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. வங்கிக் கடன்களால் பாதிக்கப்படும் கிராமத்து மனிதர்களின் துயரங்களை வெளிக்கொண்டு வர வேண்டுமென கடுமையாக உழைத்திருக்கிறார். திருட்டு என்பதையும் தாண்டி, விவசாயிகளின் வேதனையை கண்முன்னே நிறுத்தியதற்காகவே இயக்குனரை பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் “கர” படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
ரேட்டிங்: 4/5.
RADHAPANDIAN.