சென்னை:
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர் தயாரித்திருக்கும் ‘வாரண்ட்’ இணையத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் நடராஜன். எட்டு எபிசோடுகளை கொண்ட ‘வாரண்ட்’ இணையத் தொடர் தமிழ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட் ,அருள்தாஸ் ,நம்ரிதா,அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, வையாபுரி மற்றும் பலர் இந்த “வாரண்ட்” தொடரில் நடித்துள்ளனர்.
இந்த இணைய தொடரின் கதையை பொருத்தவரையில்,
தனது ஒரே மகன் கோட்டை கருப்புசாமி என்கிற பிரசாந்த் பாண்டியராஜனை எப்படியாவது அரசு வேலையில் சேர வைத்து விட வேண்டுமென்று ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி சக்திவேல் ஆசைப்படுகிறார். .தந்தையின் அரசு வேலை கனவுகள் நிறைவேறாமல் போகவே ஒரு கட்டத்தில் காளி வெங்கட் மூலமாக அவரை போலீஸ் வேலைக்கான தேர்வில் எழுத வைக்கிறார். அந்த தேர்வில் வெற்றி பெற்ற பிரசாந்த் பாண்டியராஜன் காவல்துறையில் ஒரு வழியாக திருச்சி பொன்மலை கோட்டை காவல் நிலையத்தில் காவலராகிறார். காவல்துறையின் கம்பீரம் பற்றிய கனவுகளோடு வேலையில் சேரும் அவர் அங்கே இருக்கும் சூழலை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
இன்ஸ்பெக்டர் அருள் தாஸ் மற்றும் சக காவலர்கள் அவரை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல், கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து அவமதித்து வருவதால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் காவல்துறை பணியே வேண்டாம் என்ற முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன்னை அலட்சியமாக பார்த்து அவமானப்படுத்துகிறவர்கள் மத்தியில் தான் யார்? என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட, யாரும் கண்டு கொள்ளாத பழைய ‘கைது வாரண்ட்’ வழக்குகளை விசாரிக்கும் பொறுப்புக்களை பிரசாந்த் பாண்டியராஜ், கையில் எடுக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் மற்றும் ஆத்திரத்தின் காரணமாக, குற்றவாளிகளைப் பிடிக்க அவர் மிகக் கொடூரமான முறையில் கைதிகளை காவல் நிலையத்தில் உள்ள சிறையில் வைத்து காலில் ஒரு ஈரமான கோணிப்பையை வைத்து அடித்து கால் எலும்பை முறித்து விடுகிறார். காவல் நிலையத்தில் ஏற்பட்ட நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்களை தாங்கி கொள்ள முடியாத காவலர் பிரசாந்த் பாண்டியராஜன் வெகுண்டெழுந்து மிக மோசமான மனநிலையில் அவர் செய்யும் வன்முறையால் பெரிய சிக்கலுக்கு ஆளாகி நிற்கிறார். அந்த சிக்கலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதுதான் “வாரண்ட்” இணைய தொடரின் மீதிக் கதை.
‘விலங்கு’ வெப் சீரிஸ், ‘மாமன்’ படம் ஆகிவற்றை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் ‘வாரண்ட்’ வெப் சீரியஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார் இப்படத்தின் கதை திரைக்கதையிலும் அவர் பங்காற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண காவலராக இயல்பாக எல்லாவற்றையும் கடந்து போகிற கதாபாத்திரமாக இருந்தாலும், கோட்டை கருப்புசாமி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார்.வீரம் கோபம் பயம் பதற்றம் தவிப்பு என்று பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி அதன் தன்மையை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள். இந்த மூவரில் சாயா தேவியின் கதாபாத்திரம், சற்று அழுத்தம் நிறைந்ததாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறு நடித்து இருப்பதை பாராட்டலாம்.
பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக வரும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், காவலராக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி,மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களு க்கு தங்கள் பங்களிப்பைக் குறையின்றிச் செய்துள்ளார்கள்.
இந்த இணைய தொடரை ஒளிப்பதிவு செய்திருக்கும் அசோக்குமார்,திரைக்கதையின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அதற்கேற்ப ஒளியமைப்பு செய்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அவரது ஒளிப்பதிவு காவல் நிலையம் மற்றும் காவலர்களை இயல்பாக காட்சிப்படுத்தி, நாமும் அந்த காவல்ல் நிலையத்தில் இருக்கும் உணர்வைத் கொடுக்கிறது.
சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வேகத்தைக் கூட்டி விறுவிறுப்பை அலிக்கிறது.
காவல் நிலையத்தில் மரணம் என்ற ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக் கொண்டு சுவாரசியமாக திரைக்கதை அமைத்து சுமார் நான்கரை மணி நேரம் ரசிகர்களின் முழுக் கவனத்தையும் ஈர்த்துவிடும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன், ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிக துல்லியமாக அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக இதன் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். .காவல்துறையினர் ஏன் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான உளவியல் ரீதியான விளக்கம் கொடுத்ததோடு அவற்றைச் சிறப்பான முறையில் தத்ரூபமாக காட்சிகளாக்கி, உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும் என்று நினைத்து, காவல்நிலையங்களில் மிகத் தாரளமாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள் இந்த தொடரிலும் நிறைந்திருக்கின்றன. இந்த தொடரில் குறிப்பாக அருள்தாஸ் தான் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து மீண்ட கதையைக் கூறும் காட்சி அனைத்து காவலர்களையும் வேதனைப்படுத்தும் விஷயம் என்பது மட்டுமல்ல பதை பதைக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.
மொத்தத்தில், ‘வாரண்ட்’ இணைய தொடர் வெற்றி வாகை சூடி அனைவர் மனதிதையும் ரசிக்க வைக்கும்.