‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்!

19

சென்னை:

விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்திருக்கும் ‘பெத்தி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்க திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.

இப்படத்தில் ராம்சரண், ஜான்வி கபூர்,சிவராஜ் குமார்,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா, ஸ்ருதி  ஹாசன்,விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார் புச்சி பாபு சனா.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இந்தியா அறிவியலில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இன்றும் குறைந்தபட்ச வசதி கூட இல்லாத பல  கிராமங்கள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் “பெத்தி” படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியா ஒலிம்பிக் நடத்தும்  விளையாட்டுப் போட்டியில் 67வது இடம்பெற்று பதக்கப் பட்டியலில் மிகவும் தலைகீழான நிலையில் உள்ளது. இதனால் விளையாட்டுத் துறை அமைச்சர் அந்த துறையைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளிடம் 130 கோடி பேர் உள்ள இந்தியாவின் பதக்கப் பட்டியல் குறைந்து இருப்பதை சுட்டிக் காட்டி அனைத்து விளையாட்டுக்களிலும் வெற்றி பெற்று பதக்கம் வாங்க ஏதாவது செய்ய வேண்டும் இல்லையேல் அந்தத் துறையை மூட வேண்டிய சூழ் நிலை ஏற்படும் என்று திட்டுகிறார். அப்போது விளையாட்டுத் துறை அதிகாரி போமன் இரானி திறமையான கிராமிய வீரர்களைத் தேடி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரம் வருகிறார். அங்கு பல விளையாட்டுக்களில் தனித்துவமான சாதனை படைத்துள்ள பெத்தி என்பவரை பற்றி கேள்விப்படுகிறார்.

சொந்த ஊர் எதுவென்று பெயர் தெரியாமல் அரசாங்கத்தின் எந்தவித உதவியும்  இல்லாமல் மற்றும் அங்குள்ள மக்கள் எந்த அடையாளம் இல்லாமல்   மலை அடிவாரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த ஊரில் ஒரு துடிப்பான வீரமுள்ள இளைஞனாக வாழ்ந்து வரும் கதாநாயகன் தான் பெத்தி என்கிற ராம்சரண். அங்கே இளைஞர்கள் மத்தியில் பெத்தி ஒரு கதாநாயகனைப் போல கொண்டாடப்படுகிறான். அவனது திறமைக்காக ஒரு சிலையையே வைத்திருக்கிறார்கள்… என்றால் நம்ப முடியவில்லை. பெத்தியைப்பற்றி அந்த விளையாட்டுத் துறை அதிகாரி ஒரு கிராமவாசியிடம் விசாரித்தபோது, அந்த கிராமத்து மனிதர் பெத்தியைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார். அந்த மலை அடிவாரத்தில் வாழும் பெத்தி என்கிற இளைஞன் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறான் .யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக அந்த அணியில் சேர்ந்து ஆடி வெற்றி பெற வைப்பது அவனது வழக்கம். இப்படி ஒரு ‘ஆட்டக் கூலி’யாக இருக்கிறான் பெத்தி. இந்த சூழலில் அந்த மலை அடிவாரத்தில் சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர் என எதுவுமே இல்லாத, வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லாத அந்த கிராமத்திற்கு ஒரு ரயில் நிலையத்தையாவது கொண்டு வந்து, அதற்கு அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஜெகபதி பாபு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி அங்கு வரும் ரயில் முன் விழுந்து இறந்து விடுகிறார்.

அதனால் வேதனையடைந்த பெத்தி எப்படியாவது தன்னுடைய ஊரில் ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குத்துச்சண்டையில் பயிற்சி பெற்று பெரிய மல்யுத்த வீரனாக வர வேண்டும் என்று நினைக்கிறான். கிரிக்கெட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பெத்தியின் அசாத்தியமான உடல் பலத்தைக் கவனிக்கும் சிவராஜ்குமார், அவனுக்கு பாரம்பரிய மல்யுத்தத்தைக் கற்றுக் கொடுக்கிறார். விஜய நகரத்தில் உள்ள உள்ளூரில்  ய மல்யுத்த களத்தில் வெற்றி பெற்று பல்வேறு நிலைகளைக் கடந்து தேசிய அளவில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கிறான் பெத்தி.  எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெத்தி அரையிறுதியிலும் வெற்றி பெறுகிறான்.  இறுதிச் சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு எதிர்பாராத விதமாக  இனி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவே முடியாத சூழ்நிலை பெத்திக்கு ஏற்படுகிறது.  இதனால் ஒன்றும் செய்ய முடியாத சூழலில் பெத்தி விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றானா? இல்லையா? என்பதுதான் “பெத்தி’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகன் பெத்தியாக ராம் சரண் நடித்திருக்கிறார். அவர் இந்தப் படத்திற்காக தன் உடலை வறுத்திக் கொண்டு பலவித உடற்பயிற்சிகள் செய்து இப்படத்திற்காக  கடுமையாக உழைத்திருப்பது நன்றாக தெரிகிறது. குறிப்பாக மல்யுத்தக் காட்சிகளில் அவரது அயராத உழைப்பும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துக் கொண்டு அதன் வெளிப்பட்டை தன் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு  சென்று இருப்பதை பாராட்டியே தீர வேண்டும்.

ஒரு அரசியல்வாதியின் மகளாக, எழில் கொஞ்சும் கிராமத்துப் பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். அவர் இப்படத்தில் குறைந்த அளவிலான காட்சிகளில் வந்தாலும், படம் முழுக்க இருக்கும் உணர்வைக் கொடுக்கிறது.

ஜெகபதி பாபு, கிராம மக்களின் நலனுக்காக போராடும் மனிதராக மனதில் நிற்கிறார்.கௌர் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் வரும் சிவராஜ்குமார் தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். பெத்தியின் தாயாராக விஜி சந்திரசேகர் நடித்துள்ளார்.அவர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம்  ஆடுகிறார்.

திவ்யேந்து சர்மா, பொமன் இரானி, ஜான் விஜய் போன்ற பல நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்; குறிப்பாக பின்னணி இசையில் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளை மிகவும்  நேர்த்தியோடு படமாக்கியிருக்கிறார்.

இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புஜ்ஜி பாபு சனா. இன்றும் இந்தியாவில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டி  ஒரு விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக அனைவருக்கும் புரியும்படி இயக்கி இருக்கிறார் புஜ்ஜி பாபு சனா.

மொத்தத்தில், ‘பெத்தி’  ஒரு சமூகத்தின் அவலத்தை சொல்லும் படம்.

ரேட்டிங்: 3.5/5.

RADHAPANDIAN.