‘சாருகேசி’ திரைப்பட விமர்சனம்!

43

சென்னை:

அருண் விஷ{வல்ஸ்,மெட்ராஸ் சினி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீஅக்ரஹாரம் ராஜலட்சுமி புரொடக்‌ஷன் தயாரித்திருக்கும் சாருகேசி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

இப்படத்தில் ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

சாருகேசி என்கிற ஒய்.ஜி. மகேந்திரா ஒரு மிகச்சிறந்த கர்நாடக இசை வித்துவானாக விளங்குகிறார்.  கர்நாடக இசையே தனது மூச்சு என வாழும் அவருக்கு ஒரு உண்மையான மனைவி சுஹாசினி. சங்கீத உலகத்திலும், சமூகத்திலும் மிகப் பெரிய கலைஞனாக இருக்கும் ஒய்.ஜி. மகேந்திராவுக்கு சொந்த வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வி ஏற்படுகிறது. அதாவது இசையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி பெயர், புகழ், பணம் என்று உச்சத்தை தொட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலி மிகுந்ததாக இருக்கிறது. அந்த வலிக்குக் காரணம் அவரது மகன் ராஜ் ஐயப்பா தன் தந்தையான ஒய்.ஜி. மகேந்திராவின் புகழே தன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக உணர்கிறான்.

இந்த நேரத்தில் மகன் தன்னுடைய இசை நிகழ்ச்சியில் பாட வந்த ரம்யா பாண்டியனை திடீரென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான். தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணமாக இருந்தாலும், ரம்யா பாண்டியனை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் ஒய்.ஜி.மகேந்திரா – சுஹாசினி இருவரும்  அதிர்ச்சியாகும் விதத்தில், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டு மிரட்டுகிறார். இந்த பிரச்சனையால் ஒய்.ஜி. மகேந்திராவுக்கு பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி  அவருடைய உடல் பலவீனம் அடைய நோய்களும் தொற்றுகிறது. அவருக்கு உடல் ரீதியான அதாவது அல்சைமர்  என்கிற ஞாபக மறதி  நோய் வந்து பிரச்சினை வருகிறது. சாருகேசி என்கிற ஒய்.ஜி. மகேந்திரா  அந்த நோயிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதுதான் “சாருகேசி” படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சாருகேசி என்ற கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார். ஒரு வித்துவானுக்குரிய கம்பீரத்துடனும் பெருமிதத்துடன் உள்ள தோற்றமும் தோரணையும் நன்றாகவே அவருக்குக் கை கொடுத்து உதவி செய்துள்ளன. வெறும் வசன உச்சரிப்பிலும் அவரது முகத்திலும் காட்டும் நடிப்பையும் மீறி அவருடைய உடல் மொழியிலும் வயதான ஒரு மனிதரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். 

சுஹாசினி மணிரத்னம் தன் கணவனின் இசைச் சாம்ராஜ்யம் சிறப்பாக செயல்பட  பாடுபட்டாலும், தன் மகனின் அவமதிப்பையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் விதத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி அசத்தி இருக்கிறார்.

சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் சில காட்சிகளில் ஏன் இவருக்கு தந்தை மீது இவ்வளவு வெறுப்பு என்று கேட்கும் வகையில் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மருமகளாக வரும் ரம்யா பாண்டியனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்து படம் பார்ப்பவர்களின் மனதை நோக வைக்கிறார்.

சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதையை உணர்ந்து அதற்கு  பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல் தனது ஒளிப்பதிவில் பல காட்சிகளை பல கோணங்களில் பதிவு செய்து இருப்பதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலமாகவும் அமைந்திருக்கிறது. 

தேவாவின் இசை கர்நாடக இசைப்பின்னணி கொண்ட படத்திற்குப் பெரிதும் துணை நின்றுள்ளது. கர்நாடக சங்கீத இசையில் மிரட்டியிருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா. சமீப காலமாக திரைப்படங்களை இயக்காத சூழ்நிலையில் இந்த படத்தை ஒரு அருமையான படமாக கொடுத்து தனது இயக்கத்தையும் அழகாக செய்து எப்போதும் நான் மிகச் சிறந்த இயக்குநர்தான் என்பதைச் சுட்டிக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். ஒரு சங்கீத மேதையின் கதையை எடுத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

மொத்தத்தில், ‘சாருகேசி’  படம் இன்னொரு ‘சிந்து பைரவி”

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.