ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

44

CHENNAI:

இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய கூட்டணியாக, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மனதில் தனித்துவமான நடிகராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பிடித்துள்ள சூர்யா, சமூக அக்கறை மிக்க கதைகளையும், வணிக அம்சங்களையும் சமநிலைப்படுத்தி வெற்றிப்படங்களை வழங்கிய த.செ. ஞானவேலுடன் மீண்டும் கைகோர்ப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் பிரம்மாண்ட முயற்சியை, ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ உள்ளிட்ட இந்திய அளவிலான வெற்றிப் படங்களை வழங்கிய ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அதன் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தலைமையில் தயாரிக்கிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில்,

“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் பேரன்பைப் பெற்று வரும் சூர்யாவுடன் இணைவது எங்களுக்கு பெருமை. வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெற்ற நடிகரான அவர், இந்திய சினிமாவின் முக்கிய முகமாக திகழ்கிறார்.உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், ஆழமான கதைகளை மக்களிடம் கொண்டு செல்லும் திறன் கொண்டவர். மொழி, மாநிலம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து செல்லும் தரமான திரைப்படங்களை உருவாக்குவதே ஹொம்பாலே பிலிம்ஸின் நோக்கம். அந்த நோக்கத்துடன் சூர்யாவும், த.செ. ஞானவேலும் இணைவது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதே இந்தப் படத்தின் அடையாளமாக இருக்கும்,” என்றார்.

இத்திரைப்படத்திற்கு இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்து வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவனம் பெற்ற நடிகை கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் இணைந்துள்ளனர்.

ஒளிப்பதிவை எஸ்.ஆர். கதிர் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை கே. கதிர் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் மேற்கொள்கிறார். திரைக்கதையில் பா. கிருத்திகா பங்களித்துள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

‘S-48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஜூலை 22ஆம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.