சென்னை:
அருள்நிதி, ஆரவ் ,காளி வெங்கட், ரம்யா பாண்டியன், ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், அருள்தாஸ்,ஹரிஷ் உத்தமன்,கிருத்திகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “அருள்வான்” . இப்படத்தை இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தேனி மலைப்பகுதியில் பூங்கொடி என்கிற பின்தங்கிய, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருக்கும் மலைகளின் மேலே ஒரு சிறிய பழங்குடியின கிராமத்தில் வாழும் ‘காடர்’ பழங்குடியின மக்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்வியும் நாகரிகமும் எட்டிப் பார்க்காத ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் இருக்கின்றன.அவர்கள் தங்களுக்கென ஒரு மொழியை பேசிக்கொண்டு தங்களுக்கென ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த மலைப் பகுதி மக்கள் யாருக்கும் கல்வி அறிவு கிடையாது. அங்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அந்த இடத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமெனில் எட்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்கின்ற சூழலில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே வளர்த்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஆரவ்- ரம்யா பாண்டியனின் மகள் கிருத்திகா,பருவம் எய்தி இருக்கிறாள். சிறுமி கிருத்திகாவிடம் அவர்களது மரபுப்படி மாப்பிள்ளையை முடிவு செய்யச் சொல்கிறார்கள். அந்த மலை வாழ் மக்கள் ஐந்து நபர்கள் பெயரில் ஐந்து கற்களைக் கொடுத்து யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் அவள் தனக்குத் திருமணம் வேண்டாம் கல்வி கற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். பக்கத்து ஊரில் இருக்கும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து தானும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
கலெக்டரை சந்தித்து கேட்டால் பள்ளிக்கூடம் கட்டித் தருவார் என்று டீச்சர் ஒருவர் சொல்வதைக் கேட்டு கலெக்டரை சந்திக்க மலைக் கிராமத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் கிருத்திகா எங்கு செல்வது என்று வழி தெரியாமல் திண்டாடுகிறாள். இந்த சூழலில் அவளுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அங்கு அவள் தனது பள்ளி நினைவுகளை பற்றிய ஏக்கம் இருப்பதால் இந்த விஷயம் கலெக்டருக்கு தெரிய வருகிறது. இறுதியில் மலைவாழ் சிறுமி கிருத்திகாவின் கல்வி கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதை இந்த சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மிகுந்த அக்கறையோடு சொல்லும் படம்தான் ‘அருள்வான்’.
மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி, தனது அனுபவம் மிக்க நடிப்பின் மூலம் முத்துவேல் என்ற கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஒரு உன்னதமான அமைதியான அவரது நடிப்பு மற்றும் உடல் மொழி இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
எப்படியாவது படிக்கவேண்டும் என்று போராடும் குறிஞ்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி கிருத்திகாதான் இப்படத்தின் நாயகி என்றே சொல்லலாம்.அவர் பள்ளியில் படிப்பதற்காக வெளிப்படுத்தும் ஏக்கம், பயம், கல்வி மீதான ஆர்வம் ஆகியவை பல இடங்களில் நம் மனதை நெகிழ வைக்கின்றன.
சிறுமி கிருத்திகாவின் பெற்றோராக நடித்திருக்கும் ஆரவ்,ரம்யாபாண்டியன் ஆகியோருக்குப் பெரிய வாய்ப்பில்லை.கிடைத்த வாய்ப்பைப் பய்ன்படுத்திக் கொண்டு தகளது பணியை செய்து இருக்கிறார்கள். மற்றும் காளி வெங்கட்,ஜான் விஜய்,விடிவி கணேஷ் ஆகியோர் தங்கள் இயல்புக்கு மாறாக,இந்தக் கதைக்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு தேனி மலைப்பகுதியின் அழகை அற்புதமாக பதிவு செய்து, களத்திற்கு நம்பகத்தன்மையை சேர்த்திருக்கிறது. காடு மலை அருவி ஆறு பள்ளத்தாக்குகள் என்று கண்ணுக்கு விருந்தாக இயற்கையைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைதியாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்க வைத்திருக்கிறார். பி
மலை வாழ் மக்களின் உரிமைகளையும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டி கல்வியின் அவசியத்தையும் பிரச்சார தொனியின்றி இந்தக் கதையின் மூலம் எடுத்து விளக்கி உள்ளார் இயக்குநர் கணேஷ் விநாயகன். ஒரு சமுதாய அக்கறை கொண்ட கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் சிந்திக்க வைக்கும் அனுபவமாக கண்டிப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில், ‘அருள்வான்’ நம் சமுதாயத்தில் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தும் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.