CHENNAI:
அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இன்று ஒரு சிறந்த கலைஞன் எந்தப் பகுதியிலிருந்தும் உருவாக முடியும் என்பதை நிரூபிக்கும் நாளாக இருக்கிறது. அந்த வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் சாவியாக இன்று நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். அதற்காக ஹரிஷின் சார்பிலும், அவரது சகோதரனாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கான் சிட்டி” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்திற்கு நான் இன்னும் அதிகமான வரவேற்பை எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றினேன். இருந்தாலும், ஹரிஷின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தருகிறது. இது அவருடைய பல வெற்றிகளில் முதல் வெற்றி மட்டுமே.
ஹரிஷ் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்ட இயக்குநர். அவருடைய அறிவும், கதையை அணுகும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிய தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சொல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. அவர் முதன்முதலில் கதையைச் சொன்னபோது, இவ்வளவு கதாபாத்திரங்களையும், இவ்வளவு நிகழ்வுகளையும் இரண்டு மணி நேர திரைப்படமாக எப்படி வடிவமைப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும். படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன். அகில்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம். இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாக சொல்வார். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.யோகி பாபு சார் இன்று இங்கு இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம். எந்தக் காட்சியாக இருந்தாலும், ஒரு நகைச்சுவை வசனம் மூலம் படப்பிடிப்பு தளத்தையே சிரிப்பால் நிரப்பிவிடுவார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தபோது, அவருடைய உற்சாகத்தையும், எளிமையையும் இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் செய்து முடிக்கும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. படம் வெளியான பிறகு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிய விதத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன். அவருடைய நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவம்..என்றார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
என்னுடைய முதல் நன்றி குணா (Post Office) மற்றும் விஜய் (Silver Tree) ஆகியோருக்கே. திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்று வரை அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.
இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், மணிகண்டன் சார், PTG Studios, வெண்ணி, ஜென்னி, என் குடும்பத்தினர், உறவினர்கள் என இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து குறித்து குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு நாள் வந்து கதையை கேட்டார். “கதை பிடித்திருந்தால் முதலீடு செய்யுங்கள். படத்தை முழுமையாக முடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று நான் சொன்னேன். மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை அனுப்பிவைத்தார். அந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
அதேபோல் மற்றொரு இணை தயாரிப்பாளரான Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். எந்தக் கேள்வியும் கேட்காமல், “தம்பி, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையோடு இந்தப் படத்தில் முதலீடு செய்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெளிநாட்டு வெளியீட்டை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்த T-Series உள்ளிட்ட என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி. ஒரு உள்ளடக்கமிக்க திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் வெளியிட உதவியது மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.எங்கள் விநியோகஸ்தரான Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படம் பார்த்த முதல் நாளிலிருந்தே அவர் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். நடிகரின் சந்தை மதிப்பையோ, முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது அவருடைய திரைப்படப் பற்றைக் காட்டுகிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம், மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது. அந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது. இந்தப் படத்தில் நடித்த அனைவரையும் பற்றி பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மூத்த கலைஞர், இன்றும் “எனக்கு வேலை வாங்கிக் கொடுங்கள், நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுவது எவ்வளவு பெரிய விஷயம் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாங்கள் சில படங்கள் நடித்துவிட்டாலே திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு கலைஞர் இன்னும் அதே ஆர்வத்துடனும், அதே பசியுடனும் வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்பது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது. “நான் இறந்தாலும், படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்.”
அந்த வார்த்தையைக் கேட்டபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. சினிமா மீது இவ்வளவு காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. படப்பிடிப்பு முடிந்த நாளிலேயே நான் அவரிடம் சொன்னேன், “இந்தப் படம் வெளியான பிறகு அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்று. இன்று அது உண்மையாகி இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது…என்றார்.