CHENNAI:
தமிழ் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா, மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை – மலேசியா இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, வருகிற ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துகேவ்ஸ் செங்கா மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, திரைப்படத்தின் பாடல்களை முன்னணி இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இதன் மூலம் ‘சொடக்கு’ திரைப்படம் சர்வதேச அளவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளது.
விழாவில் பிரபல இயக்குநர் லிங்குசாமி, திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தின் கதாநாயகர்களான நட்டி, விதார்த், கதாநாயகிகள் ஆனந்தி, ரக்ஷிதா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் பல திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் மலேசியாவின் பல முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை மற்றும் மலேசியா தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தை தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஜூபிலி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இந்த திரைப்படம், விறுவிறுப்பான அதிரடி – திகில் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
‘சொடக்கு’ என்ற தலைப்பே கதையின் மையக் கருத்தை பிரதிபலிக்கிறது. ஒரு கண நேரத்தில் மனித வாழ்க்கை எவ்வாறு தலைகீழாக மாறுகிறது, ஒரு சிறிய நிகழ்வு எத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதையே இந்த திரைப்படம் சுவாரசியமான திரைக்கதையாகச் சொல்லவிருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் சம்பவங்கள் இன்றே தெரிந்துவிட்டால் மனிதர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்வார்கள் என்ற வித்தியாசமான சிந்தனையை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் மலேசியாவின் பல அழகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்களுக்கு மலேசியாவின் இயற்கை எழிலும் புதிய காட்சிப்பதிவும் விருந்தாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சரண், இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை புதிய இயக்குநர் காமராஜ் மனோன்மணி கவனித்துள்ளார். புதிய சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த திகில் அனுபவமாக இந்த திரைப்படம் அமையும் என கூறப்படுகிறது.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நட்டி மற்றும் விதார்த் முதன்முறையாக இணைந்து நடித்திருப்பதும் இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். இவர்களுடன் ஆனந்தி, ரக்ஷிதா, மலேசியாவைச் சேர்ந்த நடிகர் டத்தோ கணேசன், அபிஷேக் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தொகுப்பை ஜி. ராமாராவ், ஒளிப்பதிவை என். எஸ். உதயகுமார், சண்டைக் காட்சிகளை வின் வீரா மேற்கொண்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளராக கே. எஸ். மயில்வாகனன் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளராக தேசிய அளவில் குறும்பட இசைக்கான விருது பெற்ற அபிஷேக் ஏ.ஆர். அறிமுகமாகியுள்ளார். திரைப்படத்திற்கு புதிய இசை அனுபவத்தை வழங்கும் வகையில் அவரது இசை அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழகமும் மலேசியாவும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், கதை சொல்லும் முறை, தொழில்நுட்பத் தரம் மற்றும் சர்வதேசத் தயாரிப்பு தரம் ஆகியவற்றால் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினர் உள்ளனர். மலேசியாவில் நடைபெறவுள்ள பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, ‘சொடக்கு’ திரைப்படத்தின் அடுத்த கட்ட பயணத்திற்கு முக்கிய தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.