*சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3- முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

6

CHENNAI:

ஹாரர் திரைப்படங்களுக்கு இசை என்பது வெறும் பின்னணி அல்ல; அந்த உலகத்தை உயிர்ப்பிக்கும் முக்கிய சக்தி. அந்த வகையில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை பாணியால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை அச்சத்தின் உலகிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்ததுடன், தனது குரலிலும் பாடலை உயிர்ப்பித்துள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் பதற்றம், மர்மம் மற்றும் இருள் கலந்த மனநிலையை உணர்த்தும் விதமாக அவரது குரலும் இசையும் இணைந்து, வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலின் காட்சியமைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் மைய வில்லனின் கொடூர உலகத்தை பிரதிபலிக்கும் வகையில், ரத்த சிவப்பு நிற பின்னணி, நரகத்தை நினைவூட்டும் கலை வடிவமைப்பு மற்றும் தீவிரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனுடன் இணைந்துள்ள சாம் சி எஸ்-இன் டார்க் சவுண்ட் டிசைன், பாடலின் தாக்கத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தில் தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி எஸ், தற்போது மூன்றாம் பாகத்திலும் அதே தீவிரத்துடன் இசையை வடிவமைத்துள்ளார். குறிப்பாக “ரத்தத்த தா” பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக் கோர்வை, படத்தின் மர்ம உலகத்திற்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது என்று இசை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஹாரர்-த்ரில்லர் ஜானருக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய ‘டிமான்டி காலனி’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் என்பதாலும், இயக்குநர் அஜய் ஞானமுத்து – அருள்நிதி – சாம் சி எஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் “ரத்தத்த தா” பாடல், ஹாரர் இசை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. தனது இசையால் கதையின் உணர்வை வெளிப்படுத்தும் திறனை மீண்டும் நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடல் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் சாம் சி எஸ், தமிழில் தற்போது ரவி மோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.