பிரபலங்களுக்கு மட்டுமல்ல… சாதாரண மக்களுக்கும் பிக் பாஸ் கதவு திறந்தது! ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் புதிய அத்தியாயம்!
சென்னை, ஆக. 6:
தமிழ் தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் இந்த முறை தனது பத்தாவது சீசனில் மிகப்பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை திரையுலக மற்றும் பிரபல முகங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக “Common Man” என்ற புதிய முயற்சியின் மூலம் சாதாரண மக்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளனர்.
இந்த புதிய அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்கள், இல்லத்தரசிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழில்முனைவோர், சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்க்கைப் பயணத்தையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் ஆடிஷன் வீடியோக்களை அனுப்பி போட்டியில் இணைந்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தேர்வில் பல கட்ட நேர்முகத் தேர்வுகள், திறன் மதிப்பீடுகள் மற்றும் ஆளுமை சோதனைகளுக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்ட தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ள இறுதி போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த இறுதிக்கட்ட தேர்வை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். அதேபோல், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாயா கிருஷ்ணன், இந்த சிறப்பு ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக பொறுப்பேற்று, சாதாரண மக்களின் வாழ்க்கைக் கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளார்.
இந்த புதிய பொறுப்பு குறித்து ஆரி அர்ஜுனன் கூறுகையில், பிக் பாஸ் தனது வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி என்றும், இந்த சீசனில் வெளிப்படைத்தன்மை, மன உறுதி, நேர்மை மற்றும் தங்களது கொள்கைகளுக்காக துணிச்சலுடன் நிற்பவர்களையே தேர்வு செய்ய விரும்புவதாக தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் போலித்தனத்திற்கு நீண்ட ஆயுள் இல்லை; உண்மையான குணமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜு ஜெயமோகன் பேசுகையில், “நாமாக இருப்பதே மிகப்பெரிய பலம் என்பதை பிக் பாஸ் எனக்குக் கற்றுக் கொடுத்தது. பல ஆண்டுகளாக இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சாதாரண மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் இயல்பான ஆளுமையே இந்த சீசனின் மிகப்பெரிய பலமாக இருக்கும்” என்றார்.
ஓவியா தனது கருத்தில், பிக் பாஸ் தனக்கும் ரசிகர்களுக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்கியதாகவும், அதே வாய்ப்பு தற்போது சாதாரண மக்களுக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். இயல்பாக இருப்பவர்களையே மக்கள் அதிகம் கொண்டாடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த முறை பிரபலங்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், சாதாரண மக்களின் போராட்டம், கனவுகள், வெற்றிகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட புதிய அத்தியாயமாக பிக் பாஸ் தமிழ் 10 அமையும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் – Common Man நிகழ்ச்சி ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். மேலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.