“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!
CHENNAI:
வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களின் உறவுகளையும், இயல்பான சந்தோஷங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வடசென்னை என்றாலே வன்முறை, அடிதடி, ரவுடியிசம் போன்ற பிம்பங்களே திரையில் அதிகம் காட்டப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதி மக்களின் எளிமையான அன்றாட வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஆல் பாஸ்’ உருவாகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
விழாவில் பேசிய இயக்குநர் மைதீன், தனது படத்தை உருவாக்குவதில் மூத்த கலைஞர்கள் அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். உதவி இயக்குநர்களின் உழைப்பு சினிமாவில் போதிய அளவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்தான் தனித்த அடையாளத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நடிகர் ஜெயப்பிரகாஷிடம் கதையைச் சொன்னபோது, கதாபாத்திரம் அவருக்கு பிடித்ததால் சம்பளம் குறித்து பெரிதாக யோசிக்காமல் நடிக்க முன்வந்ததாகவும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் கதையை கேட்டவுடன் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒப்புக்கொண்டதாகவும் மைதீன் தெரிவித்தார். “எங்களைப் போன்றவர்களின் தேடலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. இப்படம் உருவாக பல நல்ல உள்ளங்களின் உதவியும் ஒத்துழைப்பும் காரணமாக அமைந்துள்ளது” என்று அவர் கூறினார்.
விழாவின் முக்கிய கவனத்தை ஈர்த்தது நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுதான்.
‘ஆல் பாஸ்’ படத்தைப் பாராட்டிப் பேசிய அவர், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞருக்கும் உரிய மரியாதையும் வெளிச்சமும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஒரு திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. அவர்களுடைய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சமீபத்தில் தான் நடித்த ‘கருப்பு’ திரைப்படம் தொடர்பான தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
“நான் ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன். ஆனால் அதை அப்படியே தூக்கிவிட்டார்கள். யூடியூப்பில் வெளியிடுவோம் என்று சொன்னார்கள்; அதையும் செய்யவில்லை. இது என்ன அநியாயம்?” என்று கேள்வி எழுப்பிய மன்சூர் அலிகான், “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் கலைஞர்களைப் பற்றி ஆதாரமற்ற வகையில் பேசப்படுவதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“நான் நல்ல வேலை செய்ததாக நினைத்தாலும், அதை கீழே போய் கொச்சைப்படுத்திப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். சினிமாவில் உழைக்கும் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். தனது பேச்சின் இறுதியில், ‘ஆல் பாஸ்’ படத்திற்கு விளம்பரம் செய்து வரும் ஊடகங்கள் மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி தெரிவித்த மன்சூர் அலிகான், படத்தின் வெற்றிக்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசும்போது, இயக்குநர் மைதீன் முழுக் கதையையும் விவரமாகச் சொன்னதாகவும், அதில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
“நடிக்கத்தானே வந்திருக்கிறோம்… கண்டிப்பாக செய்கிறேன்” என்று இயக்குநரிடம் தெரிவித்ததாகக் கூறிய அவர், படம் முழுவதும் வடசென்னையின் வாழ்வியலை விட்டு விலகாமல் இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக பாராட்டினார். ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து அவர்களது குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், சந்தோஷம், சண்டை உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை இப்படம் பதிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார்.பல திரைப்படங்களில் அதிகப்படியான வன்முறை இடம்பெறுவதைப் பார்க்கும்போது தனக்கு சில நேரங்களில் கேள்வி எழும் என்றும், ஆனால் ‘ஆல் பாஸ்’ படத்தைப் பார்க்கும்போது அத்தகைய உணர்வு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் படத்தைப் பார்க்கும்போது மன அமைதி கிடைக்கும். இயக்குநர் வடசென்னையை இதுவரை யாரும் காட்டாத ஒரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்” என்றார். படத்தின் கலை இயக்குநரின் உழைப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். பாடலாசிரியர் மோகன் ராஜனின் வளர்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்றும், இப்படத்தில் அவர் நான்கு பாடல்களை எழுதியிருப்பதாகவும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்.
நடிகர் துஷ்யந்த், தனக்கு நேர்மறையான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
தனது திரைப்பயணத்தில் ‘ஆல் பாஸ்’ கதாபாத்திரம் மறக்க முடியாததாக இருக்கும் என்றும், தனது தந்தை ஜெயப்பிரகாஷுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
தனது முதல் படமான ‘ஈசன்’ திரைப்படத்தில் சிறு வயதில் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த துஷ்யந்த், 2008 முதல் 2026 வரை தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.