’ராம் அண்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்!

7

சென்னை:

ரியோ, வர்த்திகா,சேத்தன், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், காத்தாடி ராமமூர்த்தி, முனிஷ் காந்த், மாகாபா ஆனந்த் நடித்துள்ள படம்தான் “ராம் அண்ட் லீலா”. இப்படத்தை ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ரியோ மென்பொருள் துறையில் பணி புரிந்துக் கொண்டிருக்கும்போது,  அவருக்குப் பெண் அமையாமல் திருமணம் தள்ளிக் கொண்டே செல்கிறது. 40 வயது ஆகியும் திருமணமாகாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரியோவை எந்த பெண்களும் திருமணம் செய்ய மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் ரியோ ரயிலில் பயணிக்கும்போது எதிர்பாராதவிதமாக வர்த்திகாவைச் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு ஈர்ப்பு, மெல்ல காதலாக மாறி ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.

அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்போது  வர்த்திகா, ரியோவிடம் ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது மாலை ஆறு மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு  வெளியே வர மாட்டேன். எந்த காரணத்தைக் கொண்டும் என்னை சந்திக்க வரக் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன்.  வர்த்திகாவின் அழகிலும், காதலிலும் மயங்கியிருக்கும் ரியோ, அவரது கண்டிஷனை ஏற்று அவரைக் காதலிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு வர்த்திகாவின் மாலை 6 மணிக்கு போட்ட கண்டிஷன்  ரியோவுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அவருக்கு திருமணம் செய்ய முற்பட்டாலும்  அதை ஆறு மணிக்குள் செய்து விட வேண்டும் என்கின்றனர்.

அதனால் அந்த ஆறு மணி ரகசியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம்  ரியோவுக்கு ஏற்படுகிறது. அதனால் வர்த்திகாவின் வீட்டிற்கு ஆறு மணிக்கு மேல் செல்ல முடிவு செய்கிறார்.  அங்கு நெருங்கிப் பார்க்கும்போது  வர்த்திகா மாலை ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறி விடுகிறார். காரணம் அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்று அறியும் போது ரியோவிர்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாராத திருப்பங்களாக அமைகிறது. இறுதியில் ரியோ தான் காதலித்த பெண்ணான வர்த்திகாவை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் “ராம் அண்ட் லீலா” படத்தின் மீதிக் கதை.

ராம் எனும் கதாபாத்திரத்தில் நாயகன் ரியோராஜுக்கு.திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் அலையும் காட்சிகளில்  தனது உடல்மொழியாலும் முகபாவனைகளாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தான் காதலித்த பெண் ஏலியன் என்று தெரிந்ததும் காதலை தொடர்வதா ? விட்டு விடுவதா என்று தவிக்கும் காட்சியில் மிக சிறப்பாகவே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் வர்த்திகா,அழகு தேவதையாக வலம்வருகிறார். ஒரு காதல் நாயகியாக மட்டுமே தெரிந்தாலும், கதையில் அந்த கதாபாத்திரத்தின் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது. அவரது கண்களும், இயல்பான நடிப்பும் படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

நாயகனின் அப்பாவாக சேத்தன்,அம்மாவாக மாளவிகா அவினாஷ்,தங்கையாக தாபியா அபு,மாமனாக முனீஷ்காந்த்,நண்பராக பாலாஜி தியாகராஜன் தயாளன்,நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட்,மாமனாக மாகாபா,தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு தேவையான அழகியலை வண்ணமயமாக வழங்கி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், நகைச்சுவை நிறைந்த தருணங்களிலும் உற்சாகமாக உழைத்து காட்சிகளை ரசிக்க வைத்து இருக்கிறார்.

அங்கித்மேனன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பின்னணி இசையும் காட்சிகளின் தாக்கத்தை அதிகரித்துள்ளது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் இராமச்சந்திரன் கண்ணன். காதல், கிரைம் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் கலந்த திரைக்கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்த ஒரு படம் போலிருந்தாலும்  அதை நினைக்காதபடி காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில், ’ராம் அன்ட் லீலா’ கலகலப்பான காமெடி கலந்த படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.