‘ராஜாவின் ப்ளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு – திரையரங்க இடைவேளையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அசத்தலான டீசர்!
CHENNAI:
Elephantine X நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இசையை மையமாகக் கொண்ட குடும்பக் கதையான ‘ராஜாவின் ப்ளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
படத்தின் டீசர் திரையரங்குகளில் இடைவேளை நேரத்தில் ரசிகர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. திரையரங்கில் விளக்குகள் எரிந்து, ரசிகர்கள் பாப்கார்ன், குளிர்பானங்களுடன் சென்று கொண்டிருக்க, திரையில் விளம்பரங்கள் ஓடும் அந்த வழக்கமான இடைவேளை நேரத்தில், “என்னது, இளையராஜா பாட்டு கேட்டா டைம் டிராவல் ஆகுதா?” என்ற சுவாரஸ்யமான குரல் ஒலிக்கிறது.
அதைத் தொடர்ந்து அறிமுக நடிகர் ஜெயன் மற்றும் சோனா ஒலிக்கல் இடம்பெறும் காட்சிகளுடன், பழைய சென்னையை நினைவூட்டும் விண்டேஜ் காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. இதன் மூலம் இசை மற்றும் நினைவுகளுடன் பயணிக்கும் ஒரு தனித்துவமான கதைக்களத்திற்கான எதிர்பார்ப்பை டீசர் உருவாக்கியுள்ளது.
‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளராக கவனம் பெற்ற சுஜித் N. சுப்ரமணியம், ‘ராஜாவின் ப்ளேலிஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வெங்கட் பிரபுவின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
Elephantine X சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் சோனா ஒலிக்கல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இசை, படத்தொகுப்பு, விஷுவல்ஸ், சவுண்ட் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
படப்பிடிப்பு நிறைவு குறித்து தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் கூறுகையில், “ராஜாவின் ப்ளேலிஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்வுப்பூர்வமானதும் மகிழ்ச்சியானதுமான தருணம். இந்த அழகான கதையை திரையில் கொண்டு வர படக்குழுவில் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் பணியாற்றியுள்ளனர்.
ஜெயன் தனது முதல் படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். அவரை ரசிகர்கள் நிச்சயம் அன்புடன் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது பின்னணி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இசை, காட்சிகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் ஒருங்கிணைத்து படத்தை முழுமையாக்குவதில் உற்சாகமாக ஈடுபட்டு இருக்கிறோம். குடும்பம், உணர்வுகள் மற்றும் இசையின் காலத்தால் அழியாத சக்தியை கொண்டாடும் ஒரு அழகான இசை பொழுதுபோக்கு படமாக இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக உள்ளோம்” என்றார்.
இப்படத்தில் ஜெயன், சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா மற்றும் திலகவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சாய் முனீஷ், படத்தொகுப்பாளராக ஸ்ரீ வட்சன், கலை இயக்குநராக ஷானூ முரளிதரன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, சண்டைக் காட்சிகளுக்கு பி.சி. ஸ்டன்ட்ஸ், சவுண்ட் டிசைனராக ஆண்டனி B. ஜெயரூபன் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக செந்தில் குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர். உத்ரா மீனாட்சி நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
வெங்கட் பிரபுவின் கதை, யுவன் சங்கர் ராஜாவின் இசை, சுதா கொங்கராவின் கிரியேட்டிவ் பங்களிப்பு, சுஜித் N. சுப்ரமணியத்தின் இயக்கம் மற்றும் ஜெயனின் அறிமுகம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ராஜாவின் ப்ளேலிஸ்ட்’, இசை, குடும்ப உணர்வுகள் மற்றும் பழைய நினைவுகளை இணைக்கும் வித்தியாசமான படைப்பாக உருவாகி வருகிறது.