”நடிகர் கமல்ஹாசனை போல இருப்பது எனக்கு பலம்”- நடிகர் கார்த்திகேயன்!

3

CHENNAI:

‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் மூலமும் ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கார்த்திகேயன். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு மேலும் பரிச்சியமானார்.

கார்த்திகேயனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள், ஸ்டைல் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை  இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதை கார்த்திகேயன் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறார். அதிலும், கமல்ஹாசன் தனது விருப்பமான கதாநாயகன் மட்டுமல்லாமல், தனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனும் கூட என்கிறார். கமல்ஹாசனின் படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வழக்கமான ஹீரோயிசத்தைத் தாண்டி, கதாபாத்திரத்திற்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கமல்ஹாசன் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

இசையின் மீதும் கார்த்திகேயனுக்கு ஆழமான காதல் உண்டு. குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் இசை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கலைப் பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தனக்கென வாய்ப்புகள் அதிகம் வந்தபோதிலும் தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கிறார் கார்த்திகேயன்.

“நான் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று ஒருபோதும் அவசரப்படுவதில்லை. சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்து, உண்மையிலேயே எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெறும் கவனத்தைப் பெறுவதற்காக அவசரப்படுவதைவிட, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

வெறுமனே திரையில் வந்துபோகும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல், ஒரு நடிகராக தன்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார். வசீகரிக்கும் தோற்றம் மற்றும் தொலைக்காட்சி, ஓடிடி என பல்வேறு தளங்களில் கிடைத்துவரும் அனுபவம் ஆகியவற்றுடன், கார்த்திகேயன் தனது நடிப்பு பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

பட்டுக்கோட்டையிலிருந்து தமிழ் திரையுலகில் நுழைந்திருக்கும் கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறார். அவரது காத்திருப்பு நிச்சயம் அர்த்தமுள்ளது எனவும் நம்புகிறார்.