சென்னை:
ராக்கிங் ஸ்டார் யாஷ்,நயன்தாரா,கியாரா அத்வானி, தாரா சுதாரியா,ஹுமா குரேஷி,ருக்மணி வசந்த் நடித்துள்ள படம்தான் : ‘டாக்ஸிக்’. இப்படத்தை : கீது மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுதந்திரம் இல்லாமல் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவில் கதை தொடங்குகிறது. யாஷ் மற்றும் அவனது சகோதரி நயன்தாரா சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கையில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு தாய், தந்தை இல்லாமல் அநாதையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களது முன் கதை இருண்ட சூழலைக் கொண்டதாக இருந்ததால். தன் தம்பி யாஷை ஆதிக்க சக்தி படத்தவனாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ரவுடியாக வளர்த்து வருகிறார் நயன்தாரா. அப்போதையக் காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் கொடூரத்தை அடக்கி ஒரு கட்டத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டராக உருவெடுக்கிறார் யாஷ். தனக்கு எதிரானவ்ர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிப்பது, தனது விருப்பப்படி வாழ்க்கையை நடத்துவது என எந்த கட்டுப்பாடும் இல்லாத மனிதராக மாறுகிறார் யாஷ். இந்த நிலையில் யாஷ் மற்றும் அவரது சகோதரி நயன்தாரா இருவரும் இணைந்து தங்களை அழிக்க நினைக்கும் எதிரிகளை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
இந்நிலையில், யாஷுக்கும் தாதா சல்வடோர் மகள் தாரா சுதாரியாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், சர்க்கஸ் அமைக்க கோவாவுக்கு வரும் கியாரா அத்வானியை சந்திக்கும் யாஷின் வாழ்க்கை திடீரென்று மாறுகிறது. தாரா சுதாரியாவை விட்டு விட்டு கியாரா அத்வானியை காதலித்து அவருக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. தன் மகளை விட்டுவிட்டு, கியாரா அத்வானியுடன் யாஷ் ஊர் சுற்றுவதை தாதா சல்வடோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பல சிக்கல்கள்.ஒரேநேரத்தில் உள்ளும் புறமும் பல நெருக்கடிகள் மட்டுமின்றி தாய் போல் வளர்த்த அக்கா நயன்தாராவையும் இழக்கிறார் யாஷ். அதே நேரத்தில் யாஷை வீழ்த்துவதற்காக எதிரிகள் தீட்டும் திட்டமும் செயல்பாட்டுக்கு வருகிறது. இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், கேங்ஸ்டர் உலகமும் ஒரே நேரத்தில் சிதறத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் யாஷின் மகன் வளர்ந்து அவரை பழிவாங்க துடிக்கிறான். தான் பெற்றெடுத்த மகனே யாஷை பழி வாங்க துடிக்கும்போது, யாஷின் வாழ்க்கை முற்றிலுமாக மாறி மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் யாஷ் என்ற தாதாவின் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் “டாக்ஸிக்” படத்தின் மீதிக் கதை.
ராயா மற்றும் டிக்கெட் என்ற தந்தை-மகன் என்ற இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் யாஷ், தனது கொடூரமான பார்வை மற்றும் உடல்மொழியின் மூலம் ராயா கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் இடங்களில் யாஷ் அதிக கவனம் பெறுகிறார். விதவிதமான உடைகளில் பவனி வந்தாலும், எப்போதும் மது மாது என்று போதை மயக்கத்தில் இருக்கும்போது இடையிடையே கண் இமைக்கும் நேரத்தில் எதிகளை சராமாரியாக சுட்டுத் தள்ளுகிறார். யாஷ் அறிமுகமாகும் காட்சியிலிருந்து கடைசிவரை அவர் தன் பிம்பத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘கேஜிஃஎப்’ படத்தில் கிடைத்த நல்ல பேரையும் புகழையும் இப்படத்தில் தவற விட்டு இருக்கிறார் யாஷ்.
நயன்தாராவின் கங்கா கதாபாத்திரம் கதையின் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அதற்குப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். படத்தில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
யாஷின் முதல் மனைவியாக வரும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக வரும் ருக்மணி வசந்த், காதலியாக வரும் தாரா சுதாரியா, எதிர்மறை வேடத்தில் வரும் ஹுமா குரேஷி என நாயகிகள் அனைவரும் தங்களது பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, காட்சித் தொழில்நுட்ப அசத்தல்களுக்கு ஏற்றவாறு 1947 முதல் கால் நூற்றாண்டு காலக்கட்டப் பயணத்தில் பின்புலங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் பிரமிப்பூட்டுகின்ற விதத்தில் ஒளிப்பதிவு செய்து படத்தைப் பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார்.
ரவி பஸ்ரூர்,விஷால் மிஸ்ரா,தனிஷ்க் பாக்சி ஆகிய மூவர் இசையமைத்துள்ளனர்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை அளவாக அமைந்திருந்தாலும்.ஆக்ஷன் காட்சிகளில் அதிக சத்தத்துடன் நம் காதை தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கி இருக்கும் கீது மோகன்தாஸ் ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்கியிருக்கிறார் என்றாலும், ஆனால், அந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை முழுமையாக இழுத்துச் செல்லும் திரைக்கதை இல்லாததே இப்படத்திற்கு முக்கியமான பலவீனமாகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்திற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பம் முதல் முடிவு வரை வன்முறைக் காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும் அதிகமாக வைத்து படம் பார்க்கும் ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கிறார் கீது மோகன்தாஸ் .
மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ மக்கள் பார்வையில் ஏமாற்றம்தான்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.