“ஏன் என்னை ஏதோ செய்தாய்”. – திரைப்பட விமர்சனம்!

5

சென்னை:

டி. அந்தோணி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான்  ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. இப்படத்தை டி. ஆண்டனி கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்..

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

சிறுவயதிலேயே தாயை இழந்து, தந்தையின் பாசத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் தனிமையில் வாழ்ந்து  வருகிறார் ஆண்டனி. அவரது தந்தை மனைவியை இழந்த சோகத்தில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இதனால் சிறுவயது முதலே அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் மனநிலையுடன் மது, புகை என எந்த இலக்கும் இல்லாமல் வாழ்கிறார் ஆண்டனி. காதல் மற்றும் திருமணம் போன்ற பந்தங்களை விரும்பாத அவர், தினசரி ஒரு பாலியல் தொழிலாளியை தன் வீட்டுக்கு வரவைத்து அவருடன் மனம் விட்டு பேசுவதை தன் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஒரு நாள் பாலியல் தொழிலாளியான மதுமிதா தாஸ், ஆண்டனியின் வீட்டிற்கு வருகிறார். மதுமிதாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்படும் முதல் சந்திப்பு, மற்றும் ஈர்ப்பு இருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. மதுமிதாவின் தன்மையான பேச்சும் மென்மையான குணமும் ஆண்டனியின் மனதை ஈர்க்க, அவளது அன்பான அரவணைப்பு அவரை மெல்ல மாற்றுகிறது. மதுமிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் விஷயம் அறிந்தும், இருவருக்குள்ளும் ஆழமான காதல் மலர்ந்து, திருமண முடிவை நோக்கியும் செல்கிறார்கள். தனது கடந்த காலத்தில் சந்தித்த வலிகளையும் ஆண்டனியிடம் பகிர்ந்து கொள்கிறார் மதுமிதா. தங்களது வாழ்க்கையில் ஏற்கனவே காயப்பட்ட இருவரும், அந்தக் காயங்களை மறந்து ஒன்றாக புதிய வாழ்க்கையை தொடங்க நினைக்கிறார்கள். இந்த சூழலில் ஆண்டனியின் மதுப் பழக்கம் அவரது காதலில் பெரும் சிக்கலை உண்டாக்கி, மதுமிதாவை  பிரித்து விடுகிறது. இறுதியில்  பிரிந்த இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ மீதிக்கதை.

கதை எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ஆண்டனி. எல்லாமே அவர்தான் என்பதால் படம் முழுவதும் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்.குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் இளைஞனின் மனநிலையை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மதுமிதாதாஸ் வங்காளப் பெண் வேடமேற்றிருக்கிறார்.அதனால் வங்காளம் ஆங்கிலம் தமிழ் என பலமொழிகளில் பேசுகிறார்.எந்த மொழித்தடையும் இல்லாத மெல்லிய உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார். அழகு தேவதை போல் இருக்கும் அவரை டி ஆண்டனி  கவர்ச்சி ஹீரோயினாக பயன்படுத்தியிருந்தால் படத்திற்கு பலம் சேர்ந்து இருக்கும்.

ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் லேட்கும் ரகம்தான். ஜோயி ரெடா அமைத்துள்ள பின்னணி இசை இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

முதல் படத்திலேயே நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பொறுப்புகளை வெற்றிகரமாக கையாண்டுள்ள டி. அந்தோணி, தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு உன்னதமான இயக்குனராக  தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு புதிய படைப்பாளியாக தமிழ்த் திரையுலகில் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு பேர் கடந்தகால வேதனைகளை தங்களது வாழ்க்கையில் சுமந்து வாழும் அவர்களுக்குள் உருவாகும் உறவு அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை நிதானமாக சொல்லும் முயற்சியில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் பார்ப்பவர்களை கண்டிப்பாக கவரும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.