CHENNAI:
காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!
முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.
முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.
கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.