சென்னை:
கருணாஸ் , நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி,கமலேஷ் ஜெகன், மோகன் ராமன், மொட்ட ராஜேந்திரன், ஷாஷா சிவகுமார்,ஒய்ஜி மகேந்திரன் , பிரபு,பூர்ணிமா பாக்யராஜ் ,நிழல்கள் ரவி, லொள்ளு சபா சாமிநாதன், பாண்டி, கவிதாலயா கிருஷ்ணன், தீபா ஷங்கர் ,கோதண்டம், சேரன் ராஜ், கொட்டாச்சி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “என்ன விலை”. இப்படத்திற்கு கதை எழுதி சஜீவ் பழூர் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ராமேஸ்வரம் கடற்கரை அருகில் தன் மனைவி மகன் மற்றும் தங்கையுடன் ஒரு எளிய முறையில் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மீனவர் கருணாஸ். தன்னிடம் பணம் ஏதும் இல்லாவிட்டாலும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கருணாஸ் ராமேஸ்வரம் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது மக்கள் கடலில் வீசும் காசுகளை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த சூழலில் அவர் கடலில் காசுகளை தேடும் போது ஒரு அற்புதமான பலவித கற்களால் ஆன தங்கப்பதக்கம் ஒன்று கிடைக்கிறது. அதை முதலில் ஒரு சாதாரண பதக்கம் என்று நினைக்கிறார் கருணாஸ். பிறகு தனக்கு தெரிந்த காவல்துறை காவலரிடம் அந்த பதக்கத்தைக் கொடுக்கிறார். காவல்துறையை சேர்ந்த காவலர் மோகன் ராம் அந்த பதக்கத்தில் தங்கமும் வைரமும் கலந்து இருப்பதை பார்த்து, ஒரு வைர கல்லை எடுத்து ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்று விடுகிறார்.
ஆனால் இந்த பதக்கத்தை விற்ற விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக காவல்துறை சேர்ந்தவர்கள் கருணாஸ் மீது திருட்டுப்பழி சுமத்துகிறார்கள். ஏற்கனவே கோவில் திருட்டு ஒன்று நடந்திருக்க, அதை முன்னிலைபடுத்தி, இந்த பதக்கம் கடலில் தான் கிடைத்தது என்று கருணாஸ் உண்மையை சொன்னாலும் நம்பாமல் அவரை கைது செய்து லாக் அப்பில் அடைகின்றனர். லாக்கப்பில் உள்ள கருணாசை அங்குள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருணாஸை காப்பாற்ற வழக்கறிஞர் நிமிஷா சஜயன் உதவி செய்ய முன் வருகிறார். உண்மையிலேயே கருணாஸ் குற்றவாளி இல்லை என்பதை அவர் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்க நீதிபதி முன் நின்று வாதாடுகிறார்.
அவரது வாதத்திறமையால் கருணாஸை நிரபராதி என்று நிரூபிக்கும் நிமிஷா சஜயன், எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்ட ஒரு சாதாரண மீனவன் கருணாஸ் குரலாக நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். கருணாஸிற்கு நேர்ந்த அவமானங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் இழந்த மானத்திற்கும் ‘என்ன விலை’ என்று கேட்கிறார். இறுதியில் ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்று இல்லை, நேர்மைக்கு எப்போதும் ஒரு விலை இருக்கிறது என்ற ஒரு நல்ல கருத்தை கூறும் கதைக்களம் தான் ‘என்ன விலை’ படத்தின் கிளைமாக்ஸ்..
இந்தப் படத்தில் தவசிமுத்து பாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். இதுவரை அவர் ஏற்றதிலேயே சிறப்பான கதாபாத்திரம் இதுதான் என்று சொல்லும் அளவிற்கு அதில் அவர் இயல்பாகவும் அனைவரையும் ஈர்க்கும் படியாகவும் தனது உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடித்துள்ளார் . அவர் மீது திருட்டுபழி சொல்லப்படும்போது கதிகலங்கி நிற்கும் காட்சியில் நம்மையும் கலங்கவைத்துவிடுகிறார்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கருணாசுக்கு ஆதரவாக குற்றச் சாட்டுகளை எதிர்த்து கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் தனது வாதங்களை தெளிவாகவும் துடிப்புடனும் எடுத்து வைப்பது கவனத்தை ஈர்க்கிறது.
கருணாஸின் மனைவியாக விஜயலட்சுமி வீரமணி நடித்திருக்கிறார். மிக இயல்பாக வந்து அழகாக அந்தக் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் .கருணாசின் தங்கையாக வரும் ஷாஷாவும் இயல்பான நடிப்பில் பதிகிறார்.கருணாஸின் மகனாக வரும் சிறுவன் கமலேஷ் ஜெகன் சில காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை பெறுகிறார்.
வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கல் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, தனது ஒளிப்பதிவில் இப்படத்தின் கதை ராமேஸ்வரத்தில் தொடங்கி மதுரை, ஆந்திரா, பீகார் என்று பல இடங்களுக்குச் செல்லும்போது இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை யதார்த்தமாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
இந்த கதையில் பல்வேறு காட்சிகளின் சூழலுக்கு ஏற்றவாறு அதன் தன்மைக்கேற்ற வித்தியாசமான பின்னணி இசையையை மிக சிறந்த முறையில் இந்தப் படத்தில் வழங்கி இருக்கிறார் சாம் சி.எஸ்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் இயக்குனர் சஜீவ் பழூர் தமிழகம்,கேரளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நமது நாட்டில் உள்ள சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களை காட்சிகள் மூலம் அம்பலப்படுத்தியிருப்பதோடு, அதற்கு உரிய விலை இதுதான் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். நீதித்துறை, அதன் இரக்கமற்ற பார்வை, அதிகார வர்க்கத்தின் அலட்சியம், ஊடகங்களின் வியாபாரத்தனம் இவை அனைத்தையும் வெளிப்படுத்தும்படி காட்சிகளை படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் ‘என்ன விலை’ வெறும் ஒரு படம் அல்ல! அனைவரையும் சிந்திக்க வைக்கும் படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.