“ப்ளூ ஸ்டார்” – திரைப்பட விமர்சனம்!

132

சென்னை:

இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”  கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த இப்படம் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

1990-களின் இறுதியில், அரக்கோணம் அருகில் உள்ள பெரும்பச்சை என்ற கிராமத்தில் இப்படத்தின் கதை நிகழ்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும்,  இவரது தம்பியான பிரித்வியும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற பெயரில் கிரிக்கெட் அணியை உருவாக்கி தனது நண்பர்களுடன்  விளையாடி வருகின்றனர். மற்றும் வேறொரு அணியான, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் ’ஊர்’ சார்பான ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணி. இதன் தலைவராக ஷாந்தனு பாக்யராஜ் இயங்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட சண்டை காரணமாக, மேற்கண்ட இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணியை எதிர்த்து விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பது அசோக் செல்வனின் ஆசை. அதன்படி ஒருநாள் ஊரில் அனுமதி வாங்கி கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் கிரிக்கெட் நன்றாக விளையாட தெரிந்த ‘கிளப்’ அணி வீரர்களை பணம் கொடுத்து அழைத்து வந்து, தனது ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணி சார்பில் விளையாட வைத்து, வெற்றி பெறுகிறார் ஷாந்தனு பாக்யராஜ். ‘கிளப்’ அணி வீரர்களை வைத்து வெற்றி பெற்றதால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க  ‘கிளப்’ அணியினர் இருக்கும் இடத்திற்க்கு செல்கிறார் ஷாந்தனு பாக்யராஜ். பணத்தை பெற்றுக் கொண்ட ‘கிளப்’ அணியினர் கிளப்புக்கு சென்ற சாந்தனு பாக்கியராஜை கேவலமாக பார்த்து,  இங்கே வர வேண்டும் என்றால் ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று அடித்து விரட்டுகிறார்கள்.

ஊருக்குள் நாம்தான் உயர்ந்தவர் என்று நினைக்கும் சாந்தனு பாக்கியராஜுக்கு இது அதிர்ச்சியை கொடுக்கிறது. இதனால் வேதனையடைந்த  ஷாந்தனு பாக்யராஜ்,  நம்மை இழிவாக பார்த்து கிண்டலடிக்கிறானே என்பதை நினைத்து கண் கலங்குகிறார். அந்த கிளப் அணியை வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்ட ஷாந்தனு பாக்யராஜ், ‘ப்ளூ ஸ்டார்’  அணியின் தலைவராக இருக்கும் அசோக் செல்வனிடம் நடந்த விஷயத்தை கூறுகிறார். ஏற்கனவே  ‘கிளப்’ அணியினர் மீது வெறுப்புடன் இருந்த அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜுடன் சமாதானமாகி இரு அணிகளும் ஒன்றிணைந்து கிளப்’ அணியினரை தோற்கடிக்க களமிறங்குகின்றனர். ப்ளூ ஸ்டார் அணியும், ஆல்ஃபா பாய்ஸ் அணியும் ஓரணியில் நின்று,  அவர்கள் கிளப் அணியிடம் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதை அரசியல், சமூக நீதி  கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயக்குமார்.

இப்படத்தில்  கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,  மீசை இல்லாமல், சிறு வயது பருவத்துக்குரிய  கல்லூரி மாணவராகவும், கிரிக்கெட் வீரராகவும் காதல், கோபம், அவமானம் என அத்தனை உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். அனல் தெறிக்கும் முகத்தோடு, விளையாட்டில் ஆக்ரோஷமாகவும், காதலில் மனம் உருகும் காட்சிகளில் சிறப்பாக நடித்து ரசிக்க வைக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த உற்சாகத்துடன் நடித்திருக்கும் இவர் முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாந்தனு பாக்யராஜ், தனது கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பதற்கு தனக்கொரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என வெகுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்த அவருக்கு இந்த படத்தில் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உண்மையில் மனைவியாகிவிட்ட கீர்த்திபாண்டியன் இப்படத்தில் அசோக்செல்வனின் காதலியாக பாடல்களுக்கு மட்டும் பயன்படும் கதாநாயகியாக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தில் அதன் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்விராஜ், துடுக்கான இளைஞராக காமெடியும், காதலும் கலந்த நடிப்பில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

லிஸ்ஸி ஆண்டனி, குமரவேல், பக்ஸ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை  உணர்ந்து நடிப்பில் அனைவரது மனதில் நிற்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் கதைக்கேற்ரவாறு அரக்கோணம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கதைக் களத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த கிரிக்கெட் விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு அனைவரும் ஒரே இனம் என்பதை தோலுரித்து பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் வேறுபாடுகளைக் களைந்து ஒருங்கிணையவேண்டும் என்கிற மிக மிக அழுத்தமான ஆழமான கருத்தைப் பதிவு செய்து தொய்வின்றி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கி இருக்கும் இயக்குனர்  எஸ்.ஜெயக்குமாரை பாராட்டியே தீர வேண்டும்.

மொத்தத்தில் ‘ப்ளூ ஸ்டார்’ – படத்தை அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு முக்கியமான படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.