சென்னை:
யோகிபாபு, மகேஷ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் மாரிமுத்து, நமோ நாராயணா , இனியா ஆகியோர் நடித்துள்ள படம்தான் “தூக்கு துரை”
காமெடி கலந்த பேய் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களான மாரிமுத்துவும், நமோ நாராயணாவும் அந்த ஊரில் உள்ளவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பாதுகாத்து வருகிறார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை கோவில் திருவிழா நடக்கும் போது மாரிமுத்து தன்னிடம் பாதுகாப்பாக வைத்து இருக்கும் விலைமதிப்பற்ற ஒரு உன்னதமான கிரீடத்தை எடுத்து வந்து அந்த ஊர் மக்களுக்கு காட்டுவார். இந்நிலையில் அந்த ஊரில் கோயில் திருவிழா நடக்கும் போது அங்கு வரும் யோகி பாபுவுக்கும், மாரிமுத்துவின் மகள் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. அந்த திருவிழா நடக்கும்போது மாரிமுத்துவின் வீட்டில் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடத்தை இனியா எடுத்துக்கொண்டு தன் காதலன் யோகி பாபுவுடன் ஓடுகிறார்.
இந்த ஊரை விட்டு ஓடும் போது மாரிமுத்துவின் ஆட்கள் அவர்களை தொடர்ந்து சென்று அடித்து துவைத்து யோகி பாபுவை கிணற்றில் போட்டு கொளுத்தி விடுகின்றனர். இந்நிலையில் அந்த கிரீடம் கிணற்றுக்குள் உள்ள ஆழமான பகுதியில் சென்று விடுகிறது. அந்தக் கிணற்றில் இறந்து போன யோகி பாபு பேயாக வந்து அந்த ஊரில் உள்ள அனைவரையும் பயமுறுத்துகிறார். இந்த சூழ்நிலையில் எப்படியாவது மாரிமுத்து வீட்டில் இருக்கும் கிரீடத்தை எடுப்பதற்காக சென்றாயன் தனது நண்பர்களுடன் கொள்ளையடிக்க செல்கிறார். அந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அது போலியானது என்று தெரிய வருகிறது. அப்படி என்றால் உண்மையான கிரீடம் எங்கே என்று ஊரில் உள்ள அனைவரும் கேள்வி கேட்கும் போது அங்குள்ள பாழடைந்த கிணற்றில் கிரீடம் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்த மாரிமுத்துவும் சரி, அந்த ஊரில் உள்ள மக்களும் சரி பாழடைந்த கிணற்றில் உள்ள கிரீடத்தை எடுக்க பயப்படுகின்றனர். இறுதியில் அந்த கிணற்றில் உள்ள கிரீடத்தை எடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் “தூக்கு துரை” படத்தின் மீதி கதை.
யோகி பாபுவை கதாநாயகன் என்று நினைத்தால், அவரை ஒரு சில காட்சிகளிலேயே கொன்று விட்டு கதையை தொடங்குகிறார்கள். இருந்தாலும் தனது வழக்கமான தனது நக்கலான வசனங்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஆனால், அவர் சில காட்சிகளில் மட்டுமே வருவதால் மற்ற காட்சிகளை ரசுக்க முடியவில்லை. யோகி பாபுவுக்கு அதிகமான காட்சிகளில் இல்லை என்றாலும், அவரை மையக் கதாபாத்திரமாக வைத்து கதை எழுதி இருப்பதை பாராட்டலாம்.
யோகி பாபுக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அவருக்கு இனியாவை ஜோடியாக போட்டு அவரையும் ஒரு சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணியை அறிமுகப்படுத்தி படத்தைத் தொடங்கி வழிநடத்தி அதே பாணியில் முடித்துவைக்கவும் செய்கிறார்கள். இந்த கூட்டணி கடுமையாக உழைத்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.
மறைந்த நடிகர் மாரிமுத்து,நமோ நாராயணன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அவர்களுக்குள் நடக்கும் போட்டியும்தான் படத்தை நகர்த்த உதவியாக இருந்து சிறப்பு செய்து இருக்கிறது.
கே.எஸ்.மனோஜ் இசை அமைத்திருக்கிறார். ரவி வர்மா ஒளிப்ப திவு செய்துள்ளார். இருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து காட்சிகளை சிறப்பாக அமைத்திருந்தாலும், கதையில், காதல், திருடர்கள் வாழ்வு, சகோதர மோதல் ஆகியனவற்றோடு ஒரு பேயையும் வைத்து திரைக்கதை எழுதியுள்ள இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத்,.படத்தின் இறுதியில் குட்டியாக ஒரு மெசஜை நகைச்சுவை பாணியில் சொல்லி இருப்பதை பாராட்டலாம்..
மொத்தத்தில், இந்த ‘தூக்குதுரை’ நகைச்சுவை ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.