‘சிங்கப்பூர் சலூன்’- திரை விமர்சனம்!

114

சென்னை:

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில்  டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சௌத்ரி, ரோபோ சங்கர், கிஷான் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’

சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

கதாநாயகன் ஆர்ஜே பாலாஜி தென்காசியில் தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜியுடன், அவருடைய நண்பன் கிஷன் தாஸ் சிறு வயது முதல் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள்.அந்த ஊரில் லால் ஒரு சலூன் வைத்துள்ளார். அவரது முடி வெட்டும் அழகை பார்த்து தானும் எதிர்காலத்தில் மிகப் பெரிய சிகை அலங்கார நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆர்ஜே பாலாஜி. ஆனால் அவனுடைய பெற்றோர்கள் பொறியியல் படிப்பை படிக்கும்படி கூறுகிறார்கள். ‌பின்னர் வளர்ந்து பெரியவனாக பிறகு பெற்றோர்கள் கல்லூரியில் பொறியியல் படிக்க வற்புறுத்தியதால் நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிப்பை முடித்ததும், அவரது கல்லூரியிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கல்லூரியில் பொறியியல் படித்து முடித்த பிறகு தன் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு சலூன் கடை வைக்க முடிவு செய்கிறார் ஆர்ஜே பாலாஜி. இதனால் கல்லூரியில் ஒன்றாக படித்த தனது காதலியும்,  சிகை அலங்கார தொழிலை விரும்பாமல், வசதியுள்ள வேறொரு பையனை திருமணம் செய்ய இருப்பதாக கூறி ஆர்.ஜே. பாலாஜியை ஏமாற்றி விடுகிறார். அதனால் எதைப்பற்றியும் கவலைப்ப்டாமல் இந்தியாவின் நம்பர் ஒன் சலூனில் வேலைக்கு சேர்கிறார்.

கல்லூரியில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவி தன்னை விரும்புவதாகவும்,  தன்னை திருமணம் செய்து கொள்வதற்காகவும் தனது நண்பன் கிஷன் தாஸ் மூலம் தெரிய வருகிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஆர்.ஜே. பாலாஜி திருமணம் செய்துக் கொண்ட பிறகு  பெரிய அளவில் மாடர்ன் சலூன் கடையாக ஆரம்பிக்க நினைத்து கடன் வாங்கியும் வேறு வழியியிலும் பணத்தை திரட்டி ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற நவீன முறையில் ஒரு கடையை ஆரம்பிக்கிறார். ஆனால் அதற்கு பல்வேறு தடைகளும்,  சிக்கல்களும் வருகின்றன. அது என்ன சிக்கல்? அதிலிருந்து ஆர்.ஜே. பாலாஜி மீண்டு வந்தாரா?  இல்லையா? என்பதுதான் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜேபாலாஜி சிகை அலங்கார கலைஞராக தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்பதைவிட  அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும் இதில் அதிக ஈடுபாட்டுடன் மிக சிறப்பாக  நடித்துள்ளார். தனது வழக்கமான கேலி, கிண்டல் வசனங்களை குறைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ‌ அதனை மட்டும் கொடுத்துள்ளார்.  நகைச்சுவை  கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை  ரசிகர்கள் காமெடி உணர்வோடு தான் பார்ப்பார்கள். அந்த இமேஜை உடைத்தெறிந்து தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ஆர்.ஜேபாலாஜி.

இந்தப்படத்தில் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு முற்பாதியின் பலமாக சத்யராஜ் இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு மழை.தன் வழக்கமான பாவனைகள் எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால், ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். முக்கியமாக லால் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

அரவிந்த் சாமி, ஜீவா இயக்குநர் லோகேஷ்கனகராஜ், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் கதைக்களத்தை மட்டும் இன்றி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

குலத்தொழில் கருத்துக்கு எதிராகக் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கோகுல்,அதைப் பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.தனது பாணியில் படத்தை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், தான் சொல்ல வந்த கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது. ஜாதி பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம் என்பதை மிக தெளிவாக அனைவரும் பாராட்டும்படி  இயக்கி இருக்கும் இயக்குனர் கோகுலுக்கு கைத்தட்டல் கொடுக்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’  அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.