’சைரன்’ திரைப்பட விமர்சனம்!

122

சென்னை:

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்தான் “சைரன்” இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி,  அழகம் பெருமாள்  யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

கதாநாயகன் ஜெயம் ரவி தன் மனைவியை கொன்றதாக தண்டனை பெற்று 14 வருடமாக சிறையில் அடைபட்டு கிடக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜெயம்ரவியின் மகள் யுவினா தன் தந்தை கொலைகாரனாக ஜெயிலில்  இருப்பதை அறிந்து பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள்.  பள்ளியில் உள்ள தனது சக தோழிகளிடம்  தனது தந்தை வெளி நாட்டில் பணி புரிவதாக சொல்லி சமாளிக்கிறாள். இந்நிலையில் சிறையில் இருக்கும் பல குற்றவாளிகள் பரோலில் வெளியே சென்றாலும் ஜெயம்ரவி மட்டும் செல்ல மனம் இல்லாமல் இருக்கிறார். அந்த சமயத்தில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவரை சிறை அதிகாரியே பரோலில்  செல்ல அனுமதிக்கிறார் அப்போதும் ஜெயம்ரவி மறுக்கவே “தந்தையை பார்க்கச் செல்லும்போது உன் மகளையும் நீ பார்க்கலாம்” என்று ஜெயில் அதிகாரி சொல்ல அதை ஏற்று ஜெயம்ரவி பரோலில் வெளியே வருகிறார்.

இந்த பரோல் காலத்தில் அவரை எந்நேரமும் உடனிருந்து கண்காணிக்கும் நிழல் காவலராக யோகி பாபு நியமிக்கப்படுகிறார். அவரது 14 வயது மகள் யுவினா அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல், தன் அத்தை வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். இந்நிலையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவரான அழகம் பெருமாள், துணைத் தலைவரானஅஜய், ஜெயம்ரவியின் மகள் யுவினாவை ஈவ் டீசிங் செய்த இளைஞன் விக்கி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகளுக்கு காரணம் ஜெயம்ரவிதான் என்று பெண் காவல்துறை அதிகாரி கீர்த்தி சுரேஷ்  குற்றம் சாட்டுவதுடன் அவரை கைது செய்து மீன்டும் சிறையில் அடைக்க பலவிதத்தில் முயற்சி செய்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கூறும் ஜெயம் ரவி, அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார். ஜெயம் ரவிதான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். அப்படி என்றால் அந்த கொலைகளை செய்தது யார்? உண்மையில் நடந்தது என்ன? ஜெயம்ரவியின்  மகள் யுவினா மனம் மாறி தன் தந்தையை ஏற்றுக்கொண்டாரா? என்பதுதான் “சைரன்” படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகன் திலகவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். கொஞ்சம் நரைத்த தாடி, மீசை, தலைமுடியுடன், இதுவரை எந்தப் படத்திலும் தோன்றாத நடுத்தர வயது கெட்டப்பில் வித்தியாசமாகத் தோன்றி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். மகளுக்குத் தெரியாமல் அவரை பாசத்துடன் பார்த்து மகிழ்வது போன்ற காட்சிகளில் உருக்கமாக நடித்து நம்மை கண் கலங்க வைக்கிறார். முற்றிலும் மாறாக, ஃபிளாஷ்பேக்கில், இளமையான தோற்றத்தில் வந்து, ஆம்புலன்ஸ் டிரைவராக சமூக சேவை செய்வது, காதல் வயப்படுவது, காதலியை மனைவியாய் கரம் பிடிப்பது, எதிரிகளை பந்தாடுவது என துடிப்பும் துள்ளலுமாய் நடித்து, வேறொரு கோணத்தில் அசத்தியிருக்கிறார்.

ஒரு கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக  நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது மென்மையான நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, கடுஞ்சொல் பேசி கம்பீரமாக நடிக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கதாநாயகனை சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியில் அற்புதமாக நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வாய் பேச இயலாத – காது கேளாத மாற்றுத் திறனாளி நர்ஸாக, ஜெயம் ரவியின் மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வரும் காட்சிகள் அதிகமாக இல்லை என்றாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.

சாதிவெறி பிடித்த டி.எஸ்.பி நாகலிங்கம் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு ஆரம்பத்தில் நமக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்து விடுகிறது.

பரோலில் வெளியே வந்த கதாநாயகனின் ’நிழல் காவலர்’ வேளாங்கண்ணி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நாயகனுடன் சேர்ந்தே வருகிறார். படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த யுவினா  என அனைத்து நட்சத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையை அதிகம் சத்தமின்றி அளவாக கையாண்டிருக்கும் ஷாம்.சி.எஸ், சில இடங்களில் நம் காதை பிளக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் ஒளிப்பதிவு ஜெயில் காட்சிகளையும், மற்றும் உள்ள உணர்வு பூர்வமான காட்சிகளையும் சிறப்பாக படமாக்கி இருப்பதும் அதற்கேற்ற லைட்டிங் கலர் டோன் அமைத்திருப்பது படத்திற்க்கு பெரிய பலத்தை சேர்த்து இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் கிரைம் திரில்லர் வரிசையில் கதை எழுதி இயக்கியிருக்கிறார்.  இது போன்ற கதைகள் நிறைய வந்திருந்தாலும் கதாபாத்திரங்களை வித்தியாசமாக வடிவமைத்து, காட்சிகளில் புதுமையைப் புகுத்தி, அப்பா – மகள் பாசம்-அளவான நகைச்சுவை ஆகியவற்றை சேர்த்து நேர்த்தியாக இப்படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பல திருப்பங்களை வைத்து சுவாரஸ்யமாக, சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக சமூகநீதியை உயர்த்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு உன்னதமான  கதையை எழுதி இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், இந்த ‘சைரன்’ சத்தம் ரசிகர்களின் மனதில் ஒலிக்கும்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.