‘எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம்!

12

சென்னை:

டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு தயாரித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டீ ஏ  நந்தினி ரெட்டி.

இப்படத்தில் சமந்தா ,திகந்த் மஞ்சாலே,கௌதமி ,ஆனந்த் ,ஸ்ரீ லக்ஷ்மி ,குல்ஷன் தேவய்யா ,மன்ஜூஷா சைதன்ய கிருஷ்ணா , ஸ்ரீமுகி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார் திகந்த் மஞ்சாலே. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் சமந்தாவுக்கு தனது கணவரின் வீட்டுக்குத் தொடர்பில்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த சூழலில் தனது காதல் கணவனின் தங்கையின் திருமணத்தை முன்னிட்டு அவரது ஊருக்கு இருவரும் வருகிறார்கள். தங்களது பூர்வீக வீட்டிற்கு இருவரும் வரும்போது, மாமியார் கௌதமியும், அங்குள்ள மற்றவர்களும் சமந்தாவை வெறுப்புடன் பார்க்கிறார்கள். ஆனால் அங்கே இளைய மருமகள் அங்குள்ள குடும்பத்தினருக்கு ஏற்றபடி நடந்து கொண்டு  நல்ல பெயர் எடுத்து இருக்கிறார். மிகுந்த ஆச்சாரமும் கட்டுப்பாடும் நிறைந்த அந்தக் குடும்பத்திற்குள் நுழைந்து சமையல் , சம்பிரதாயம்,பக்தி என்று அவர்களுக்கு ஏற்றபடி தன் திறமையைக் காட்டிக் குடும்பத்தினரைக் கவர முயற்சி செய்கிறார் சமந்தா. குடும்பத்தினரின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற போராடும் அவர், மெதுவாக அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கத் தொடங்குகிறார்.

இந்த சமயத்தில் இன்னொரு பக்கம் கொலைத் தண்டனைக் கைதி குல்ஷன் தேவய்யா, சிறையிலிருந்து தப்பித்து சமந்தாவைத் தேடி வருகிறார். ஏற்கெனவே தீவிரவாத கும்பலுடன் சமந்தா இருந்ததால், அவர்  தன்னுடன் வரவேண்டும் இல்லை என்றால் குடும்பத்தினரைப் பழி வாங்குவேன் என்று மிரட்டுகிறார் குல்ஷன் தேவய்யா. சமந்தா தீவிரவாத கும்பலின் தலைவன் குல்ஷன் தேவய்யாவிடமிருந்து தப்பித்து, தன் பெயரை மாற்றிக்கொண்டு வாழும் ஒரு ஆபத்தான முன்னாள் போராளி என்ற அதிர்ச்சியான உண்மை தெரிகிறது.  ஆனாலும் அதைப்பற்றி கவலைப்ப்டாமல் தன் கணவர் குடும்பத்தினரை ஆபத்தில் இருந்து காப்பாற்ற அந்த கொடூர கும்பலை ஒற்றை ஆளாகத் துவம்சம் செய்கிறார் சமந்தா. இறுதியில் தனது குடும்பத்தினரை காப்பாற்றி அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் “எங்கள் தங்கம்” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சமந்தா அந்த ஸ்வர்ணா என்ற கதபாத்திரத்தில் ஒரு குடும்பத்துக் குத்து விளக்கு போல மிகவும் அமைதியாகத் தோன்றுகிறார். புகுந்த வீட்டினரை கவர்வதற்காக தன்னுடைய தோழியை ஊருக்கு வரவழைத்து லாட்ஜில் தங்க வைத்து விடியற்காலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் அனைவரும் எழுவதற்குள்ளாக பல உணவு பதார்த்தங்களை செய்து வீட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கும் அந்த காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் துப்பாக்கி சூடு காட்சிகளை ஆச்சரியப்படும்  விதத்தில் கையாண்டிருக்கும் சமந்தா, அவரது அதிரடி சண்டைக் காட்சிகள்  அதிர வைக்கிறது.

சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கும் நடிக என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

எதிர்மறை வில்லன் வேடமான கர்ணா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் குல்சன் தேவய்யா,அதற்கேற்றவாறு  நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் கலகலப்பாகக் குடும்பத்திற்குள் நடக்கும் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இவை இரண்டுமே கூடுதல் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளன.

பெண்களுக்குப் பிடிக்கும் வகையிலான ஒரு கதையாக கதாசிரியர்கள் ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி எ உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களது கதைக்குத் திரைக்கதை அமைத்திருக்கும் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை வழக்கமாக இயக்கும் இயக்குனர் பி வி நந்தினி ரெட்டி இந்தப் படத்தில் முதல் பாதி கதாபாத்திரங்களின் உறவுகளை உருவாக்க, இரண்டாம் பாதி முழுக்க மர்மம் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்களை மையமாக வைத்து சமந்தாவை ஆக்‌ஷன் நாயகியாக ஏற்றுக் கொள்ள வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’  குடும்ப ஆக்ஷன் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.