சென்னை:
குட்டி புலி சரவணன் சக்தி இயக்கத்தில் உருவான ‘கிளாஸ் மேட்ஸ்’ படத்தில் அங்கயர் கண்ணன், பிரணா, குட்டி புலி சரவணன், சக்தி, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ் ஆர் ஜாங்கிட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை முகவை ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ்’ சார்பாக அங்கயர் கண்ணன் தயாரித்திருக்கிறார்.
தற்போது தமிழகத்தில் திரையரங்குகளில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் இப் படத்தின் கதையை பொருத்தவரையில்,
சரவணன் சக்தி, அங்கயர் கண்ணன் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். சிறுவயதிலேயே மதுவுக்கு அடிமையான அங்கயற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் எந்நேரமும் குடியும் கும்மாளமுமாக இருக்கும் இணை பிரியாத மொடாக்குடியர்களாக வலம் வருகிறார்கள். டாக்ஸி டிரைவராக இருக்கும் அங்கயற்கண்ணன், கதாநாயகி பிராணாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இல்வாழ்க்கையை நடத்தலாம் என்கிற சூழ்நிலையில், தனது அப்பாவியான புதுமனைவியை வீட்டில் தவிக்க விட்டு, அங்கயற்கண்ணன் தான் கார் ஓட்டி சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் மதுவுக்கு செலவழித்து, குடித்துக் கொண்டே இருக்கிறார்.அவருக்கு துணையாக இருக்கும் அவரது மாமா ஷரவணசக்தி, மனைவி வேலை செய்து கொடுக்கும் பணத்தில் குடித்து ஜாலியாக இருக்கிறார்கள்.
குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, அடுத்தவர்களின் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது. இதனிடையே, தன் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஐ.ஏ.எஸ் கனவுடன் பிளஸ்-2 படிக்கும் மகள் அபி நட்சத்திரா ஆகியோரின் அறிவுரையைக் கேட்டு குடிப்பழக்கத்தை கைவிட்டு திருந்தி வாழும் மயில்சாமியை, மீண்டும் குடிகாரராக மாற்றி விடுகிறார்கள். இந்நிலையில் அங்கயற்கண்ணன், ஷரவணசக்தி, மயில்சாமி ஆகிய மூவரும் உச்சக்கட்ட போதையில் காரில் செல்லும்போது, பயங்கர விபத்து ஏற்படுகிறது. இதில் மயில்சாமி உயிரிழந்து அவரது குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது.அதைக் கண்டு ஷரவண சக்தி அங்கயற்கண்ணன் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மதுவினால் இவர்களது வாழ்க்கை நாசமாகிப் போனதை நினைத்து வருந்துகிறார்கள். இதனையடுத்து அவர்கள் எடுக்கும் முடிவு என்ன? மது குடிப்பதை விட்டு விட்டு திருந்தினார்களா? இல்லையா? என்பதுதான் ‘கிளாஸ் மேட்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நாயகனாக இருந்தாலும், தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றபடி ஏற்றபடி அளவாக நடித்து அனைவரையும் கவர்கிறார். மது குடித்து விட்டு அவர் போதையில் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருந்தாலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. புதுமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவமிக்க நடிகர் போல தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் அங்கயற்கண்ணனின் மாமாவாக நடித்திருக்கும் ஷரவணசக்தி, தனது வழக்கமான பாணியில் வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.
கதாநாயகன் அங்கயற்கண்ணனின் புதுமனைவியாக, நாயகியாக நடித்திருக்கிறார் பிரணா. கிராமத்துப் பெண்ணுக்குரிய பாந்தமான அழகிய முகத்துடன் அப்பாவியாக நடித்து, குடிகாரக் கணவனை விட்டுக் கொடுக்காமல் போலீஸிடம் பொய் சொல்லும் காட்சியில் நம் கண்களைக் கலங்க வைத்து விடுகிறார்.
குடிகாரர்களை குணப்படுத்த வந்துவிட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, மயில்சாமி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
அருண்குமார் செல்வராஜின் நேர்த்தியான ஒளிப்பதிவு இப்படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது. பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது..
கதாநாயகனின் மாமாவாக, இருவரில் ஒருவராக நடித்திருக்கும் குட்டிப்புலி ஷரவணசக்தியே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடிப்பழக்கத்துக்கு எதிராக இயக்குனர் முன்வைக்கும் மெசேஜ் வலிமையானது,என்றாலும் இந்த படத்தைப் பார்த்து குடிமகன்கள் திருந்துவார்களா? என்பது சந்தேகம்தான்.
மொத்தத்தில், ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தை அனைத்துத் தரப்பினரும் கண்டு ரசிக்கலாம்!