‘நினைவெல்லாம் நீயடா’ – திரைப்பட விமர்சனம்!

181

சென்னை:

ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன்,மனிஷாயாதவ், சினாமிகா, யுவலக்ஷ்மி, ரோஹித், கிங்ஷ்லி, மனோபாலா,மதுமிதா,ஆர்வி.உதயகுமார்,பி.எல்.தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில்  வெளிவந்து இருக்கும் படம்தான் ‘நினைவெல்லாம் நீயடா’

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

பிரஜன் தான் படிக்கும் பள்ளியில் புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்திருக்கும் யுவலட்சுமி மீது காதல் கொள்கிறார். தன் காதலை எப்படியாவது யுவ லட்சுமியிடம்  சொல்லி விட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்கிறா.ர் ஆனால் தன் காதலை வெளிப்படையாக பிரஜன் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் பள்ளியின் இறுதி படிப்பு முடியும் தருவாயில் தன் காதலி யுவ லட்சுமியிடம் காதலைப் பற்றி சொல்லி,  காதல் கடிதம் கொடுக்கிறார். இந்த சூழ்நிலையில் யுவ லட்சுமி வெளிநாட்டில் இருக்கும் உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை பார்க்கச் சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில் பிரஜன், தன் காதலியை நினைத்து உருகுகிறார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் உன்னுடைய காதலி மீண்டும் இங்கு வர மாட்டாள்..ஆகவே உன் மாமன் மகளை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்துகின்றனர்.

ஆனால் மாமன் மகளை திருமணம் செய்ய பிடிக்காத சூழ்நிலையில் குடும்பத்தாருக்காக அதை ஏற்று அவளை திருமணம் செய்து கொள்கிறார் பிரஜன். மாமன் மகளை திருமணம் செய்து கொண்டாலும் பிரஜனுக்கு அவளை பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதனால் வேதனை அடைந்த பிரஜன் தன் காதலை நினைத்து மதுவை குடித்து குடிகாரனாகி விடுகிறார். இதனைக் கண்ட அவரது மாமன் மகளின் மனம் பேதலித்து பைத்தியமாகி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்… இந்த நிலையில் வெளிநாடு சென்ற சுவலட்சுமி மீண்டும் இந்தியா திரும்புகிறார். சுவலட்சுமிக்கு திருமணம் ஆகி இருக்கும் என்று கூறிய குடும்பத்தார் மத்தியில் அவள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரஜனுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

திருமணம் செய்து கொண்ட மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் யுவலட்சுமி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார் பிரஜன். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் யுக லட்சுமி தன் காதலி இல்லை என்று பிரஜனுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரஜன் தன் மனைவியுடன் இணைந்தாரா? இல்லையா?  என்பதுதான் ‘ நினைவெல்லாம் நீயடா’ படத்தின் மீதி கதை.

கதாநாயகன் பிரஜன் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக நடித்து, அதனை சிறப்பாக  வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் பள்ளி பருவத்தில் பிரிந்த காதலிக்காக, சோகத்தோடு காத்திருக்கும் மனநிலையை தனது நடிப்பில் மட்டும் இன்றி,  மாறுபட்ட முறையில் வெளிபடுத்தி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

பல வருடங்கள் கதாநாயகனைக் காத்திருக்க வைத்த நாயகியாக நடித்திருக்கிறார் சினாமிகா. திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பையும் தோற்றத்தையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரஜனின் அத்தை மகளாக, அவரை ஒருதலையாக காதலிக்கும் மனிஷா யாதவ், தனது வெறித்தனமான காதலை வெறித்தனமான நடிப்பு மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.

கதாநாயகன் நாயகியரின் பள்ளிப்பருவத் தோற்றத்தில் நடித்திருக்கும் ரோகித், யுவலட்சுமி இருவரும் கதைக்கேற்றபடி  கதாபாத்திரத்தை புரிந்துக் கொண்டு அளவாக நடித்திருக்கிறார்கள்.

நகைச்சுவைக்காக ரெடின் கிங்ஸ்லி தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து சிரிக்க வைக்கிறார். ஆசிரியராக நடித்திருக்கும் மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நட்சத்ரா ஆகியோர் தங்களது பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜாபட்டாச்சார்ஜி, படத்தை வண்ணமயமாகக் காட்டி அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

நமது வாழ்க்கையில் பள்ளீயில் படிக்கும்போது ஏற்பட்ட முதல் முதலாக நம் மனதில் உருவாகும் காதல் எப்பொழுதுமே நம் நினைவில் இருந்து விலகாது. அந்த காதலை என்றும் மறக்க முடியாது  என்பதை உணர்த்தும் வகையில் கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.எத்தனையோ பேர் வாழ்க்கையில் முதல் முதலாக உதயமாகும் முதல் காதல் அனைவருக்கும் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அப்படி இருந்தாலும் அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்ற கருத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன். அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘நினைவெல்லாம் நீயடா’  காதலர்களுக்கு விருந்து அளிக்கும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.