சென்னை:
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரஹீம், சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘ரெபெல்’ திரைப்படத்தை நிகேஷ் ஆர்.எஸ் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மூணாரில், 1980-ஆம் ஆண்டு நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை மையமாக வைத்து கதை தொடங்குகிறது. மூணாரில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய வேண்டாம் என தனது பிள்ளைகள் அவர்களது வாழ்க்கையில் படித்து பட்டம் பெற்று தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என நினைத்து கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இதற்காக, மேற்படிப்புக்காக தங்கள் பிள்ளைகளை பாலக்காடு சித்தூரில் உள்ள அரசினர் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஜி.வி.பிரகாஷ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட சில தமிழ் மாணவர்கள் சித்தூர் அரசினர் கல்லூரியில் சேருகிறார்கள்.
ஆனால், அந்த கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மலையாள மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு எந்த ஒரு வசதியும் கிடைப்பதில்லை. கேரள மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு முக்கியக் கட்சிகளின் மாணவர் சங்கங்களான ’கேஎஸ்கியூ’, ‘எஸ்எஃப்ஒய்’ ஆகியவை ஒருபுறம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், மறுபுறம் கல்லூரியை அடக்கி ஆண்டுகொண்டும் இருக்கின்றன. அதிலும், பதவியிலிருக்கும் ‘கேஎஸ்கியூ’ மாணவர் சங்க நிர்வாகிகள் தமிழ் மாணவர்களை அடிமைகளைப் போல் நடத்துகிறார்கள். மொழி மற்றும் சாதி அடிப்படையில் இழிவுபடுத்துகிறார்கள். அருவருப்பாக ராக்கிங் என்ற பெயரில் கேவலமாக பேசி அவமானப்படுத்தி மிகப்பெரிய அளவில் கொடுமைபடுத்துகிறார்கள்.
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் இவர்களில் ஆதித்யா பாஸ்கர், மலையாள மாணவர்களால் அடித்துக் கொல்லப்படுகிறார். இக்கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்த. ஜி.வி.பிரகாஷ் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து அந்த கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களை ஒன்று திரட்டி, தமிழ் மாணவர் படை ஒன்றை உருவாக்குகிறார். இந்த சூழலில் அந்தக் கல்லூரியில் கல்லூரி தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் இரண்டு மாணவர் அமைப்புகளும் போட்டியிட அவர்களை எதிர்த்து தமிழ் மாணவர் படை களம் இறங்குகிறது. தேர்தலில் போட்டியிட்ட ஜி.வி.பிரகாஷ் உருவாக்கிய தமிழ் மாணவர் படை வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் ‘ரெபல்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் நடிப்பு ஆக்சன் என அனைத்து விஷயங்களிலும் மிக அற்புதமாக நடித்து அசத்திருக்கிறார். கதைக்கு தகுந்தவாறு அந்த கதாபாத்திரமாகவே ஜொலித்திருக்கிறார். காதல், எமோஷன்ஸ், ஆக்ஷன், கோபம் என பல பரிமாணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி, கதையின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார். ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திய ஜிவி பிரகாஷ், தன் கதாபாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகியாக மமிதா பைஜு மலையாள மாணவி சாராவாக நடித்திருக்கிறார்.நடிப்பிற்க்கு உண்டான பணிகள் அதிகம் இவருக்கு கொடுக்கவில்லை. பெரிதாக எந்தவித ஸ்கோப் படத்தில் இல்லையென்றாலும், தோன்றிய காட்சிகளில் க்யூட்டாக தனது நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
’கேஎஸ்கியூ’ மாணவர் சங்கத் தலைவர் ஆண்டனியாக வெங்கடேஷ் வி.பியும், ‘எஸ்எஃப்ஒய்’ தலைவராக ஷாலு ரஹீமும் நடித்திருக்கிறார்கள். கல்லூரி பேராசிரியர் உதயகுமாராக, தமிழராக கருணாஸ் நடித்திருக்கிறார்.எப்போதும் போல தன் தனி நடிப்பு திறமை மூலம் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். சக தமிழ் மாணவர்களாக பாண்டி மற்றும் செல்வராஜாக வரும் கல்லூரி வினோத் மற்றும் ஆதித்யா பாஸ்கர், நாயகனின் தந்தை ராமலிங்கமாக வரும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்க்கு இசையும் அமைத்திருக்கிறார். பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை காட்சிகளுக்கும் எமோஷனுக்கும் பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் 1980ம காலக்கட்டத்தில் நடக்கும் கதையை உணர்ந்து கடுமையாக உழைத்து காட்சிப்படுத்திருப்பது மிக அருமை.
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதை அவ்வளவு அழுத்தமாகவும் இல்லை பலமாகவும் இல்லை. இரண்டாம் பாதியில் கல்லூரியில் நடக்கும் தேர்தல் காட்சிகளை மட்டுமே வைத்து கதை நகர்கிறது, முதலில் இனத்தால் பிரித்து காட்டி நகரும் கதையானது பின்பு கட்சி தேர்தல் என்று நகர ஆரம்பித்துவிட்டது. கேரளாவில் உள்ள அரசியலை தெள்ளத் தெளிவாக கூறவில்லை, அது திரைப்பட ரசிகர்களுக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், இந்த ‘ரெபல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்காது.
ரேட்டிங்-3/5.
RADHAPANDIAN>