‘பூமர் அங்கிள்’ – திரைப்பட விமர்சனம்!

130

சென்னை:

யோகி பாபு, ஓவியா, பாலா, தங்கதுரை, சேசு, ரோபோ சங்கர், எம் எஸ் பாஸ்கர், சோனா, மதன்பாபு, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பூமர் அங்கிள்’ இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் சுவாதேஷ் எம்.எஸ். சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் யோகி பாபு, ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால், அந்த  ரஷ்ய நாட்டு பெண்ணிடமிருந்து எப்படியாவது தனக்கு விவாகரத்து வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். இதற்கிடையில் ஊரில் உள்ள அரண்மனைக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்த பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று வக்கீல் யோசனை சொல்ல, அதை ஏற்றுக் கொண்டு யோகி பாபு அந்த ரஷ்ய நாட்டு பெண்ணை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். அப்போது அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார் யோகி பாபு.

ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சி செய்து வருகிறார். சிறுவயதில் தங்களுக்கு மாத்திரை கொடுத்து தங்கள் வாழ்க்கையை பாழாக்கிய யோகி பாபுவை பழி தீர்க்க அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் ஓவியாவும்அந்த அரண்மனைக்கு திடீரென்று வருகிறார். யோகி பாபுவின் தந்தை பெரிய விஞ்ஞானி,  அவர் கண்டுபிடித்த புதுவித கருவியின் ரகசியத்தை தெரிந்துக் கொள்வதற்காக யோகி பாபுவின் ரஷ்ய நாட்டு பெண் அந்த இடத்திற்கு வந்த ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. யோகி பாபுவின் மனைவியான ரஷ்ய நாட்டு பெண் அந்த  அரண்மனைக்குள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா/ என்பதுதான் ‘பூமர் அங்கிள்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கம் போல் கிண்டலும் கேளியுமாக வசனங்களை பேசி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அவரை வைத்து உருவகேலி தொடர்பான வசனங்களை எழுதினாலும் சிரிப்பு வரவில்லை. எப்போதும் போல ஒரே மாதிரியான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார் யோகி பாபு.

சமீபத்தில் மரணமடைந்த சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் ஆகியோர் படம் முழுவதும் வந்தாலும், சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள். திடீரென்று படத்தில் நுழையும் ஓவியா, வுண்டர் உமனாக அதிரடி காட்டுவது, ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு இளவட்டங்களை கிளுகிளுப்பாக்கி, குஷிப்படுத்தவும் செய்கிறார்.

கதாநாயகன் யோகி பாபுவின் மனைவியான ரஷ்ய நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் நடிகை, அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை ஆகியோர் அரண்மனையை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதில் களம் இறங்க, அவ்வபோது காமெடி பட்டாளத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்க வேண்டுமென கோபத்தை வரவழைத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபானி சிறுவர்களை கவர்வதற்கான பணியை தனது ஒளிப்பதிவு மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

ரசிகர்கள் நெஞ்சம் நிறையச் சிரிக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திரைக்கதை எழுதி, திரைப்படத்தின் காட்சிகளை காமெடியாக வடிவமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுவாதேஷ்.எம்.எஸ்.

மொத்தத்தில், இந்த ‘பூமர் அங்கிள்’-  குழந்தைகளுக்கான படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDUAN.