‘நேற்று இந்த நேரம்’ திரைப்பட விமர்சனம்!

154

சென்னை:

ஷாரிக் ஹாசன், ஹரிதா மோனிகா ரமேஷ்,, காவியா அமைரா, திவாகர் குமார்,  நித்தின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘நேற்று இந்த நேரம்’  இப்படத்தை சாய் ரோஷன் கே ஆர். இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

ஷாரிக் ஹாசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ்காம் முடித்த இளைஞர் குழு ஒன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது. அங்கு அவர்களுக்குள் காதல் மோதல் என சில சில்லறை சண்டைகள் நடக்கின்றன.ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று அரவிந்த் காவல்துறையினருக்கு சொல்ல,  காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் ஷாரிக்கின் நண்பர்கள் சிக்கிக் கொள்கின்றனர். காவல்துறை ஆய்வாளர் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த அரவிந்தும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும்  காவல்துறை ஆய்வாளர்  விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதையை சொல்கிறார்கள், ஒரு கட்டத்தில் காணாமல் போன இருவரும் கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் ஷாரிக்ஹாசனுக்கு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதைப் புரிந்து நேர்த்தியாக வில்லத்தனம் கலந்த முறையில் நடித்து அசத்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் மற்றும்  காவல்துறை ஆய்வாளராக  நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த பணியை மிக சிறப்பாக குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

விஷால்.எம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதையில் இருக்கும் பரபரப்பைத் திரையில் கொண்டுவர உழைத்து இருக்கிறார்.

கெவினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும்.பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.

இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நட்பு, காதல், காமம் இவைகள் எதுவென்று தெரியாமல் தன்னுடைய உணர்ச்சிகளை பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இன்றைய இளைஞர்களின் நட்பு தடம் மாறி போயிருப்பதை இயக்குனர் சாய் ரோஷன் கே ஆர் வெட்ட வெளிச்சமாக்கி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக காட்சிபடுத்தி இருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.