சென்னை:
காளி வெங்கட் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரத்தீஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகரன், தக்ஷனா, சாவித்திரி,, செல்லா, குபேரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘குரங்கு பெடல்’ இந்தப் படத்தை கமலக்கண்ணன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
1980 ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நடக்கும் கதையாக சிறுவர்கள் ரசிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது..இந்த ‘குரங்கு பெடல்’.
சைக்கிள் ஓட்டுவதற்கு சிறுவயதிலேயே கற்றுக் கொள்ள சிறுவர்கள் ஆசைப்படுவார்கள். அப்போது சீட்டின் மீது அமர்ந்து அவர்களால் ஓட்ட முடியாது. அதனால் சைக்கிள் பாருக்கு இடையே உள்ள இடைவெளியில் கால்களை பெடல்களில் வைத்து சைக்கிள் ஓட்ட பழகுவார்கள். அதைத்தான் குரங்கு பெடல் என்று சொல்வார்கள். இந்த வேலையைத்தான் ஐந்து சிறுவர்களும் செய்கிறார்கள்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒரு சிறு கிராமத்தில் 1980 ஆண்டு கால கட்டங்களில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஐந்து சிறுவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள்.
அப்படி இருக்கும்போது கோடை விடுமுறையை கழிப்பதற்காக பல வழிகளில் அதை கொண்டாட நினைக்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். வாடகைக்கு சைக்கிள் எடுத்து அதை கற்றுக்கொள்ள நினைக்கும்போது அந்த ஐந்து சிறுவர்களில் ஒருவன் சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்கி விடுகிறான். அதனால் மற்ற சிறுவர்கள் வாடகைக்கு பணம் கொடுத்து சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நெசவுத் தொழில் செய்யும் காளி வெங்கட் தனது மகன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும்போது அவனுக்கு காசு கொடுக்காமல் மறுத்து விடுகிறார். ஆனால் அவரது மகன் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் தனது வீட்டில் இருக்கும் உண்டியல் காசையும், கோயிலில் போட்டு வைத்திருக்கும் காசையும் எடுத்துச் சென்று சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயலுகிறார். அந்த சிறுவன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் மீதி கதை.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதன் எதார்த்தை உணர்ந்து திரையில் மிக அழகாக கொண்டுவரக் கூடியவர். அப்படி தான் இந்த படத்திலும் கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக எதார்த்தமாக நடித்திருக்கிறார். தனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை கிராமத்தில் உள்ள அனைவரும் நடராஜா சர்வீஸ் என்று கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை மனதில் வைத்து அவர் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது நிலையை சுட்டிக்காட்டி மகன் வசனம் பேசும் காட்சியிலும் தன்னை மவுனமாக வைத்துக் கொண்டு அனைவரையும் கவர்கிறார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் அனைத்திலும் கிராமத்து மண் வாசனை மாறாமல் சிறுவர்கள் அனைவரும் மிக அருமையாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
மிலிட்டரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி உண்மையான குடிகாரனாகவே மாறி அடிக்கும் லூட்டி அரங்கை கலகலப்பாக்குகிறது.
சிறுவனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தக்ஷனா, காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் சாவித்திரி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்லப்பா, தோல் பாவை கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குபேரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொங்கு தமிழ் பேசி கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாகவே அந்த நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன் தனத் ஒளிப்பதிவு மூலம் அந்த கிராமத்தின் இயற்கையான கோடைக்காலத்தின் சூழலையும், கிராமத்து உள்ள நீர் குளிர்ச்சியையும், மண் ரோட்டின் நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்து திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
எழுத்தாளர் ராசி அழகப்பன் எந்த உணர்வுடன் கதையை எழுதினாரோ அந்த உணர்வு சிறிதளவும் மாற்றம் செய்யாமல் சிறந்த முறையில் திரைக்கதையாக வடித்து இயக்கியிnருக்கிறார் கமலக்கண்ணன். சிறுவயதில் சைக்கிள் ஓட்டும் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி இருக்கிறார் இயக்குனர். கோடை காலத்திற்கு சிறுவர்களுக்கு மட்டுமல்ல அந்த கால ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வரும் பெரியவர்களுக்கும் ஏற்ற படமாக எடுத்து இருக்கும் இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.
மொத்தத்தில், இந்த ‘குரங்கு பெடல்’ படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.