‘உயிர் தமிழுக்கு’ – திரைப்பட விமர்சனம்!

132

சென்னை:

‘யோகி’ படத்தில் கதாநாயகனாக  நடித்த அமீர் அதன் பிறகு ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் படம் முழுவதும் நகைச்சுவை கலந்த முறையில் ஒரு அரசியல்வாதி செய்யும் அலப்பறைகளை காமெடி கலந்த முறையில் அனைவரையும் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார்.. ஆதம்பாவா தயாரித்து இயக்கி இருக்கும் இப் படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி, கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையை பொருத்தவரையில்,

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கேபிள் டிவி ஆபரேட்டராக அமீர் ஊர் மக்களுக்கு பல வித உதவிகள் செய்தும், புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை போல தானும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு பல வித உதவி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்.  அதே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனந்தராஜின்  மகள் சாந்தினி ஸ்ரீதரன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்பு மனு  தாக்கல். செய்ய வந்த சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் அவர் மீது அமீருக்கு காதல் ஏற்படுகிறது.

அதனால் இமான் அண்ணாச்சி போட்டியிடும் நேரத்தில் அவருக்கு பதிலாக எம்ஜிஆர் ரசிகனான அமீர் மக்கள் முன்னணி கட்சி சார்பில் அரசியலில் குதிக்கிறார். அரசியல் களத்தில் இறங்கிய  அமீர் வார்டு கவுன்சிலராக வெற்றி பெறுகிறார். இந்த சூழலில் சாந்தினி ஸ்ரீதரன் மீது காதல் கொண்ட  அமீர் யாருக்கும் தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலிக்கின்றனர். அமீரின் காதலுக்கு சாந்தினி ஸ்ரீதரனின் தந்தையும்  எதிர்க்கட்சி தலைவருமான  ஆனந்தராஜ்  எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  இதனால் அமீருக்கும், ஆனந்தராஜிற்குமிடையே பெரிய அளவில் பகை ஏற்படுகிறது.

இந்நிலையில் சாந்தினி ஸ்ரீதரினின் தந்தையான ஆனந்தராஜ் சில மர்ம மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்.  அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது.  இதனால் தந்தையை  பறிகொடுத்த சாந்தினி ஸ்ரீதரன் வேதனையுற்று  துவண்டு போய் அமீரின் காதலை வெறுக்கிறார். ஆனால் அமீர் தன் மீது கொலை பழி விழுந்தாலும், தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபிக்க பல விதத்தில் முயற்சி செய்கிறார். இறுதியில் அமீர் தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்து சாந்தினி ஸ்ரீதரனை கைப்பிடித்தாரா? அமீரின் காதலை சாந்தினி ஸ்ரீதரன் ஏற்றுக் கொண்டாரா?  அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தார்களா?  என்பது தான் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் மீதி கதை..

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அமீர், எம்ஜிஆர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அனைவரும் ரசிக்கும்படி நடிப்பில் அசத்தி இருக்கிறார். தற்போதுள்ள அரசியல்வாதிகள் செய்யும் அசிங்கங்களை சிறப்பாக வெளிப்படுத்தி, தனது கட்டுப்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு மிகவும் ஜாலியாக நடித்து இவர் அமீர்தானா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கிறார். எம்ஜிஆரை மையமாக வைத்து எடுத்து இருக்கும் பாடலில் அவரை போலவே நடனம் ஆடி ரசிகர்களை கவர்கிறார்.

கதாநாயகியக தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சாந்தினி ஸ்ரீதரன் நடிப்பில் கலக்கி இருக்கிறார்.இவரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்ந்தாலும், அழகு பதுமையாக மட்டுமே வந்து போகாமல்.  அமீரிடம் வாக்குவாதம் செய்து தேர்தலில் யார் ஜெயிப்பது என்று சவால் விடும் காட்சிகளில் நடிப்பில் அசத்தி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்து இருக்கிறார். கேரளாவிலிருந்து வந்து இருக்கும் இவருக்கு தொடர்ந்து படங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அப்பாவி சுடலையாக இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ் பழக்கடையார் ராமச்சந்திரனாக, தலைவராக ராஜ் கபூர்,சேதுவாக சரவண சக்தி, மாரி முத்து, பரமனாக கஞ்சா கருப்பு, சுப்ரமணியம் சிவா என்று அதிகமான நட்சித்திர பட்டாளத்துடன் களமிறங்கி அரசியல் நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம்  கொடுத்து சிறப்பு செய்துள்ளனர். அனைவரும் தங்களுக்கு  கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை கதையோட்டத்திற்கு ஏற்ப மிக நேர்த்தியாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேவராஜ், இந்தப் படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும்  எப்படி காட்சிப்படுத்தினால் ரசிக்கும்படி இருக்கும் என்பதை சிறப்பான முறையில் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

.படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் ஆதம்பாவா, சத்யராஜை மனதில் வைத்துதான் இப்படத்தின் கதையை எழுதி இருப்பார் என்றுதான் நினைக்கத் தோந்றுகிறது. ‘சுயேச்சை எம்.எல்.ஏ’ படத்தில் வரும் காமெடி அரசியல் போல அமீரை வைத்து மிக சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். அரசியல் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்திருந்தாலும்,  இந்த அரசியல் கதையை ‘அமைதி படை’ படம் மாதிரி இந்த கதையை காமெடி களத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. சமீபகாலத்தில் உள்ள  அரசியல்வாதிகளின் செய்கைகளை சுட்டிக் காட்டி ஒருவரையும் விட்டு வைக்காமல் கேலியாக நையாண்டி செய்து  அரங்கை கலகலப்பில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குனர். காதலுக்காக அரசியலில் நுழையும் சாதாரண இளைஞனின் வாழ்க்கைப்பற்றிய படத்தை அரசியல் நகைச்சுவை கலந்து எழுதி அசத்தியிருக்கிறார் ஆதம்பாவா.

மொத்தத்தில் ‘உயிர் தமிழுக்கு’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.