’எலக்சன்’– திரைப்பட விமர்சனம்!

142

சென்னை:

‘உறியடி’ விஜயகுமார், பிரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பாவேல் நவகீதன், திலீபன், ராஜீவ் ஆனந்த் குலோத்துங்கன் உதயகுமார், மற்றும் பலர் நடித்த படம் தான் ‘எலக்சன்’.  தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்ப படத்தின் கதையை பொருத்தவரையில்,

வேலூர் மாவட்டத்தில் நடக்கும் ஒரு உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து அரசியல் பேசுகின்ற ‘எலக்சன்’ என்ற இப்படத்தை தமிழ் இயக்கியிருக்கிறார். விஜயகுமாரின் தந்தை ஜார்ஜ் மரியான் ஆளுங்கட்சியின் ஒரு உண்மையான தொண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக பாடுபட்டாலும் அந்த கட்சியில் அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த கட்சியின் தலைமையிடமும் ஊர் மக்களிடமும் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்த ஜார்ஜ் மரியான்,  அந்த மாவட்டத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு சீட் கொடுக்க மறுக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த ஊரில் வழக்கமாக தேர்தலில் போட்டியிடும் ஜாதி வெறி பிடித்த குடும்பம் ஒன்று சேர்ந்து மீண்டும் தலைவர் பதவியை பிடிக்க முடிவு செய்கிறார்கள்.

இதனால் வெறுப்புற்ற ஜார்ஜ் மரியான் தன் மகன் விஜயகுமாரை ஊராட்சி தேர்தலில் போட்டியிட வைக்க நினைக்கிறார். அரசியலில் தீவிரமாக உழைத்தும் தன் தந்தைக்கு மரியாதை இல்லை என்பதை கண்டு வருத்தம் அடையும்  விஜயகுமார் அந்த தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். உள்ளாட்சி தேர்தலில் நிற்பதற்காக தனது வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை தேர்தலுக்காக செலவு செய்கிறார். ஆனால் விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவுகிறார். தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், பணமும் போய் ஒரு உயிரும், போகிறது அதனால் அனைத்தையும் இழந்து மன நிம்மதியையும் இழந்து மனதளவில் வேதனைப்படும் விஜய்குமார் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார், அவரால் அந்த தேர்தலில் ஜெயிக்க முடிந்ததா?  உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் அரசியல் பின்னணி என்ன? என்பதுதான் ‘எலக்சன்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், இளம் அரசியல்வாதியாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து மிக சிறப்பாக  நடித்திருக்கிறார். கோபம், காதல், தந்தை மீதான பாசம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் என்றாலும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அதேசமயம் அவரின் அந்த சிரிப்பும், கவனத்தை ஈர்க்கும் முகமும் அவரை கதாநாயகனாக அடையாள காட்ட தவறவில்லை.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ரிச்சா ஜோஸி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் என்பதால் இருவரும் அதன் தன்மையை உணர்ந்து நடிப்பில் அசத்தி இருக்கின்றனர்.

உண்மையான அரசியல் தொண்டராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். நாயகனின் மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி ஆகியோர் கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.பின்னணி இசையில் கதைக்களத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ், இதுவரை பார்க்காத லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். வேலூர் மாவட்டத்தையும், மக்களையும்  மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி படமாக்கியிருக்கிறார்.

‘சேத்துமான்’ படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குனர் தமிழ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார்.தேர்தல் என்பது பதவியை காப்பாற்றிக் கொள்ள பணத்தை காப்பாற்றிக்கொள்ள அல்லது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள்  பயன்படுத்தி வருவதை தத்ரூபமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் தமிழ்.

மொத்தத்தில், இந்த ‘எலக்சன்’ படம் அரசியலில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.