சென்னை:
யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்- ஆலன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “போட்”. இப்படத்தை சிம்பு தேவன் கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தின் கதையை 1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் நடப்பதாக இயக்குனர் சிம்பு தேவன் இயக்கி இருக்கிறார். அந்த காலத்தில் சென்னையை மதராஸ் பட்டினம் என்று தான் அழைப்பார்கள். 1943 ஆம் ஆண்டு அந்த சமயத்தில் தான் பிரிட்டிஷ் மன்னர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் ஜப்பான் நாட்டு படைகள் குண்டு வீசுவதாக தகவல் பரவ, மக்கள் பதற்றத்துடன் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள். மதராஸ் மாகாணத்தில் குண்டு வீச முயலும் போது அதிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் அனைவரும் மதராஸ் மாகாணத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
மீனவர்கள் இருக்கும் இடத்திலும் ஜப்பான் படை குண்டு வீச நினைக்கும் போது காசிமேடு பகுதி மீனவரான கதாநாயகன் யோகி பாபு தனது பாட்டி குலப்பள்ளி லீலாவுடன் கடலுக்குள் சென்று தப்பிக்க முயற்சிக்கிறார். இந்த சமயத்தில் கடவுள் மறுப்பாளர் எம் எஸ் பாஸ்கர், பிராமணர் சின்னி ஜெயந்த், வட இந்தியரான சாம்ஸ், இஸ்லாமியர் ஷாரா, கர்ப்பிணியான மதுமிதா ஆகியோருடன் ஒரு ஆங்கிலேயரும் சேர்ந்து கொள்கிறார். இத்தனை பேருடன் கடலுக்குள் செல்லும் படகு நடுக்கடலில் சென்றபோது பழுதடைந்து தடுமாறி நிற்கிறது. அதனால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்க செலுத்த வேண்டும் என்றால் படகில் உள்ள மூன்று பேர் வெளியேற வேண்டும் அல்லது கடலில் குதிக்க வேண்டும். இந்த சூழ் நிலையில் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட அனைவரும் தப்பித்து கரைக்குச் சென்றார்களா? இல்லையா? என்பதுதான் “போட்” படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக காசிமேடு பகுதி மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட்டு, கேலி கிண்டலான நகைச்சுவை வசனங்களை கைவிட்டுட்டு, இயக்குநர் சிம்புதேவன் என்ன கூறினாரோ அதை மட்டுமே பேசி நடித்திருப்பது கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. படகில் கைகளில் துடுப்புகளை அசைத்துக் கொண்டு அவர் கவனமாக வசனங்கள் பேச வேண்டிய காட்சிகளில் தடுமாறாமல் பேசி இருப்பதும், அதற்கேற்ப முக பாவங்கள் காட்டி இருப்பதும் பண்பட்ட நடிகராக அவரை மனதில் பதிய வைக்கிறது.படகில் சுற்றி வரும் சுண்டெலிக்கு கூட யோகி பாபு பரிவு காட்டி பசியாற வைப்பது மனதை நெகிழ வைக்கிறது.
குலப்புளி லீலா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார். கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, ஷாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக பேசி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விதவிதமான கோணங்களில் கடலையும் படகையும் காட்டுவதோடு படத்தில் நடித்தவர்களின் உணர்வுகளையும் காட்சி வழியே வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைக்கப் பெரும்பாடு பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் இடையே நிகழும் உரையாடல்கள் படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. வெறும் படகு பயணம் மட்டுமே கதையில் இருப்பதால் படம் போரடிக்க வைத்து விடுகிறது. இயக்குனர் சிம்புதேவன் படம் முழுவதும் கடலிலேயே படமாக்கி இருப்பதால் கதையில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், இந்த ‘போட்’ எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.