‘மழை பிடிக்காத மனிதன்’ – திரைப்பட விமர்சனம்!

152

சென்னை:

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், ஏ.எல்.அழகப்பன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தனஞ்செயன் , சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், இயக்குனர் ரமணா, ப்ருத்வி அம்பர் போன்ற பலர் நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘மழை பிடிக்காத மனிதன்’.

தற்போது வெளி வந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இந்திய ராணுவத்தின் ரகசிய ஏஜெண்ட்டாக  இருக்கும் விஜய் ஆண்டனி அமைச்சர் ஏ.எல்.அழகப்பனின்  மகன் போதை பொருள் கடத்துவதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு அவரை கொலை செய்து விடுகிறார். அமைச்சர் ஏ.எல்.அழகப்பனின்  மகனை கொன்று விட்டதால் யாருக்கும் தெரியாமல் தப்பித்து விடுகிறார். இந்நிலையில் உயர் அதிகாரியான சரத்குமாரின் தங்கை தியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த சூழ்நிலையில் தன் மகனை கொலை செய்த விஜய் ஆண்டனியை கொன்று விட அமைச்சர் ஏ.எல். அழகப்பன் முயற்சி செய்ய,  அந்த சமயத்தில் விஜய் ஆண்டனி மனைவியை கொன்று விடுகிறார்கள். தன் மனைவி இறந்த போது கடுமையான மழை பெய்ததால் மழையை வெறுத்து மழை பிடிக்காத மனிதனாகி விடுகிறார் விஜய் ஆண்டனி. இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஏ எல் அழகப்பன் அனுப்பிய ஆட்களின் தாக்குதலில் விஜய் ஆண்டனி இறந்து விட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார்.

ஆனால் அந்த தாக்குதலிருந்து விஜய் ஆண்டனியை காப்பாற்றிய சரத்குமார் எந்த சூழ்நிலையிலும் விஜய் ஆண்டனி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி யாருக்கும் தெரியாமல் அவரை அழைத்துக் கொண்டு அந்தமானுக்கு அழைத்துச் சென்று அங்கு தங்க வைக்கிறார். . அந்தமானில் யாருடைய துணையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, விஜய் ஆண்டனிக்கு நாயகி மேகா ஆகாஷ் வளர்க்கும் நாய்குட்டியும், பிருத்திவி அம்பாரின் நட்பும் கிடைக்கிறது.  பிருத்திவி அம்பாரின் அம்மா சரண்யா பொன்வண்ணன் நடத்தும் பர்மா உணவு விடுதியில் விஜய் ஆண்டனி உணவு சாப்பிட வரும்போது அவர்களது  நட்பு இன்னும் அதிகமாக நெருக்கம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் விஜய் ஆண்டனிக்கு அந்தமானில் உள்ள பெரிய தாதாவான வட்டிக்கு கடன் கொடுக்கும் தனஞ்செயா மற்றும் காவல் துறை அதிகாரியான முரளி சர்மா இருவருக்கும்  இடையே பெரிய அளவில் பிரச்சினை ஏற்படுகிறது.‌

இந்த நிலையில் விஜய் ஆண்டனி உயிரோடு இருப்பதாக அமைச்சர் ஏ எல் அழகப்பனுக்கு தெரிய வருகிறது. அதனால் வெகுண்ட அமைச்சர் ஏ.எல். அழகப்பன்,  விஜய் ஆண்டனியை எங்கிருந்தாலும் கொலை செய்வதற்கு துடிக்கிறார். இறுதியில் விஜய் ஆண்டனியை அமைச்சர் ஏ.எல் அழகப்பனின் அடியாட்கள்  கொலை செய்தார்களா? இல்லையா? என்பதுதான் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் மீதி கதை..

வழக்கம் போல இறுக்கமான முகத்தோடு தன் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, இப்படத்தில் ஆக்‌ஷனில் அதிரடியையும், நடிப்பில் நிதானத்தையும் மிக சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். ஆக்ஷன் காட்சிகளிலிருந்து மாறுபட்டு, மிகுந்த ரிஸ்க் எடுத்து அந்தர் பல்டி அடித்து  சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றிலும் தெறிக்க விடுகிறார்.

கதாநாயகி மேகா ஆகாஷ் இருக்கிறார் என்றாலும் தன் நடிப்பில் குறை வைக்கவில்லை. இப்படத்தில் அவருக்கு முக்கியத்துவம் குறைவென்றாலும் அவர் இருப்பதே அனைவருக்கும் ஆறுதல் அளிக்கிறது.

சரத்குமார்,சத்யராஜ் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் வந்தாலும் தங்கள் இருப்பை அழுத்தமான நடிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

டாலி தனஞ்செயா, முரளிசர்மா ஆகியோரின் கதாபாத்திரங்களும் அதில் அவர்களின் நடிப்பும் சிறப்பு. முரளிசர்மா கூடுதலாக ரசிக்க வைக்கிறார். தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ஏ.எல்.அழகப்பன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை எதிர்பார்த்த அளவிற்கு  சொல்லும்படி இல்லை.

கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய்மில்டன், விஜய் ஆண்டனியின் தோற்றத்தை மாற்றியதில் தொடங்கி பல புதிய விஷயங்களை புகுத்தி அனைவரையும் ரசிக்க செய்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதையை ஆரம்பித்து, பிறகு வேறு ஒரு களத்தில் கதையை பயணிக்க வைத்திருப்பதால் பல காட்சிகளில் தொய்வு ஏற்பட வைக்கிறது.

மொத்தத்தில், ‘மழை பிடிக்காத மனிதன்’  ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.