‘வீராயி மக்கள்’ – திரைப்பட விமர்சனம்!

167

சென்னை:

ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா. இப்படத்தில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தீயத்தூர் என்ற கிராமத்தில் இக்கதை நடப்பதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வசிக்கும் ஏழை விதவைத் தாயான வீராயி, தான் பெற்றெடுத்த மூன்று ஆண் மகன்களையும், ஒரு மகளையும், சுள்ளி பொறுக்கி ஏழ்மையை தழுவி ஆனால் பாசம் பொங்கிட வளர்கிறார். விதவைத் தாயாக இருந்தாலும் தான் பெற்ற மக்களை தன் வயிறைக் கட்டி வாயைக் கட்டி வளர்த்து ஆளாக்குகிறார். அவரது பிள்ளைகள் ஒற்றுமையாக வளர்ந்து, மூத்த மகன் வேல ராமமூர்த்தியாகவும், இரண்டாவது மகன் மாரிமுத்துவாகவும், மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டனாகவும், ஒரே மகள் தீபா சங்கராகவும் பெரியவர்களாகிறார்கள்.  மூத்த மகன் வேல.ராமமூர்த்தியும் ஒரு தந்தை போல் தனது 2 தம்பிகளையும், மறறும் சகோதரி தீபா சங்கரையும் பாசத்துடன் அன்போடு வளர்க்கிறார். அதன்பின் வழக்கம் போல அனைவரின் திருமணத்திற்கு பிறகு இரண்டாவது மருமகள் செந்திகுமாரி தன் மாமியார் மூத்த மருமகள் ரமாவை உயர்வாகவும், தன்னை இழிவாக நடத்துவதாக எண்ணி மூத்த மருமகள் மேல்  உள்ள பொறாமையால் குடும்பத்தில் சண்டையை ஏற்படுகிறார். இதனால் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக அன்பும் பாசமுமாய் வளரும் அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படுகிறது.

அதன்பின் ஒற்றுமையுடன் இருந்த அண்ணன் தம்பிகள் உறவில் விரிசல் ஏற்பட்டு பஞ்சாயத்து வரை சென்று அனைவரும் பிரிகிறார்கள்.  தம்பி மாரிமுத்து அவரது மனைவி செந்தி குமாரி குழந்தைகளுடன் தனி வீட்டில் வசிக்கிறார்.  மாரிமுத்துவின் மனைவி செந்தி குமாரி அடிக்கடி வேல.ராமமூர்த்தியின் குடும்பத்தினரை பார்த்து அவமானம் படுத்தும் வகையில் ஏதாவது ஒரு விதத்தில் திட்டிக் கொண்டே இருக்கிறார். இந்த சூழ்நிலையில், வெளியூரிலிருந்து வேல.ராமமூர்த்தியின் மகன் சுரேஷ் நந்தா தனது கிராமத்திற்கு வந்த போது, அவரது குடும்பத்தாருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் அவரது சித்தப்பா மாரிமுத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பதைக் பார்க்கிறார்.  இதனால் மனம் வேதனையில் இருந்த  சுரேஷ் நந்தா தனது நண்பனுடன் அந்த கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கு, திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக செல்கிறார். அங்கு அத்தை தீபா சங்கரின் மகளை பார்த்தவுடன் அவள் மீது சுரேஷ் நந்தாவுக்கு காதல் ஏற்படுகிறது.  ஏற்கனவே தன் தங்கையை வீட்டை விட்டு துரத்தியடித்த தன் தந்தை வேல.ராமமூர்த்திக்கு மீண்டும் அவரை தங்கையாக ஏற்க மனம் இல்லாத நிலையில் அவரது மகளை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாரா? பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதுதான் “வீராயி மக்கள்” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் நடித்திருக்கிறார். தன்னுடன் பிறந்த சகோதரன் சகோதரிக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் படம் பார்க்கும் அனைவரின் மனதையும்  கவர்ந்து விடுகிறார்.

தம்பியாக நடித்திருக்கும் மறைந்த மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த முறையில் நிலை நிறுத்தியிருக்கிறார்.அவருடைய இழப்பு யாராலும் நிரப்ப முடியாதது என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்து காட்டியிருக்கிறார்.

அண்ணனின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் கொஞ்சம் ஓவரான அளவில் நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக காட்சிகளுக்கு எது தேவையோ அதை மட்டுமே நடிப்பின் மூலம் மிகவும் அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து கதைக்கு ஏற்ற முகமாக தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார்.

ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் ஆகியோரும் விதவிதமான கிராமத்து மனிதர்களைப் பார்ப்பது போல் சிறந்த நடிப்பை நம் கண்முன்னே நிறுத்தி சிறப்பு செய்திருக்கிறார்கள்.

எம்.சீனிவாசனின் ஒளிப்பதிவில் படம் முழுக்கக் கிராமத்து காட்சியமைப்புகளை மிகவும் இயல்பாக படமாக்கி இருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

தீபன்சக்ரவர்த்தி இசையில், தெக்கு தெச நாடு, நெஞ்சுக்குள்ள ஒம்பேர உள்ளிட்ட பாடல்கள் இதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா. ஒவ்வொரு குடும்பத்திலும் பலவித பிரச்சனைகளும், பிரிவுகளும் இருப்பது சகஜம் என்றாலும், உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது, என்பதை மக்கள் மனங்களுக்கு கிராமத்து மண் மனம் மாறாமல் புரிய வைத்திருக்கிறார். கிராமத்து மனிதர்களின் மனங்களையும், வாழ்வியலையும், உறவுகளின் சிக்கலையும்,   நன்றாகப் புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக படம் பார்க்கும் அனைவரின் மனதையும்  நெகிழ வைத்து இருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘வீராயி மக்கள்’ படம் மக்கள் மனதில் பதிகின்ற ஒரு உன்னதமானபடம்.

ரேட்டிங் :- 3/5.

RADHAPANDIAN.