சென்னை:
நடிகர் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, கட்ட எறும்பு ஸ்டாலின், வி ஞானவேல்,ஜி எம் குமார், சித்தன் மோகன், சரவண சக்தி, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “நந்தன்”. இப்படத்தை இரா சரவணன் எழுதி, இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இன்றும் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கிராமங்களில் மேல் சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் கிராம தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஒரு சிறிய கிராமத்தில் மேல் ஜாதியை சேர்ந்த பாலாஜி சக்திவேல் பாரம்பரியமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியே இல்லாமல் பல ஆண்டு காலமாக வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும்போது, பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் அந்த கிராமத்தில் போட்டியிடக் கூடாது என்று மேல் ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாலாஜி சக்திவேலின் வீட்டில் பட்டியலினத்தை சேர்ந்த சசிகுமார் பல ஆண்டுகளாக அடிமை போன்று பணி செய்து வருகிறார். பாலாஜி சக்திவேல் என்ன சொன்னாலும் அதை செய்யும் ஒரு கூலிக்காரனாகவே அந்த வீட்டில் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்த கிராமத்தில் ரிசர்வ் தொகுதியாக ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பஞ்சாயத்து தலைவராக வர முடியும் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி சக்திவேல் என்ன செய்வது என்று புரியாமல் தன்னிடம் பணி புரியும் பட்டியலினத்தை சேர்ந்த சசிகுமாரை பஞ்சாயத்து தலைவராக்குகிறார். சசிகுமார் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் பாலாஜி சக்திவேல் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றவாறு எல்லா பணிகளும் செய்து வருகிறார். ஆனால் ஒரு சில விஷயங்களில் சசிகுமார் தங்களது ஊர் மக்களுக்கு சில நல்ல விஷயங்களை செய்ய முற்படுகிறார். இதனால் கோபம் அடைந்த பாலாஜி சக்திவேல் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி சசிகுமாரை வற்புறுத்துகிறார். தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும்போது பாலாஜி சக்திவேலின் அடியாட்கள் அவரை அடித்து நிர்வாணமாக்கி அனைவர் மத்தியிலும் துன்புறுத்துகிறார். இந்த சூழ்நிலையில் வேறு ஒரு பட்டியல் இனத்தவரை பாலாஜி சக்திவேல் தலைவராக முயற்சிக்கும் போது சசிகுமார் வெகுண்டு எழுகிறார். அதனால் சசிகுமாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் என்ன? மீண்டும் அவர் அந்த கிராமத்துக்கு பஞ்சாயத்து தலைவர் ஆனாரா? என்பதுதான் ‘நந்தன்’ படத்தில் மீதி கதை.
இப்படத்தில் சசிகுமார், கூழ்பானை என்கிற அம்பேத்குமார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இதுவரையில் அவர் நடித்திராத முற்றிலும் வழக்கத்திற்க்கு மாறான கதாபாத்திரத்தில் வித்தியாசமான முறையில் தனது உடல் மொழியால் வேறுபடுத்தி காட்டி இருக்கிறார். ஒரு மாறுபட்ட பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ள சசிகுமார். எப்போதும் தனது வாயில் வெற்றிலையை மென்று கொண்டு அப்பாவித்தனமான விசுவாசியாக அந்த கதாபாத்திரத்திற்க்கு நேர்த்தியான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் கவர்கிறார்.
ஊர் பஞ்சாயத்து தலைவராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அசத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் நம்மை கண் கலங்க வைக்கிறது.
சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின்,ஞானவேல்,மாதேஷ்,மிதுன்,சக்தி சரவணன், சித்தன் மோகன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு நடிகர்களையும், அந்த கிராமத்து மக்களையும் இயல்பாக காட்டுவது மட்டுமின்றி நிகழ்வுகளையும் நிறைவாகப் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.
இன்னும் சில கிராமங்களில் பட்டியல் இன மக்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாத நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மையமாக வைத்து கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் தங்களுக்கு அதிகாரம் கிடைத்தும் அதை முழுமையாக செயல்படுத்த முடியாமல் அவதிபடுவதை தத்ரூபமாக காட்டினாலும் நமது மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது தெரியவில்லை. தற்போதுள்ள ஆட்சியிலும் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனைப்படுவதை மிக தெளிவாக காட்டி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘நந்தன்’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங்:- 3/5.
RADHAPANDIAN.