‘லப்பர் பந்து’ – திரைவிமர்சனம்!

118

சென்னை:

ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ், சுவாஸ்விகா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட் பாலா சரவணன் கீதா கைலாசம் தேவதர்ஷினி ஜென்சன் திவாகர் டி.எஸ்.கே மற்றும் பலர் நடிப்பில், ஷான் ரோல்டான் இசையில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ‘லப்பர் பந்து’.

தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

‘அட்டகத்தி தினேஷ்’ தனது தாய் மற்றும் மனைவி மகளுடன் பெயிண்டிங் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றால் மிகவும் கெத்து காட்டி விளையாடுவதில் கில்லாடியாக இருக்கிறார். இவர் கிரிக்கெட் ஆடும் போது அந்த மட்டையை பிடித்து பந்தையடித்தால் சிக்ஸர் தான். ஆனால் இவரது மனைவி சுவாசிகாவுக்கு கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. இந்த கிரிக்கெட் விளையாட்டினால் அடிக்கடி தனது மனைவி சுவாசிகாவுக்கும் அட்டகத்தி தினேஷுக்கும் தகராறு ஏற்படும். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எங்கு கிரிக்கெட் நடக்கிறதோ அங்கு கிரிக்கெட் விளையாடி ஜெயிப்பதில் மிக ஆர்வமுடன் இருப்பார் அட்டகத்தி தினேஷ். இந்த சூழ்நிலையில் அவரது மகள் சஞ்சனா கிரிக்கெட் விளையாட்டில் தலை சிறந்த வீரராக இருக்கும் ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறார். தனது ஊரில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கொடுக்காததால் மற்ற ஊர்களுக்கு சென்று கிரிக்கெட் அணியில் இணைந்து ஆடி ஜெயிப்பதில் வல்லவராக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

இந்த சூழ்நிலையில் ஒரு கிரிக்கெட் விளையாட்டின் போது ஹரிஷ் கல்யாணத்துக்கும், அட்டகத்தி தினேஷுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஒரு ஈகோ ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருக்கிறார்கள். கிரிக்கெட்டால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவரது வாழ்க்கையிலும் பல வித சிக்கல்களை ஏற்படுத்துகிறது. என்னதான் ஒருவர் மீது ஒருவர் கோபப்பட்டாலும் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் இருவரும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அட்டகத்தி தினேஷும் அவரது மனைவி சுவாசிக்காவும் முயற்சிக்கும்போது மகள் சஞ்சனா, ஹரிஷ் கல்யாணை தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜாலி பிரெண்ட்ஸ் என்ற கிரிக்கெட் குழுவில் இணைந்து விளையாட நினைக்கும் ஹரிஷ் கல்யாணை அந்த குழுவில் உள்ளவர்கள் அவமானப்படுத்தி அனுப்பும்போது, தனியாக ஒரு கிரிக்கெட் குழுவை ஆரம்பிக்கிறார் ஹரிஷ் கல்யாண். காளி வெங்கட் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கி கிரிக்கெட்டை நடத்தும் போது ஈகோவினால் இருவரும் பேசாமல் இருந்தாலும் கிரிக்கெட்டிற்காக அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து அந்தப் போட்டியில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அந்த கிரிக்கெட் போட்டியில் இருவரும் ஜெயித்தார்களா?  அட்டகத்தி தினேஷின் மகள் சஞ்சனாவை ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டாரா? என்ற கேள்விக்கு ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்தால் பதில் தெரியும்.

எப்போதுமே கதையில் இரண்டு  கதாநாயகர்கள் நடித்தாலே படம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்ற நம்பிக்கையுடன்  ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரையும் நடிக்க வைத்து இருக்கிறார்கள். இப்படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தற்போது ஹரிஷ் கல்யாண் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துவதால், ‘பார்க்கிங் படத்திற்க்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்து தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை இந்த படத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறார். அதேபோல் இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் அட்டகத்தி தினேஷ் ‘கெத்து’ கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மேலும் அவர் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி முக்கியமாக திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்து அசத்திள்ளார். அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.கல்யாண வயதில் ஒரு பெண் உள்ளவராக நடித்திருக்கிறார்.விளையாட்டில் வீரனாகத் திகழ்வதும் மனைவியிடம் பதுங்குவது,ஹரீஷ்கல்யாணிடம் மோதுவது ஆகிய எல்லாவற்றிலும் தன் நடிப்பின் மூலம் சிறப்பு செய்து இருக்கிறார்.

தினேஷின் மனைவி யசோதாவாக நடித்துள்ள ஸ்வாசிகா விஜய் மற்றும் கெத்து மகள் யசோதாவாக சஞ்சனா ஆகிய இருவரும் திரைக்கதைக்கு ஏற்றவாறு தங்களது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மிக அற்புதமான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

காளிவெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், கதிர், கீதா கைலாசம்,தேவதர்ஷினி, டிஎஸ்கே என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும்  திறம்படச் செய்திருக்கிறார்கள். பால சரவணனும் ஜென்சன் திவாகரும் பேசும் வசனங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக நடித்திருக்கும் கதிருக்கு ஐபிஎல் தொடரின் தமிழ் வர்ணனையாளராக வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிபதிவில் கிரிக்கெட் போட்டிகளையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிக சரியான முறையில் கையாண்டு அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது.

எத்தனையோ படங்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு வந்து இருந்தாலும் ஒரு உன்னதமான கதையில் காதல், குடும்ப உறவுகள்,சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட பல விஷயங்களை புகுத்தி  அனைவரும் ரசிக்கக் கூடிய விதத்தில் ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.  பல படங்கள் வெளிவந்து தோல்விகளை தழுவுகின்ற நேரத்தில் மக்கள் மத்தியில் ரசிக்கின்ற அளவிற்கு சற்று மாறுபட்ட படமாக இப்படத்தை உருவாக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், இந்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.