‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்பட விமர்சனம்!

169

சென்னை:

ஏகன்,யோகி பாபு, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, குட்டி புலி தினேஷ், லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஸ்ரீராம், சத்யா, மானஸ்வி கொட்டாச்சி, பாவா செல்லதுரை, ரியாஸ், இயக்குனர் நவீன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தை சீனுராமசாமி எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ராணுவத்தில் பணிபுரியும் கணவனுக்கு துரோகம் செய்து வேறு ஒருவனுடன் கள்ளகாதலில் ஈடுபடுகிறார் ஐஸ்வர்யா தத்தா.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஐஸ்வர்யா தத்தாவின் கணவர்  தன் மகன் ஏகன், மற்றும் மகள் சத்யாதேவி, மனைவி ஆகியோரைப் பார்க்க பல வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார்.  இங்கு தனது கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு  மனைவி ஐஸ்வர்யா தத்தாவையும் மற்றும் அவருடைய கள்ளக்காதலனையும் கொலை செய்ய முயல்கிறார் கணவன். இதனால் பயந்துபோன ஐஸ்வர்யா தத்தா கணவன், மகன், மகள் அனைவரையும் தவிக்கவிட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேடி ஓடிவிடுகிறார். இதனால் கோபப்படும் ஐஸ்வர்யா தத்தாவின் கணவன் இரண்டு குழந்தைகளையும் பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு அவரும் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார்.

பாட்டியும் சிறிது நாட்களிலேயே இறந்து போக, அனாதையாக கைவிடப்பட்ட  ஏகன் தன் தங்கைக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த சூழலில் அந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் உதவி கேட்க, அவரும் தனது கோழிப்பண்ணை மற்றும் இறைச்சிக் கடையில் வேலை கொடுக்கிறார். ஏகனும் தன் தங்கைக்காக அந்த  கோழிப்பண்ணை மற்றும் இறைச்சிக் கடையில் கடினமாக உழைத்து தனது தங்கை சத்யாதேவியை கல்லூரியில் படிக்க வைக்கிறார். தனது தாய் செய்த துரோகத்தால் கடந்த கால பிரச்சனையை நினைவில் கொண்டு கல்லூரிக்குச் செல்லும் சகோதரி  சத்யாதேவி மீது அதிக பாசம்  வைத்து, மிகுந்த பாதுகாப்புடன் எங்கு சென்றாலும் கூடவே வருகிறார்.  இந்த நிலையில் இறைச்சிக் கடை எதிரில் பானை கடை நடத்தி வரும்  பிரிகிடா சகா, ஏகனை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால் ஏகன், பிரிகிடா சகாவின் காதலை கண்டுக் கொள்ளாமல் தனது பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் கல்லூரிக்கு சென்று படிக்கும் தனது தங்கைக்கு லியோ சிவகுமார்  மீது காதல் வருகிறது. ஒரு நாள் தன் தங்கையை காதலிக்கும் லியோ சிவகுமார் வீட்டிற்கே வந்து தங்கையின் கையைப் பிடித்து பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஏகன் அவனை அடித்து விரட்டி விடுகிறான். அம்மாவைப் போல தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடி கொடுக்கப் போகிறாள் எனக் கோபப்படுகிறான் ஏகன். அதன் பிறகு தன் தங்கை காதலித்த லியோ சிவகுமாரை தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தாரா?  தன்னை காதலித்து வரும் கதாநாயகி பிரிகிடா சகாவை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘கோழி பண்ணை செல்லதுரை’ படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ஏகன் நடித்துள்ளார். செல்லத்துரை கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக கதாபாத்திரத்தின் தன்மையை உணந்து  நடித்து இருக்கிறார். புதுமுக கதாநாயகன் என்பது தெரியாமல் ஏகன் சிறந்த முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல்படத்திலேயே பாசம்,காதல்,சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய கனமான கதாபாத்திரம் என்பதால் அதற்குத் தகுந்தவாறு நியாயம் செய்திருக்கிறார். ‌

கதாநாயகியாக ஏகனை காதலிக்கும் சட்டி. பானை கடைக்காரராக தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் வரும் பிரிகிடா சகா, பாவாடை சட்டையில். மிகவும் அருமையாக ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யா தேவி கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க பயணித்து நேர்த்தியான முறையில் சிறந்த நடிப்பை  கொடுத்துள்ளார். நகைச்சுவையை தாண்டி, கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் அழகாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா,லியோ சிவக்குமார்,நவீன்,குட்டிப்புலி தினேஷ் உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்  என்.ஆர். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் தேனி மாவட்டத்தின் இயற்கை எழிலை சிறப்பான முறையில் ஒளிப்பதிவு மூலம் காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய  இயக்குநர் சீனுராமசாமி இந்தப்படத்தின் மூலம் ஏகன் என்றொரு நாயகனை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொருவர் வாழ்க்கையில் நடக்கும் முக்கியத்துவத்தை  மையமாக கொண்ட கதைகளையே சொல்லி இயக்கும் சீனுராமசாமி இந்தப் படத்திலும் அந்த பணியை அனைவரும் ரசிக்கும்படி செய்து முடித்திருக்கிறார். மனித உணர்வுகளை மேம்படுத்தும் ஒரு படைப்பைக் கொடுக்க நினைத்த இவரது திரைக்கதையில் தொய்வுகள் இருப்பது பலவீனம்.

மொத்தத்தில் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறது.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.