சென்னை:
ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “கடைசி உலகப் போர்”. இதுவரை இசையமைப்பாளர், பாடகர், நடிகராக பார்த்து வந்த ஹிப் ஹாப் ஆதி இப்படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இந்த ’கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கதைக்களம் 2028 ஆம் ஆண்டில் தொடங்குவதாக கதையை அமைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சர் நாசரின் மைத்துனர் நடராஜ் (எ)நட்டி, தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு, அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கிறார். இந்த சூழலில் நாசரை தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற திட்டமிடும் நட்டி, அவரை பொம்மையாக ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா அதிகாரமும் தன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பில், அவர் தன் பேச்சாற்றலால் ஊழல் கேமில் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி கொண்டிருக்கிறார். நாசருக்கு உடல் நிலை சரியில்லாத சூழ் நிலையில் தனக்கு பின்னால் தன் மகள் அனகா, தனது வாரிசாக வரவேண்டும் என்று நட்டியிடம் கூறுகிறார். ஆனால் இதை மகள் விரும்பாத நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஹிப் ஹாப் ஆதியை சந்திக்க நேரிடுகிறது. அரசியலுக்கு வர விரும்பாத நாசரின் மகள் அனகா, ஹிப் ஹாப் ஆதி கொடுக்கும் நம்பிக்கையில் அரசியலுக்கு வர சம்மதிக்கிறார். இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசியதால் காதல் மலர்கிறது.
முதல்வர் நாசரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் அனகா, எளியவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியே எடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். இதில் ஹிப் ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். இந்த சூழ் நிலையில் நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்படுகிறது. தமிழ் நாடு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. முதல்வரான நாசர், ஆலோசகர் நட்டி, மகள் அனகா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. எதிர்பார்க்காத வெளிநாட்டு தாக்குதல் தமிழ்நாட்டு மீது நடக்க தமிழ்நாடு தனித்தீவு போல் மாறிவிடுகிறது. சீன படையினர் தமிழ் நாட்டை கைப்பற்றி தங்கள் அதிகாரத்தில் வைத்துக் கொள்கின்றனர்.
ஐநா சபையிலிருந்து விலகி சீனா தலைமையில் சில நாடுகள் ரிபப்ளிக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதால், அதில் இந்தியா சேரவில்லை. இதனால் இலங்கை வழியாக வந்த சீன படையினர், தமிழ் நாட்டில் புகுந்து முதல்வராக இருக்கும் நாசரைத் தமிழ் நாட்டின் பிரதமராக அறிவிக்கிறார்கள். இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், குடியரசு இந்தியாவை கைப்பற்றி, கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் குடிமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிலிருந்து ஹிப் ஹாப் ஆதி, தன் சகாக்களுடன் தப்பித்து மூன்றாம் உலகப் போரை உலகின் ‘கடைசி உலகப் போர்’ ஆக எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி, அதிரடி, ஆக்சன் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. படைவீரராகப் பதவியேற்று தமிழரசனாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் காதலி அனகாவுடன் அமைதியான முறையில் மிக அருமையாக அரசியல் பேசி, அவரை தன் சொல்லுக்கு கட்டுபட வைத்து கல்வி அமைச்சராக கொண்டு வரும் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார்.
கதாநாயகி அனகா,முதலமைச்சரின் மகளாக இயல்பாக நடித்து, கொடுத்த கதாபாத்திரத்தை குறைவு இல்லாமல் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
அரசியல்வாதிகளுக்கே அல்வா கொடுக்கும் கில்லாடியாக வருகிறார் நட்டி. வழக்கம்போலவே தனது அதகள நடிப்பால் கவர்கிறார். நட்டியின் வழக்கமான பாணி தான் என்றாலும், அது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பதோடு, படத்திற்கும் பலமாக பயணிக்கிறது.
முதலமைச்சராக நடித்திருக்கிறார் நாசர், சூழ்நிலைக் கைதியாக இருக்கும்போது மக்கள் நலனே முக்கியம் என நினைக்கும் கதாபாத்திரம் என்பதால் நிறைவாகச் செய்திருக்கிறார்.
புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகராக நடித்திருக்கும் ஷாரா மற்றும் முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் பல இயற்கை எழில் மிகுந்த இடங்களில் இணைந்து மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் நம் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.
போரே வேண்டாம் எனும் கருத்தைச் சொல்வதற்காக இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. இதுகுறித்து நிறைய யோசித்து அயல் நாட்டில் நடக்கும்பலவித நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து கதையை எழுதி, இவரே இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் தன் தலையில் சுமந்து பணியாற்றி இருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், இந்த ‘கடைசி உலகப் போர்’ படம் மாறுபட்ட ஒரு படைப்பு.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.