சென்னை:
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் பாலாஜி கேசவன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஆஸ்கர் விருது பெறும் இயக்குனராக கனவு கண்ட கதாநாயகன் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பணி புரிந்துக் கொண்டு இருக்கிறார். சென்னை மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணி புரிகிறார் கதாநாயகி அவந்திகா மிஸ்ரா.. ஒரு கட்டத்தில் அவந்திகா மிஸ்ரா மீது காதல் வயப்படுகிறார் அசோக் செல்வன். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பணி புரிய செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவந்திகா மிஸ்ரா அசோக் செல்வனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். பிறகு மனம் மாறி அசோக் செல்வனை காதலிக்க ஒப்புக் கொள்கிறார். காதலிக்க ஆரம்பித்தவுடன் காதலர்கள் இருவரும் காதல் வானில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்கிறார்கள்.
இந்த சூழ்லில் கதாநாயகன் அசோக் செல்வனின் நெருங்கிய தோழியான சரண்யா. தனது காதலர் பிரசாந்துடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டதால் கர்ப்பிணியாகிறார். பிரசாந்த் அமெரிக்கா சென்ற பிறகு, தான் கருவுற்றிருப்பது சரண்யாவுக்குத் தெரிய வருகிறது. அதனால் எப்படியாவது மருத்துவமனைக்குச் சென்று தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க நினைக்கிறார். தன்னுடன் கணவராக நடிப்பதற்கு அசோக் செல்வனை வற்புறுத்துகிறார். சரண்யாவுடன் மருத்துவமனைக்குச் செல்லவும், அங்கு சிறிது நேரம் அவரது கணவராக நடிக்கவும் சம்மதிக்கிறார் அசோக் செல்வன். இருவரும் இணைந்து மருத்துவமனைக்கு செல்லும்போது, அங்குள்ள நர்ஸ் அசோக் செல்வனுக்கு திருமணமாகி தன் மனைவியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு வந்திருக்கிறார் என்பதை தன் தோழி அவந்திகா மிஸ்ராவுக்கு போனில் சொல்கிறார்.
இதனால் அதிர்ர்ச்சியடைந்த அவந்திகா மிஸ்ரா அசோக் செல்வன் மீது சந்தேகம் ஏற்பட்டு சண்டை போடுகிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிரிந்து சென்ற காதலியுடன் மீண்டும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகளில் அசோக் செல்வன் ஈடுபடும் போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சனை அவரை காதலியுடன் இணைய விடாமல் தடுத்து விடுகிறது. இறுதியில் பிரிந்து சென்ற காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
அனைவரும் ரசிக்கும்படியான கதைகளை தேர்வு செய்து தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து கவனம் பெற்றுவரும் நடிகர் அசோக் செல்வன், இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் நாயகன் உமாசங்கராக நடித்திருக்கிறார். எப்போதும் போல இந்த படத்திலும் காமெடி செய்து சிறப்பன முறையில் நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கமான தனது துள்ளல் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகி லியோவாக அவந்திகா மிஸ்ரா நடித்திருக்கிறார். கதாநாயகனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காதல் மற்றும் முத்தக் காட்சிகளிலும், கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு கோபப்படும் காட்சிகளிலும் குறை சொல்ல முடியாத அளவு நிறைவாக நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், மாமாவாக நடித்திருக்கும் படவா கோபி, டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வழக்கம் போல் நடித்திருந்தாலும், கொடுத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான்
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா தன் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் படத்தில் காமெடிக்குப் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை போரடிக்க விடாமல் அனைவரும் படத்தை ரசிக்கத்தக்க விதத்தில் நகர்த்திச் சென்றாலும் சில காட்சிகளில் போரடிக்க வைத்துள்ளார். சில இடங்களில் தடுமாறியிருப்பது தெரிந்தாலும், அதை சமாளித்து ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன்.
மொத்தத்தில், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் காமெடி கலக்கல்!
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.