சென்னை:
ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ் பிரேம் நாத்,புகழ் மகேந்திரன், சுகுமார் சண்முகம்,மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பராரி’. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருப்பவர் எழில் பெரியவேதி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜபாளையம் என்ற கிராமத்தில் ஒருபுறம் தாழ்ந்த ஜாதியினரும், மற்றொருபுறம் உயர்ந்த ஜாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள். தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ஹரிசங்கர் குலதெய்வ பூஜைக்கு பன்றியை பலி கொடுப்பதற்காக முயற்சிக்கும்போது அந்த பன்றி உயர்ந்த ஜாதியினர் வாழும் பகுதிக்குச் சென்று விடுகிறது. ஹரிசங்கர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பன்றியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் உயர்ந்த ஜாதியை சேர்ந்த அங்குள்ள மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவர்கள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ஹரிசங்கரை பழிவாங்க துடிக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள், அடிக்கடி தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு தொல்லையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த மக்களுக்கு அனைவருக்கும் பொதுவான தண்ணீர் டேங்கிலிருந்து குடிப்பதற்கு தண்ணீரை கொடுக்காமல் நிறுத்தி விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் சிறுவயதிலிருந்தே உயர்ந்த ஜாதியை சேர்ந்த கதாநாயகி சங்கீதா கல்யாண், ஹரி சங்கர் மீது காதல் ஏற்பட்டு அவரிடம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஹரிசங்கர் அவரது நிலையை புரிந்துக் கொண்டு, சங்கீதா கல்யாணத்திற்கு புத்திமதி சொல்லி, நீ உயர்ந்த ஜாதியை சேர்ந்தவள்… நான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவன். ஆகவே தயவு செய்து எனக்கு காதல் ஒத்து வராது. நான் யாரையும் காதலிக்க மாட்டேன். எனக்கு தங்கையையும் தந்தையையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விடுகிறார்.
இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஹரிசங்கரும், மற்றும் நண்பர்கள் அனைவரும் கர்நாடகாவில் உள்ள ஒரு ஜூஸ் கம்பெனியில் பணிபுரிய செல்கின்றனர். அதில் உயர்ந்த ஜாதியை சேர்ந்த சங்கீதா கல்யாணமும் செல்கிறார். அங்கு வேலைக்கு சென்ற இடத்தில் அவர்கள் தமிழர்கள் என்பதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட வெறியர்கள் மொழி ரீதியிலான பாகுபாட்டில் இவர்களை கீழ்தரமாக நடத்தி வேதனை பட வைக்கின்றனர். அதே சமயத்தில் அங்கு காவிரி நீர் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையால் தமிழர்களை அங்குள்ள கன்னட வெறியர்கள் தாக்குகின்றனர். அதில் ஹரிசங்கரும், சங்கீதா கல்யாணமும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த அந்த கன்னட வெறியர்களிடமிருந்து ஹரிசங்கர் சங்கீதா கல்யாணம் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘பராரி’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் கதாநாயகனாக அப்பாவி கிராமத்து இளைஞராக மிக சிறப்பாக நடித்திருக்கும் ஹரிசங்கர், உயர்ந்த ஜாதியினரிடம் மோதல்களை விரும்பாமல் எல்லோரையும் அமைதி காக்க சொல்லும் காட்சிகளில் உணர்ச்சிகளின் பிம்பமாக கடுமையான உழைப்பு கொடுத்து வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கதாநாயகி சங்கீதா கல்யாண் அழகு தேவதையாக எளிமையான, இயல்பான நடிப்பால் அனைவரையும் கவருகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன், பிரேம்நாத்.வி, சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன், ராஜு, பிரேம்நாத் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பணியை அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருக்கிறார்கள்..
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், கிராமத்து மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாக படமாக்கியிருப்பதோடு, அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி, மக்களிடையே இருக்கும் ஜாதி ரீதியிலான வெறியையும் அரசியல் பின்னணியையும் மிக தைரியமாக சொல்லி இருக்கிறார். தமிழக கிராமங்களில் நடக்கும் உயர்ந்த தாழ்ந்த சமூகத்தின் சாதி பாகுபாடும், காவிரி பிரச்சனையையும் கதையில் ஒன்றிணைத்து, கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மொழிவெறி தாக்குதலை தத்ரூபமாக காண்பித்து அசத்தி இருக்கிறார். படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் படம் பார்க்கும் அனைவரின் கண்களையும் கலங்க வைத்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘பராரி’ படம் ஜாதி வெறியர்களுக்கு பாடம் புகட்டும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.