சென்னை:
மைத்திரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவன சார்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீ லீலா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்திருக்கும் படம்தான் ‘புஷ்பா 2 : தி ரூல்’ இந்தப் படத்தை சுகுமார் மிக பிரம்மாண்டமான செலவில் இயக்கி இருக்கிறார்.
‘புஷ்பா தி ரைஸ்’ என்று முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகு, தற்போது ‘புஷ்பா-2 தி ரூல்’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் வெளிவந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதையை பொருத்தவரையில்,
முதல் பாகத்தில் செம்மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்த அல்லு அர்ஜுன் தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாம் பாகத்தில் உலக அளவில் சிண்டிகேட் தலைவராக உருவெடுத்து தனக்கான பெரிய கேங்க் ஒன்றை உருவாக்கி, புஷ்பா என்கிற அல்லு அர்ஜுன் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் மீது பெரிய அளவில் பகை கொண்டிருக்கும் வனத்துறை அதிகாரியான பகத் பாசில் எப்படியாவது அல்லு அர்ஜுனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு அல்லு அர்ஜுன் தனது பண பலத்தால் சரியான பதிலடி கொடுக்கிறார். வனத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளை சார்ந்தவர்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தனது சொல்லுக்கு அடி பணிய வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன் மனைவி ராஷ்மிகா ஆந்திர மாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால் அந்த ஆந்திர முதல்வர் அல்லு அர்ஜுன் மற்றும் மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க மறுத்து விடுகிறார். காரணம் புஷ்பா என்ற அல்லு அர்ஜுன் ஒரு பெரிய செம்மர கடத்தல்காரன் என்பதால் அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க மறுத்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த அல்லு அர்ஜுன் தன் மனைவி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னுடன் புகைப்படம் எடுப்பவரை ஆந்திர மாநில முதல்வராக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் பணத்திற்காக தனது செம்மரக் கடத்தல் வியாபாரத்தை சர்வதேச அளவில், தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்அல்லு அர்ஜுன்.
இந்த நிலையில் 2000 டன் செம்மரக்கட்டைகளை ஜப்பானுக்கு அனுப்ப ஒப்புக்கொள்ளும் அல்லு அர்ஜுனை எப்படியாவது கைது செய்து தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் வனத்துறை அதிகாரி பகத் பாசில். ஆனால் 2000 டன் செம்மரக்கடலை தடுக்க பல விதத்தில் பகத் பாசில் முயன்றும் அல்லு அர்ஜுனின் கடத்தலை தடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் வேறொரு கோஷ்டி ஒன்று அல்லு அர்ஜுனன் அண்ணன் மகளை கடத்துகிறது. இதனால் வெகுண்டு எழுந்த அல்லு அர்ஜுன் தனது அண்ணன் மகளை காப்பாற்றினாரா? ஆந்திராவில் வேறொரு முதல்வரை உருவாக்கினாரா?இல்லையா? என்பதுதான் ‘புஷ்பா-2 தி ரூல்’ படத்தின் மீதி கதை.
கதாநாயகன் புஷ்பா என்ற புஷ்பராஜாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த அதே ஸ்டைலில், செம மாஸாக புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் போட்டிருக்கும் பெண் வேடம், அதைச் சார்ந்து இடம்பெறும் நடனக் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் மிரட்டி இருக்கிறார். அதிரடி காட்சிகளில், அற்புதமான நடிப்பு, ஒற்றைத் தோளைத் தூக்கியபடியே அவர் நடந்து வரும் அவரது உடல் மொழி, ‘அடங்காதவன்டா’ என்று தாடியை தடவிக் கொண்டே அனைவரையும் மிரட்டும் காட்சிகளில் படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். ரொமான்ஸ், எமோஷன், ஆக்ரோஷம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்து கவர்ந்து இழுக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுக்கு மனைவியான பிறகு பெரியதாக வேலை இருக்காது என்று எண்ணுகின்ற நேரத்தில், அழகுப்பதுமையாக வந்து பாடல்களில் கவர்ச்சி காட்டுவதோடு நில்லாமல் கணவனுக்காக அவர் குடும்பத்தாரிடம் வெடிக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் எனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்து, நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
பகத்பாசில். தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு கதாநாயகனைப் பழி வாங்க அவர் செய்யும் காரியங்கள், ஆர்ப்பரிப்பான நடிப்பும் அசத்தல் என்றே சொல்ல வேண்டும். தோல்விகளையே சந்திக்கும் கதாபாத்திரம் என்றாலும் தன் நடிப்பால் எல்லா இடங்களிலும் வரவேற்பைப் பெறுகிறார் பகத்பாசில்.
ஸ்ரீ லீலாவுடன் அல்லு அர்ஜுன் இஸ்க்கு இஸ்க்கு பாடலுக்கு போட்டிருக்கும் ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.
முதலமைச்சராக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன்,அடுத்த முதலமைச்சராகும் ராவ் ரமேஷ், செம்மரக்கடத்தல் கூட்டத்தின் முன்னாள் தலைவர் சுனில் அவர் மனைவி அனுஷ்யா,ஒன்றிய அமைச்சராக வரும் ஜெகபதிபாபு ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.சாம்,சி.எஸ் பின்னணிஇசையில் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக் உழைப்பில் எல்லாக் காட்சிகளுமே சிறப்பாக மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கின்றன.
இயக்குனர் சுகுமார் ஒரு எளிமையான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு, அனைவரும் ஈர்க்கக்கூடிய திரைக்கதையை உருவாக்கி, அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை கவனமாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தி, படம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுவது தெரியாமல் ‘புஷ்பா 2’ படத்தை இயக்கி இருக்கிறார். அல்லு அர்ஜுனை மாஸாகவும், ஸ்டைலாகவும் காட்டுவது மட்டும் அல்லாமல், மனைவி தாசனாகவும், குடும்பத்திற்காக எதையும் செய்பவராகவும் காட்டுவது உள்ளிட்ட பல விசயங்கள் படத்தின் பலமாக பயணிப்பதோடு, அல்லு அர்ஜுன் என்ற நடிகரை மொழி கடந்து அனைவரையும் ரசிக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில், ‘புஷ்பா 2 : தி ரூல்’ ஆக்ஷன் அதிரடி நிறைந்த படம் என்பதால் அனைவரும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN>