இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்ல வரும் ஆன்மீக திரைப்படம் “பிரஜாபதி” – டிரெய்லர் வெளியீட்டு விழா !!
CHENNAI:
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பேசியதாவது..,
“இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரூபர்ட் ஐயா அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இது காலத்தின் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி என்று நான் கருதுகிறேன்.
இன்றைய சமூகத்தில் நற்செய்தியை அறிவிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. அந்த நோக்கத்திற்காக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயமாக மக்களின் மனதைத் தொடும் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். டிரைலரை மிகவும் அருமையாகவும், தரமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இங்கு ‘Tested, Trusted’ என்று கூறினார்கள். ஆனால் நான் சொல்வது, ‘Tested, Trusted and Tasted.’ வேதாகமத்தில், ‘கர்த்தர் நல்லவர் என்றும் ருசித்துப் பாருங்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அனுபவம் இருந்ததால்தான் இன்று இதை தைரியமாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தை கொடுக்கிறார். ஆனால் எதிர்காலம் குறித்த பயம், குடும்ப சூழ்நிலை அல்லது தைரியக் குறைவு காரணமாக பலர் அந்த வரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கி விடுகிறார்கள்.
ரூபர்ட் ஐயா கடந்த 25 ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வும், தியாக மனப்பான்மையும் இந்த திரைப்படத்திலும் தெரிகிறது. இறைவனால் ஆகாத காரியம் எதுவுமில்லை. பலருடைய வாழ்க்கையில் அதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இந்த முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ‘நீங்கள் விசுவாசித்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பீர்கள்’ என்று வேதாகமம் கூறுகிறது. விசுவாசத்தோடு தொடங்கப்பட்ட எந்த முயற்சியும் தோல்வியடையாது. வெற்றியை அளிக்கும் இறைவன் நம்மோடு இருக்கிறார். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
இயக்குநர் ரூபர்ட் ரகுநாதன் பேசியதாவது..,
“எங்களுடைய குழுவின் சார்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ஐயாவை மனதார வரவேற்கிறேன். தாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. ஆண்டவர் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டிய நோக்கம் என்னவென்றால், கடந்த 25 ஆண்டுகளாக ‘பிரஜாபதி’ என்ற இந்த கதையை நாடகமாக மேடையேற்றி வந்திருக்கிறோம். 2013-ஆம் ஆண்டு ஆண்டவர் என்னிடம் பேசி, இந்த நாடகத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த நேரத்தில் நாடகக் கலை மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருந்ததால் எனக்கு ஆரம்பத்தில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இந்த பணியைத் தொடங்கினேன்.
முதலில் அரை மணி நேர நாடகமாக ஆரம்பித்தது. பின்னர் ஆண்டவரின் கிருபையால் அது வளர்ந்து மூன்று மணி நேர மேடை நாடகமாக மாறியது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இந்த நாடகத்தை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தி வந்திருக்கிறோம். இந்த நாடகத்தின் மூலம் ஆண்டவரின் நற்செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் சமீபத்தில் ஆண்டவர் மீண்டும் என்னிடம் பேசி, இதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். ஏனென்றால், சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். ஆகவே, திரைப்படம்தான் இந்தத் தரிசனத்தை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி என்பதை ஆண்டவர் எனக்கு உணர்த்தினார்.
அதனால், அந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். எங்களிடம் பெரிய பொருளாதாரப் பின்னணி எதுவும் இல்லை. இந்த முயற்சி முழுவதும் விசுவாசத்தின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. இந்த டிரைலரை உருவாக்குவதற்கே சுமார் ₹25 லட்சம் செலவானது. ஆனால் அந்த தேவைகள் அனைத்தையும் ஆண்டவரே சந்தித்தார். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்தப் பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட ஆளுமை செழியன் அவர்கள் எதிர்பாராத விதமாக எங்களை விட்டு பிரிந்துவிட்டார். இருந்தாலும், இந்த திரைப்படம் முழுமையடையும் வரை அவர் மேலிருந்து எங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கர்த்தர் தொடர்ந்து பெரிய காரியங்களைச் செய்வார். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.” “பிரஜாபதி” என்பது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல. மனிதகுலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆன்மீகப் படைப்பாக இது உருவாகி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, “பிரஜாபதி” நாடகம் இந்தியா முழுவதும் அரங்கேறி, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்துள்ளது. அந்த ஆன்மீகப் பயணம் தற்போது உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக புதிய பரிணாமம் பெற்று, உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பே “பிரஜாபதி” நாடகத்தை இயற்றி, இயக்கி, அரங்கேற்றி வந்த முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன், தற்போது அதையே திரைப்படமாக இயக்கி வருகிறார்.
“பிரஜாபதி” திரைப்படம் முழுமையாக மக்கள் பங்களிப்பில் (Crowdfunding) உருவாகும் இறைப்பணி என்றும், “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு” என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இந்த திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழில்முறை நடிகர்கள் அல்ல, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “பிரஜாபதி” நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் கலைஞர்களே இதில் நடித்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், திரைப்படத்தின் முயற்சியையும் அதன் ஆன்மீக நோக்கத்தையும் பாராட்டி, “பிரஜாபதி” திரைப்படம் உலகம் முழுவதும் மக்களின் இதயங்களைத் தொடும் படைப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.