சென்னை:
கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா,மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன் ,யோகி பாபு, நிழல்கள் ரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “சர்தார்-2”. இப்படத்திற்கு கதை எழுதி பி. எஸ் .மித்ரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
‘சர்தார்’ முதல் பாகத்தில் கார்த்தி, தண்ணீருக்காக இந்தியாவில் நாசகார வேலைகள் செய்யும் வில்லனை வீழ்த்தும் விதத்தில் கதையில் நடித்திருந்தார். ஆனால் தற்போது.இந்தக் கதை வேறு விதமான முறையில் பிரம்மாண்டமான உளவுத்துறை உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.
1981-ஆம் ஆண்டில், ஜப்பான் நாட்டின் கொடூரமான எதிரிப் படைகளை அழிப்பதற்காக ஜப்பான் உருவாக்கி இருந்த ஒரு நாசக்கார ரசாயன குண்டு தற்செயலாக இந்தியாவுக்குள் கர்நாடகா, தமிழக எல்லைக்கிராமத்தில் விழுகிறது. அதனால் அங்குள்ள நூற்றுக் கணக்கான மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். அந்த நோயிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு சொட்டு மருந்து கொண்டு வர திட்டமிடப்படுகிறது இந்த புதிரான நோயினால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் பரிதாப நிலையைக் கண்டு கொதித்தெழும் ரா அமைப்பின் மூன்று முகவர்கள்; ஜப்பான் மொழி தெரிந்த ரகசிய ஏஜெண்டிடம் அணுகி விசாரித்தபோது, கதிரியக்கத் தடுப்பு மாற்று மருந்து ஜப்பானில் இருப்பதாகவும், அதை இந்தியா வழியாகக் கடத்தி பழங்குடி இன மக்களுக்கு கொடுத்தால் அந்த நோய் குணமடைந்து விடும் என்பதால், கார்த்தி தன்னுடன் அச்யூத்குமார், ஆஷிகா ரங்கநாத்துடன் இணைந்து ஜப்பான் செல்கிறார். அங்கிருந்து அந்த மருந்து இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் .
இந்த சமயத்தில் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்த கார்த்தியின் தந்தையான சர்தார்(கார்த்தி) வெளியே வருகிறார். இந்தப் பிரச்சினையில் அவரும் தலையிட்டு நமது நாட்டின் மக்களை காப்பாற்ற சர்தார்(கார்த்தி) தன் மகன் கார்த்தியை சந்திக்கிறார். இதே சமயத்தில் 1981-ல் புதைக்கப்பட்ட அதே உயிரியல் ஆயுதத்தை மீண்டும் கண்டுபிடித்து எடுத்து, இந்திய நாட்டின் மீதும் சர்வதேச அளவிலும் பெரும் பேரழிவை உருவாக்க ஒரு சர்வதேசக் கார்ப்பரேட் நெட்வொர்க் தலைவனாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுவது தெரியவருகிறது. இந்த சூழலில் நமது நாட்டைக் காக்கும் மிகப்பெரிய மிஷனில் தந்தையும் மகனும் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டு உயிரியல் ஆயுதத்தை கண்டுபிடிக்கும்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஆயுதத்தை தனது அடியாட்களுடன் சென்று பறிக்க முயலும்போது தந்தை-மகன் இருவரிடமும் பயங்கர மோதல் ஏற்படுகிறது, இறுதியில் அந்த உயிரியல் ஆயுதத்திலிருந்து விஷ வாயு பரவாமல் தடுத்து அதனை செயலிழக்கச் செய்து, நாட்டு மக்களின் உயிரை தந்தையும், மகனும் காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதுதான் “சர்தார்-2” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் தந்தையாகவும், மகனாகவும் நடித்திருக்கும் கார்த்தி, தனது மாறுபட்ட தோற்றம்,நடிப்பு ஆகியனவற்றில் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். இளம் வயது கார்த்தியின் வேகம், பதற்றம், துடிப்பு என இளம் வயதுக்கான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவர் சர்தாராக மாறியதும் முற்றிலும் வேறொரு மனிதராக தெரிகிறார். கார்த்தியின் வழக்கமான சிரித்த முகபாவனைகள் இதில் வெளிப்படவில்லை.சண்டைக் காட்சிகளில் நகைச்சுவைக்கு இடமின்றி தீவிரமாகப் புகுந்து விளையாடி இருக்கிறார் எனவே அந்த கதாபாத்திரத்தில் தனித்து செயல்பட்டு படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது.
எஸ்.ஜே. சூர்யா: சர்வதேசக் கார்ப்பரேட் நெட்வொர்க்கின் தலைவனாக, கூர்மையான புத்திசாலித்தனமும் அளவற்ற அதிகார பலமும் கொண்ட கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்து அனைவரையும் அசர வைக்கிறார். அவர் வசனம் பேசும்போது கொடுக்கும் முகபாவனைகள், எதிரில் இருப்பவரை பார்க்கும் பார்வை என சின்ன விஷயங்களிலும் தனது முத்திரையை பதிக்கிறார்.
இப்படத்தில் மாளவிகா மோகனனுக்கு வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் கதாபாத்திரமாக இல்லாமல், கதையோடு பயணிக்கக்கூடிய அளவில் இருப்பதால் அதை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆஷிகா ரங்கநாத் படத்தின் கனமான சூழலுக்கு இடையே ஒரு சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் தனது முக அசைவின் மூலம் அவரது கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார்.
ரஜிஷா விஜயனுக்கு குறைவான காட்சிகள் என்றாலும், கிடைத்த காட்சிகளில் தனது அனுபவத்தை காட்டுகிறார். யோகி பாபுவையும், நிழல்கள் ரவியையும் ரா உளவுத் துறை ஏஜெண்டுகளாக காட்டியிருப்பது நம்ப முடியாதபடி உள்ளது.
மற்றும் முனீஸ் காந்த், நாசர், ஜீன் பால் லால், ஆஷிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, அச்சீ த் குமார், அவிநாசி, பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் என்று பெரிய நடிக பட்டாளமே இப்படத்தில் இருந்தாலும் அனைவரும் குறைந்த காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்கள்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஸ்பை மிஷன் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் இது நூறாவது படம் என்பதால் அவர் தனது அசுரத்தனமான இசைப்பணி மற்றும் பின்னணி இசையை வழக்கம் போல் பயன்படுத்தும் இசைக் கருவிகளை தவிர்த்து அவர் புதிய பாணியில் இசைக்கருவிகளை ஒலிக்கவிட்டு அனைவரையும் கவர்கிறார்.
‘இரும்புத்திரை’, ‘சர்தார்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ். மித்ரன் மீண்டும் ஒரு விரிவான அறிவியல் சார்ந்த கதையாகவும்,சர்வதேசக் கார்ப்பரேட் ஆதிக்கம் மற்றும் தாய்நாட்டின் பாதுகாப்பு சார்ந்த அரசியல், நோய் எதிர்ப்பு போன்றவைகளை புகுத்தி தமிழ் சினிமாவில் அதிகம் முயற்சி செய்யப்படாத உளவுத்துறை ஆக்ஷன் ஜானரில் ஒரு உன்னதனமான படத்தைக் கொடுத்து இருக்கிறார். இதன் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் நீண்ட வசனங்கள் இருப்பதால் சில காட்சிகளில் வசனங்களை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் ‘சர்தார் 2’ படத்தை ஆக்ஷன் பிரியர்கள் ரசிக்கலாம்.
ரேட்டியங் 3/5.
RADHAPANDIAN.